Wednesday, December 14, 2011

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா






சிங்கள இலக்கியத்தினூடாக நன்கறியப்பட்ட சிட்னி மாகஸ் டயஸ் என்பவரின் 'முல்லைத்தீவ் ஸீயா' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே முல்லைத்தீவு தாத்தா என்ற புத்திளைஞர் நாவலாகும். யுத்த காலத்தில் நிகழ்ந்த மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகளை உள்ளடக்கி இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிரேஷ்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார். தோதன்ன வெளியீடாக 119 பக்கங்களில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.



திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயப்பட்ட ஓர் எழுத்தாளர். அண்மையில் அவரது மணிவிழா நிகழ்வும் இடம்பெற்றது. சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர் தென்னிலங்கையின் எழுத்தாளர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றை தந்துள்ளதுடன் அவரது ஆளுமையின் வெளிப்பாடாக மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுலகுக்கு அளித்து வருகின்றார். அதனூடாக சகோதர இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறார்.

'இலக்கியத்திற்கூடாக சமாதானப் பாலம் அமைக்க எடுத்ததொரு விளைவே முல்லைத்தீவு தாத்தாவாகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்கமில்லை. விளைவை மட்டுமன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறையான பங்களிப்பைச் செய்ய முடியும். முல்லைத்தீவு தாத்தாவினூடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் சிட்னி மாகஸ் டயஸ் அவர்கள்.

இஸிது, ஹிருனி என்ற சிறுவர்கள் பாடசாலைவிட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும்போது 'மிஸ்டர் சுமனசேகர' என்றவாறு மறைந்த அவர்களது தாத்தாவின் பெயரை அழைத்தபடி முதியவரொருவர் வருகிறார். இஸிது உடனே பாட்டியிடம் சென்று கூற, அவர் வந்து பார்த்தபோது அது பரராஜசிங்கம் என்று அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார். காரணம் பரராஜசிங்கம் என்பவர் அவரது கணவருடன் ரெயில்வே திணைக்களத்தில் ஒன்றாக பணியாற்றியவர். மேலும் இனக் கலவரத்தின்போது பரராஜசிங்கம் குடும்பத்தினரை காப்பாற்றியவர் சுமனசேகர ஆவார். இஸிது, ஹிருனி விழித்தபடி பார்த்திருக்க பாட்டி அவரை அறிமுகம் செய்கிறார். அப்படி அறிமுகம் செய்யப்படுபவர் தான் நாவலின் கதாநாயகனான முல்லைத்தீவு தாத்தா.

யுத்தத்தில் சுமனசேகரவின் மகன் இறந்துவிட பரராஜசிங்கத்தின் மகனும் காணாமல் போய்விடுகிறார். இவ்விருவரையும் நினைவு கூர்ந்து முதியவர்கள் படும் வேதனை வாசகர்களுக்கும் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது. காரணம் உயிருக்குப் போராடிய காலத்தில் முல்லைத்தீவு தாத்தா அவரது மற்ற பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது தனிமரமாக இலங்கையில் வசிக்கிறார். நோயினாலும், முதுமையினாலும் அவர் உடல் தள்ளாடுகிறது. சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் தமது வீட்டுக்கு வந்துள்ள தாத்தாவை இஸிதுவின் அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் அடையாளம் கண்டு விசாரித்து அன்பாக உபசரிக்கிறார். பனங்கருப்பட்டி, பாணி, ஒடியல் போன்ற உணவு வகைகள் பற்றி இவ்விடத்தில் கூறப்பட்டிருப்பதினூடாக தமிழ் மக்களின் வாழ்வியலையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

மேலும் இனங்களுக்கிடையிலேயான யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை முல்லைத்தீவு தாத்தா சிறுவர்களுக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்குவதனால் இனி ஒரு காலமும் யுத்த பூமியொன்று உருவாகிவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். பின்வரும் விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்ப‌டவில்லை. இதன் காரணமாக தமிழ் தலைவர்கள் வெவ்வேறு உரிமைகளைக் கேட்க முனைந்தனர். தமிழ் மக்களையும் அவர்கள் சமமான பிரஜைகளாக காண விரும்பினர். தனிநாடு பற்றிய கருத்து அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தும் அவர்களுக்கு வன்முறையே பரிசாகக் கிடைத்தது. இதனால் எங்கள் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகி இருந்தனர். இருந்தும் இதற்கு மத்தியில் எங்களைப் போன்ற தமிழ் மக்கள் உங்களது தாத்தா, பாட்டி பேன்ற நல்ல சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம்...

1978ல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற சங்கீத கச்சேரியின் போதும், 1983ல் நடைபெற்ற அதே போன்றதொரு நிகழ்வின் போதும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெற்றன. அது பரவி பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வந்தன. இந்த மாதம் தான் கறுப்பு ஜூலை எனப்படுகிறது என்ற விடயமும் இவ்வாறான உரையாடல்களின் மூலமாக அறியக்கிடைக்கிறது.

மேலதிக தகல்களை அறியும் வகையில் கீழுள்ள வரிகள் அமைந்திருக்கின்றன.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற சிலர் எங்கள் இதயம் போன்ற பொது நூல் நிலைய‌த்தையும் முற்றுமுழுதாக எரித்து சாம்பலாக்கினார்கள். இயக்கங்களாக ஒன்று சேர்ந்திருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது இதன் பின்னர்தான். இவ்வளவு காலமாக அடி உதைபட்டது போதுமென்று சிந்திக்கத் தலைப்பட்டனர். சிறுபான்மையினர் என்று தமிழ் மக்களை இரண்டாம் பட்சமாக நடாத்தியதை அவர்கள விரும்பவில்லை. அத்தோடு யுத்தம் ஆரம்பமாகியது. தமிழ் மக்க‌ளுக்கு தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியை தமிழ் ஈழம் என்ற நாடாக அமைக்க விரும்பினார்கள்.

என்றவாறு கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த கோரங்களை தாத்தா கூறுகிறார். மேலும் எதிர்காலத்தில் எவரும் பிரிவினைப்பட்டு விடாமல் அழகிய இலங்கை உருவாக வேண்டும் என்று எண்ணி வருந்துகிறார் முல்லைத்தீவு தாத்தா. ஓரிரு நாள் கழித்து சுமனசேகரவின் மூத்த மகனும் தாத்தாவைப் பார்க்க குடும்பம் சகிதம் வந்து நலம் விசாரிக்கையில் அவரது மகன், மகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.

பரராஜசிங்கத்திடமிருந்து தொலைபேசி இலக்கத்தை வாங்கி எஸ்.எம்.எஸ் பண்ணி ஸ்கைப் முகவரியைப் பெறும் சுமனசேகரவின் மகன் தமது பால்ய கால வாழ்க்கையில் மனம் லயிக்கிறார்.

கொழும்பிலிருந்து வந்த சுமனசேகரவின் மூத்த மகன், பரராஜசிங்கம் அங்கிளுக்காக தயிர் கொண்டு வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் தாத்தாவைப்போல சோற்றில் தயிறு, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுகிறார்கள். தாத்தாவுக்காக அந்த சிங்கள இனச் சகோதரர்கள் சைவ உணவை சமைத்தாக கூறப்பட்டிருப்பதானது ஒற்றுமையை இயம்பி நிற்கிறது. இவ்வாறான சம்பிர‌தாயங்களை அனைத்து தரப்பினரும் பேணுவதனால் நாட்டில் சந்தோஷம் பொங்கி சமாதானம் நிகழும். இனிவரும் காலங்கள் இலங்கை தேசத்தில் நறுமணப் பூக்களை மலரச் செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த இலங்கையரின் கனவும், ஆசையுமாகும்.

தோதன்ன வெளியீட்டகத்தினால் பல சிங்கள நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கபட்டிருக்கின்றது. இது சகோதர இனத்துக்கு ஒரு பா(ப)லமாக அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். திக்வல்லை கமால் அவர்களின் அயராத உழைப்பின் வடிவமாக திகழும் இந்த நாவல் பாலித ஜனரஞ்சனவின் தத்ரூபமான அட்டைப் படத்துடனும், சித்திரங்களுடனும் சிறப்பு பெறுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா
மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - தோதன்ன பதிப்பகம்
தொலைபேசி - 032 2263446
விலை - 200 ரூபாய்

Tuesday, October 18, 2011

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.

பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.

இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.

வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.

அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா.

அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.

அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.

காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.

அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?

தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.

மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)
ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்
முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.
தொலைபேசி - 035 2246494
விலை - 200 ரூபாய்

37ம் நம்பர் வீடு - நாவல்

37ம் நம்பர் வீடு (நாவல்) பற்றிய இரசனைக் குறிப்பு 

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.

இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன.



கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.

அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள்.

வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.

அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து 'மாமா ருசியா இருக்குது' என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் 'ஏன்ட தங்கமே ஸீனத்' என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.

இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.

பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.

ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - 37ம் நம்பர் வீடு
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.
தொலைNசி– 011 5020936
விலை - 250/=

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்... என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.



சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.

தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.

எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.

பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.

1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.

திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர். இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.

எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.

தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!

நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள
ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
விலை - 200 ரூபாய்

Wednesday, October 12, 2011

முகங்கள் தொகுப்பு

முகங்கள் தொகுப்புக்கான (சிறுகதைகள்) இரசனைக் குறிப்பு

புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.



தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.

ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம்,
மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம்,
இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.

இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது.

இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. ... இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.

முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பாரத்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக்கொண்டது இந்த சிறுகதை.

அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா. மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.

ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.

"என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி..''

பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாhளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ "அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" எனகிறாள்.

"அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.

அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள்.

மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறி வேண்டி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கியநாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.

லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. "யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம்" என்று சனம் கதைக்கிறது என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி பிணமாக குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் து(ம)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.

இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.

இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முகங்கள் (சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் - வீ. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கிய பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com

Friday, September 16, 2011

மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு

மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு

ஜீவா என்ற தனிமனிதனின் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் இன்று சஞ்சிகை வரிசையில் மல்லிகை சஞ்சிகையே அதிக காலம் வெளிவருவது நாமெல்லோரும் அறிந்த விடயம். எழுத்துத் துறையில் கால்பதித்த அனைவரும் மல்லிகையைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. மல்லிகைப் பந்தல் வெளியீடு மூலமாக பல காத்திரமான புத்தகங்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் ஜூலை மாத இதழ் என் கரம் கிட்டியது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. அட்டைப் படத்தை அலங்கரித்திருக்கின்றார் தனக்கென்றொரு தனி வழி அமைத்திருக்கும் திரு. தம்பு சிவா அவர்கள்.




ஆசிரியர் தலையங்கமும் சமீபத்தில் தனது 85 வயதை அடைந்திருக்கும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் வெளிப்பாடுகளாய்ப் பிறந்துள்ளது. ஷமுதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நமது மண்ணில் படைப்பிலக்கியத்திற்கு சாஹித்திய மண்டல பரிசைப் பெற்றுக்கொண்டவன் என்ற பெறுமதிமிக்க இலக்கிய மரியாதை ஏற்கனவே எனக்கு உண்டு. அத்துடன் இந்த மண்ணில் இந்தப் பாரிய யுத்த நெருக்கடிக்குள்ளும் அரை நூற்றாண்டு காலமாக ஓர் இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளிக்கொணர்ந்தவன் என்ற வரலாற்றுப் பொறுப்பும் எனக்கு உண்டு எனத்தொடர்ந்து 46 ஆண்டுகளாக இச் சஞ்சிகை நடாத்திவரும் டொமினிக் ஜீவா அவர்கள், மல்லிகை எனும் இலக்கியச்செடி வளர்வதற்கு என்னென்ன பாடுபட்டார் என்ற அம்சங்களை மேற்கூறியவாறு தொட்டுக்காட்டியிருக்கிறார்.

அட்டைப்பட நாயகரைப்பற்றி கே.ஆர். டேவிட் எழுதியிருக்கின்றார். கடந்த 40 வருட காலமாக இலக்கியப் பணியாற்றிவரும் திரு. தம்புசிவா அவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாகக்கொண்டவர். தம்பு சிவசுப்பிரமணியம், இணுவிலி மாறன், இணுவை வசந்தன், சிவசிவா தம்பு சிவா ஆகிய புனைப்பெயர்களில் தொடர்ச்சியாக இன்றுவரை சகல முன்னோடிப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். 1967ம் ஆண்டு இறைவரித் திணைக்கள்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்று 1985 இல் ஓய்வு பெற்றவர். பின்பு 1987 இல் மாலைதீவில் அரச மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றியுள்ளார். பின்பு வடக்கு-கிழக்கு மாகாண சபையின் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.

கற்பகம் சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியீடு செய்ததன் மூலம் தொகுப்பாளனாகவும், இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான சொந்தங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறுகதை எழுத்தாளனாகவும், இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுதி மூலம் சிறந்த கட்டுரையாளனாகவும், தூரத்து கோடை இடிகள், அப்பா ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளியீடு செய்ததன் மூலம் சிறந்த வெளியீட்டாளனாகவும், அரும்பு, கற்பகம், தமிழ்த் தென்றல், ஓலை போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் சிறந்த சஞ்சிகையாளனாகவும் தம்பு சிவா அவர்கள் இனங்காணப்படுகின்றார்.

இலங்கையின் அனைத்து முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தனது படைப்புக்களைத் தவழவிடும் திரு. தம்பு சிவா அவர்கள் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி அவர்களால் சொல்லின்செல்வர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தம்பு சிவா அவர்கள் மாக்ஸிம் கோக்கியின் நூல்களையே அதிகம் விரும்புபவராக இருக்கின்றார். அநேகமான நாவல்களில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பில் கற்பனை வாதம் மேலோங்கியிருப்பாகவும், மாக்ஸிம் கோக்கியின் நாவலில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளும், இயல்பான முயற்சிகளும் உள்ளடங்கியுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். தம்பு சிவா அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு தாரக மந்திரம் 'ஒரு மனிதருடைய பெயருக்குப் பின்னால் குறிப்பிடப்படுகின்ற பட்டங்களைவிட, அந்த மனிதனின் பெயருக்கு முன்னால் மனிதம் என்ற பட்டம் அமைந்திருக்க வேண்டும். அவர்களையே நான் நேசிக்கிறேன்' என்பதாகும். இளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியும், சொல்லாலும் செயலாலும் ஒன்றித்தும் வாழும் இலக்கியவாதி திரு. தம்புசிவா அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.

எலி என்ற மொழிபெயர்ப்புக் கதையை திக்குவல்லை கமாலும், மழை என்ற சிறுகதையை சமரபாகு சி. உதயகுமாரும் எழுதியிருக்கின்றார். சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற கவிதை நூலுக்கான அவதானக்குறிப்பை அன்புடீன் எழுதியிருக்கிறார்.

பார்வதி என்ற சிறுகதையை எழுதியிருக்கும் ஆனந்தி, ஒரு கூலிவேலை செய்யும் பெண் பற்றி மனப்பதிவை சிறுகதையூடாக சிதத்ரித்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பாறி என்று அழைக்கப்படும் இந்த கூலி வேலை செய்கிற பெண்ணின் உண்மையான பெயர் என்ன? பார்வதியா என்று மலர் என்ற பெண் கேட்டுநிற்கும் கேள்வி மனதில் கனக்கிறது. பக்கெட் மாவிலும், மிக்ஸி இயந்திரத்தால் அரைக்கப்படும் மாவால், மாவிடித்து உழைக்கும் பாறி போன்ற பலரின் ஜீவனோபாயம் இல்லாமலாகி இருக்கிறது. மலருக்கு பாறியயைப் பற்றி அதிக கவலை. கதையினிடையே மலரின் மச்சாளான சீதா வந்து யோசித்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். என்ன காரணம் என மலர் கேட்டதற்கு ஊரில் தற்போது மாவிடிக்கவும் யாருமில்லை என்று விளக்கமளிக்கிறாள். பாறி எங்கே என்ற மலரின் அடுத்த கேள்விக்கு சீதா சொல்லும் பதில் சரிதான். அவள் இப்ப புதுப் பணக்காரி. அவளுக்கென்ன? பிள்ளை சுவிஸிலை. இனி நாங்கள்தான் அவளுக்கு மா இடிக்கப் போவணும் என்ற பதிலைக் கேட்டு ஆனந்தியும் மலரின் நல்ல பண்பும் கதையின் இறுதியில் சுட்டிக் காட்டப்படுகின்றது.

உண்மையைச் சொல்லிவிடு என்ற கா. தாரணியின் கவிதை சுவாரஷ்யமாக இருக்கின்றது. பெண் என்ற சொல்லின் மறுவடிவம் சீதனப்பிரச்சனை என்று சொல்லுமளவுக்கு வரதட்சனை கொடுமையாகிவிட்டது. காதலிக்கும்போது தோன்றாத ஜாதியும், மதமும் சீதனம் தர வக்கில்லை எனும்போது மாடி வீட்டுக்கிளிகளிடம் மாட்டுப்பட்டு சிக்கியழிகிறது. தாரணியின் கவிதையிலும் நாசூக்காக சொல்லபட்டிருக்கும் சில வரிகள்..

மூங்கில் ஓரம்
பற்றைகளின் மறைவில்
நாங்கள் சல்லாயித்திருந்த
பொழுதுகளில்
உனக்கு சீதனமாய்த்தர
எங்களிடம் வெள்ளவத்தையில்
சொந்தவீடோ
அதுவாங்க வசதியோ
இல்லையென்பது
உனக்குத் தெரியாதா?

****

உன் சாதகம் இப்போது
வேல் அமுதன்
திருமண சேவையில்
பத்து மில்லியன்
பிரிவுக் கோப்பிலும்
என் பெயர்
ஊராரின்
நடத்தைக்கெட்டவள்
பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?

வி. ஜீவகுமாரன், சி. விமலன், செல்லக்கண்ணு, பிரகலாத ஆனந்த், ஆகியோரின் கட்டுரைகளும், புலோலியூர் வேல் நந்தனின் கவிதையும், வேல் அமுதனின் குறுங்கதையும் மற்றும் மேமன்கவி, யோகேஸ்வரி, முருகபூபதி, வி.ரி. இளங்கோவன், லெனின் மதிவானம் ஆகியோரின் ஆக்கங்களும் மேலும் வழமையான தூண்டில் வாசகர் கடிதங்கள் ஆகியனவும் மல்லிகை இதழை அலங்கரித்துள்ளன.

நூல் - மல்லிகை (சஞ்சிகை)
ஆசிரியர் - டொமினிக் ஜீவா
முகவரி - 201/4 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி - 011 2320721
விலை - 40/=

Thursday, July 28, 2011

முதிசம் - பொன் மொழித் தொகுப்பு

முதிசம் பொன் மொழித் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு

மனிதர்கள் யாவரும் நல்லவர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள். தம்மை யாரும் குறை கூறுவதை விரும்பாத மனிதன், பிறரை குறை சொல்வது, தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று காட்டுவதற்காகவே. அப்படிப்பட்ட மனிதனை நல்வழிப்படுத்த அடிக்கடி அவர்களுக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை இலகுவாக செயல்படுத்தக் கூடியதொரு வழியாக பொன்மொழிகள் காணப்படுகின்றன.

வாசிப்பு அரிதாகிவிட்ட இந்த காலத்தில் கணினிகளே அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இது பாடசாலைகளில் மாத்திரமன்றி அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் பெரியதொரு பிரச்சனையாக இருக்கிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என்ற வாசகம் மாறி கணனியறிவே மனிதனை பூரணமாக்கும் என்ற நிலை வந்துவிட்டது. அதை இனிமேல் யாராலும் மாற்ற முடியும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இன்று இலக்கிய கூட்டங்களிலும் அடிக்கடி சொல்லப்படும் விடயம் இதுதான். இப்படியிருக்க பெரியபெரிய கட்டுரைகளை மனிதர்கள் வாசிப்பார்களா, அப்படிப் பட்டவர்களுக்காய் முத்தான கருத்துக்களை தொகுத்து புத்தமாக்கித் தந்திருக்கின்றார் கலைப்பட்டதாரி ஆசிரியையான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள்.



இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதியையும்இ இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருக்கின்றமை நாமறிந்த விடயமே. முதிசம் என்ற இந்த புத்தகம் 230 பக்கங்களில் இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. 2527 பொன்மொழிகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பலநாட்டவர்கள் கூறிய பல்வேறு பொன்மொழிகளைத் தொகுத்து மக்களின் அறிவு மேம்பாட்டுக்காகவும், அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பொன்மொழிகள் அமைந்திருக்கின்றன. பழமொழிகளும், பொன்மொழிகளும் பல விடயங்களை மக்கள் மனதில் பதித்துவிடும். சிறுகதைகளோ, நாவல்களோ பழமொழிகளையும் உள்ளடக்கியதாக எழுதப்படுவதுண்டு. அதேபோல சில சிந்தனைத்துளிகளும் சேர்க்கப்படுகின்றது. காரணம் பந்தி பந்தியாக வாசித்தும் விளங்க முடியாத சில விடயங்களை ஓரிருவரி மூலம் விளங்கிவிடலாம் என்பதால்தான்.

பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சுகள் போன்றவை. சிலவற்றை பிடித்துக்கொள்கிறோம் பல பறந்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர். மேலும் சாதாரண மக்களும், அறிஞரும் தமது அனுபவத்தில் கண்டவற்றை சாதாரண சொற்களில் கூறிய உண்மைகளே பொன்மொழிகள் என்றுகூறும் இவர் பொன்மொழிகள் சுகம் தரும் எச்சரிக்கைகள் என்கிறார்.

தொடர்ந்து நேரத்தின் பெறுமதியை சில பொன்மொழிகளினூடு விளக்கியிருக்கிறார். நேரம் தங்கம் என்பார்கள். அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அதை என்னென்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை இவ்வாறு கூறுகிறார் ஸக்கியா ஸித்தீக் அவர்கள்

உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது வெற்றியின் ஊற்று. சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் கண். விளையாட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம். படிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில். அன்புகாட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் நன்கொடை. சேவை செய்ய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது வாழ்வின் குறிக்கோள். சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இதயத்தின் பிரகாசம். இறை வணக்கத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஈருலக பாக்கியத்துக்கு வழி என்கிறார்.

நட்பைப் பற்றி பல பொன்மொழிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. நட்பு என்பது நட்சத்திரம் போல வாழ்வுக்கு பிரகாசம் தரவல்லது என்றாலும் தற்காலத்தில் அவ்வாறான உண்மை நட்பை nறுவோர் மிகவும் அரிது. சுயநலத்தக்காக மாத்திரமே தொடுக்கப்படுகின்ற நட்பின் கைகள் சில காலங்களிலேயே வலுவிழந்துபோவது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் பார்த்து பழகும் நட்பு குணம் பார்த்து பழகாது. குணம் பார்த்து பழகும் நட்பு பணமின்றேல் நிலைக்காது. இதுதான் பெரும்பாலும் உண்மை. சிறு தவறுகள் கூட நட்புக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். களங்கம் ஏற்பட்ட நட்பு காலம் முழுவதும் கவலையைத் தரும் என்கிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் துயரத்தை பாதியாக்குவார்கள்.

இன்று தற்கொலை என்பது சர்வசாதாரணமாக போய்விட்டது. முன்பெல்லாம் கொலை தற்கொலை என்ற வசனங்களைக் கேட்டாலே அடிவயிறு கலங்கும். இன்று அவையெல்லாம் அடிக்கடி கேட்டும், வாசித்தும் பழகிவிட்ட சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்கொலைகளுக்கான காரணத்தை விசாரித்துப் பார்த்தால் அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். ஏனெனில் காதலில் தோல்வி, பரீட்சையில் தோல்வி, அம்மா அடித்தார்கள், அப்பா ஏசினார் என்ற அற்ப காரணங்களுக்காக இவை அன்றாடம் நிகழ்கின்றன. அண்மையில் மலையகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவிகளின் தற்கொலை எத்தனைப் பேரின் மனசை உலுக்கியது. இவ்வாறானவர்களுக்கு கட்டாயம் முதிசம் என்ற புத்தகத்தை வாசிக்கக் கொடுக்க வேண்டும். அதிலுள்ள சில பொன்மொழிகள்..

'தோல்வி என்றால் எதையும் சாதிக்கவில்லை என்பது பொருளல்ல. எதையோ
கற்றுக்கொண்டோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.'

'தோல்வி என்றால் தோற்றவர் என்று பொருளல்ல. இன்னும் வெற்றி பெறவில்லை
என்றே பொருளாகும்.'

தவறுகளை செய்தவர்கள், தான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று கூறி தப்பித்துவிடுவார்கள். அதை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் ஸக்கியா.

வாழ்க்கையில் வெற்றிபெற இலட்சியமும், விடா முயற்சியும் முக்கியம். சிலர் இன்னும் எனது இலட்சியம் கைகூடவில்லை என்று வாழ்க்கையை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ முயற்சியே செய்யாமல் வெற்றி பெறவில்லை என்று மூலையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற என்னென்ன வேண்டும்? கீழுள்ளவைதான் என்கிறார் ஆசிரியர்.

'உறுதியான குறிக்கோள், விடாமுயற்சி, தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியா உழைப்பு,
நேர்மையான பாதை. இவை ஒருங்கிணைந்தால் வெற்றி கிட்டாமல் போகாது'

காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கு மத்தியில் அன்பு பெருக்கெடுப்பது உண்மை. எனினும் காதலிக்கும் போதிருந்த மனநிலை, சுதந்திரம் போன்றவை கல்யாணத்துக்கு பின்பு சற்று விலகிக்கொள்வதும் கண்கூடு. அதிலும் பிள்ளைகள் என்று பிறந்துவிட்டால் இன்னும் திண்டாட்டம்தான். மனைவி தன்னைக் கவனிப்பதில்லை என்று கணவன் எண்ணுகிறான். அது தவறு. காரணம் அங்கே குழந்தைக்காகவும் அன்பு பரிமாறப்படுகிறது. குழந்தை அவர்களுக்கு
உறுதுணையாகிறது. சொல்லவந்த விடயம் என்னவென்றால் குடும்ப வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும் என்பதுதான். அதற்கான பழமொழி இதோ

'இல்லறத்தில் இன்பத்தை மாத்திரம் எதிர்பாராதே. உயர்ந்த மலையில் அடர்ந்த
முட்புதர்களும் குளிர்ந்த நீர்ச்சுனைகளும் இருக்கத்தான் செய்யும்.'

உலகத்தில் ஈடு இணை இல்லாத செல்வம் குழந்தை செல்வமே. ஒரு பெண்ணின் பூரணத் தன்மை தாய்மையடைவதிலேயே தங்கியிருக்கிறது என்பார்கள். திருமணமுடித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் படும்பாட்டை எப்படி கூறுவது? யாருக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால் குழந்தைகளை பெற்றெடுப்பது மாத்திரம் பெற்றோரின் வேலையில்லை. அவர்களை பார்போற்றும் மனிதர்களாக்குவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் முன்னிலையின் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பெரியவர்களைவிட குழந்தைகள் எல்லாவற்றையும் நுணுக்கமாக கிரகித்துவிடுவார்கள். வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு குழந்தைகளை நாம் மட்டந்தட்டிப் பேசக்கூடாது. அது அவர்களை தாழ்வுச்சிக்கலுக்குள் அமிழ்த்திவிடும். மாறாக அவர்களை தைரியப்படுத்தி வளர்க்க வேண்டும். அவர்கள் செய்கின்ற சின்ன சின்ன நல்ல விடயங்களுக்கும் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டும். பரிசில்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தையை தூக்கி வைத்திருக்கும்போது கை வலித்தாலும், அதை இறக்கிவிடும்போது மனசு ப்பதுண்டு. 'பெத்தவர்கள்' என்பதற்காய் பெற்றோர் என்று சொல்லப்படுவதில்லை. இறைவனிடமிருந்து செல்வமாக குழந்தையை 'பெற்றவர்கள்' என்பதால்தான் அவர்கள் பெற்றோர் ஆகிறார்கள். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!

நூலின் பெயர் - முதிசம் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 275/=

'ஒரு தென்னை மரம்' - சிறுகதைத் தொகுதி

'ஒரு தென்னை மரம்' சிறுகதைத் தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

இலங்கையின் கிழக்குப் பிரதேசம் பல கவிஞர்களையும், கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டு அவர்களை இலக்கியத்தில் அணி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில் சிறுகதைகள், கவிதைகள் பலவற்றைப் படைத்து எம்மத்தியில் மிகவும் பரிச்சயமான ஓர் எழுத்தாளர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி அவர்கள் "ஒரு தென்னை மரம்" என்ற சிறுகதைத் தொகுதியை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். அவர் ஏற்கனவே வெளியிட்ட குடையும் அடை மழையும் என்ற கவிதைத் தொகுதியின் சொந்தக்காரர்.

ஒரு தென்னை மரம், மனப்பால், புது மனிதனாகியும், பெண்ணாய்ப் பிறப்பதற்கு, நேர்மைக்கு இடமேது, வீடு, முத்திரை தந்த முத்திரை, மத்திய கிழக்கு மாப்பிள்ளை, கிணறு, இவர்களா இப்படி, அதுதான் சட்டம், வேம்பு இனித்தது, காசா லேசா, அதுதான் வீடு, புத்தகங்கள், சரியான தண்டனை, அந்தஸ்து, அது எப்போது என்ற பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கி ஹாஜரா வெளியீடாக 203 பக்கங்களில் இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது.



துப்பாக்கி பிடித்த விமானப்படை அதிகாரியான கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்களது உள்ளத்தில் துடிப்பான கருவூலம் ஊற்றெடுப்பதற்கு அவர் பிறந்த மண்ணின் வாசனையும், வாசிப்பும், தேடலும், முயற்சியுமே காரணங்களாகின்றன. கிண்ணியாவில் பேசுகின்ற தமிழுக்கு தனிச் சுவையுண்டு. பேச்சுத் தமிழ் கொஞ்சும். எவரது பேச்சுக்களிலும் உவமையழகும், அடைமொழிகளும், முதுமொழிகளும் புரளும். கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் ஒரு மரபுக் கவிஞர். அவரது கவிதைகளை நமது அனைத்து தேசியப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. அவரது கவிதைகள் மனதினிலே ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும். அவர் கவிதை சொல்லும் அழகும், கையாளும் திறனும் அபாரமானது என்கிறார் இப்புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியிருக்கின்ற கலாபூஷணம் கேணிப்பித்தன் ச. அருளானந்தம் அவர்கள்.

முதல் கதையான ஒரு தென்னை மரம் சகோதரிகள் இருவருக்கிடையில் ஏற்படும் வாக்குவாதத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. பிரச்சனைக்குக் காரணமாக இருந்தது ஒரே ஒரு தென்னை மரம் தான். சகோதரிகளான கதீஜா, ஹாஜரா என்ற இருவருக்கும் ஒரே காணி இரண்டு பங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டாலும் இடைநடுவே நின்று இருவருக்குள்ளம் இந்தத் தென்னை மரம் பிளவுகளை ஏற்படுத்திப்போகிறது. அக்கா, தங்கை இருவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை சகலன்மார்களிருவருக்கு இடையிலும் ஏற்படக் கூடாதென்பதில் அக்கறை காட்டும் ஹாஜராவின் கணவன் மனிதத் தன்மையுடன் அந்த மரத்தை விட்டுக்கொடுக்குமாறு மனைவி ஹாஜராவுக்கு சொல்லும் புத்திமதி அவர்மேல் மிக்க மரியாதையை ஏற்படுத்துகிறது.

அத்துடன் கதையின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான சாரிபு ஹாஜியார் மகள்மார் இருவரின் இந்தச் சண்டையினால் மனமுடைந்து போவது வாசகர் மனங்களையும் கவலையால் நிரப்பிவிடுகிறது. பகலில் சண்டையை மூட்டி நின்ற தென்னை மரம், இரவு பெய்த அடைமழையில் தன் வேரறுந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அந்தக் காட்சியை வாசிக்கையில் சகோதரிகளின் ஒற்றுமையை நாமேன் கலைக்க வேண்டும் என்று மரம் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதான கற்பனை என்னில் உருவெடுத்தது.

வீடு என்ற கதை சீதனத்தை அடியொட்டி புனையப்பட்டிருக்கின்றது. இளைய மகள் பரீதாவின் கணவன் திடீரென வீட்டை விட்டுப்போகின்றான். அந்த சோகம் பரீதாவின் வதனத்தில் நன்கு புலப்படுகின்றது. தாய் பாத்திமா தனது கணவர் அகமதுவின் சம்பளம் போதாது என்பதால் வீட்டு கஷ்டங்களைப் பற்றி மகளிடம் கூறிவிடுகின்றார். இதுபற்றி பரீதா தன் கணவரிடம் கூற இந்தப்பிரச்சனை விசாலமாகி பரீதாவையும் தன் கணவரையும் பிரித்துவிடுகிறது.

இதற்குரிய மூலகாரணம் சீதனமாய் வீடு கொடுக்கப்படாததே என்பதும் கதையினிடையே தெளிவுபடுத்தப்படுகின்றது. திருமணம் முடிக்கையில் மணப்பெண்ணின் வீட்டார் மணமகனுக்கு கட்டாயம் வீடுகொடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வீட்டை கட்டித்தருகிறேன் என்று சொன்ன அகமது, பரீதாவின் திருமணம் முடிந்து இன்று ஒன்றரை வருடங்களாகியும் அதை செய்யும் முயற்சியிலாவது ஈடுபடாமல் இருப்பதே மகள் - மருமகளின் பிரச்சனையின் காரணமாக திகழ்ந்துவிடுகிறது.

இறுதியின் மருமகனின் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் பரீதாவின் பெற்றோர் இன்னும் கொஞ்ச கால்த்தில் தாம் வீட்டைக் கட்டி முடித்துவிடுவதாக வாக்களிக்கின்றனர். அந்த இடத்தில் எல்லோரையும் போல் அல்லாமல், மனசாட்சியுடன் சம்பந்தி தாரீக் நடந்துகொள்ளும் விதமே இக்கதைக்கு உயிரூட்டுகிறது எனலாம். என்னவெனில் சம்பந்தி அகமதுவிடம் வாக்களிக்கிறார் இவ்வாறு...

"இந்த முறை நான் ஹஜ்ஜூக்குப் போகப்போறன். போறத்துக்கு இடையில சில காரியங்கள் செய்ய வேண்டிக்கிடக்கு. அதிலே முதல் காரியம்தான் இந்தப் பிள்ளைகள் ரெண்டுபேரையும் நான் என்ட வளவுக்குள்ள கட்டிப்போட்டிருக்கிற வீட்டில குடியேத்தப்போறேன். நீ வசதிவந்து வீடு கட்டும் வரைக்கும் அதுகள் என்ட வீட்டிலேயே இனி குடியிருக்கட்டும்". மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற சிறுகதை காலத்துக்கு ஏற்ற கருவாக
இருப்பது பாராட்டத்தக்கது.

இன்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு மோகம். இதில் பரீனா என்ற அபலைப் பெண்ணின் ஆதங்கம் சொல்லப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டில் வருடக்கணக்காக இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆண்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அல்லது மாறிப் போகிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் பற்றி கொஞ்சமாவது விசாரித்து அறியாமல் கை நிறைய பணம் இருக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின்றார்கள.

மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற இந்தக் கதையிலும் அப்படித்தான். கல்யாணமாகி மூன்று மாதங்களின் பின்னர் வெளிநாட்டுக்கு போய்விட்ட கணவன் திரும்பவும் மூன்று வருடங்களின் பின்புதான் நாடு திரும்புகிறான். இதற்கிடையில் குழந்தையை வளர்க்க தனிமையில் அல்லல்படும் பரீனா, வெளிநாடடுக் கணவர்கள் பற்றி பத்திரிகையில் வரும் சேதிகளைப் படித்துப் பதறிப்போகிறாள். ஆக இறுதியில் அவள் பயந்தது போலவே சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. ஆம். குழந்தையை வளர்க்க கஷ்டம் என்றால் தன்னிடம் தந்துவிடும்படியும் இனி பரீனாவுடன் வாழ விருப்பமற்றதால் வெளிநாட்டுக் காதலை கல்யாணத்தில் தொடரப்போவதாகவும் மடல் வருகின்றது. நூலாசிரியர் சொல்வது போல இந்தக் காலத்தில் கல்யாணம் சிப்பிசிரட்டை விளையாட்டாகவே இருக்கிறது.

வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் பெண்களின் சமையல் வேலைகளும் இலகுவாய்த்தான் மாறிப்போயிருக்கின்றன. 'கிரைண்டர், வொஷிங் மெஷின்' என்று ஏகப்பட்டவை சந்தையில் குவிந்து கிடைக்கின்றன. அதே மாதிரியான விவகாரம்தான் கிணறு. இன்றைய காலத்தில் எல்லா வீடுகளையும் குழாய் நீர் ஆக்கிமித்திருக்கிறது. கிணற்றில் நீரள்ளிக் குளிப்பதைவிட 'ஷவரில்' நின்று குளிப்பது எவ்வளவு சுகம் என்று எண்ணுபவர்கள்தான் அதிகமல்லவா? ஆனால் மாதம் முடிய 'பில்' வரும்போதுதான் கஷ்டம் விளங்கும். கிணறு என்ற கதையிலும் நாதர்ஷா மனைவி மக்களின் தூண்டுதலால் 'பைப் லைன்' எடுத்தாலும் வரப்போகும் 'பில்'லைப் பற்றி உள்ளுர பயந்துகொண்டே இருந்தார். புதிய முறை மனைவி முதல் அனைவரும் கிணறு பக்கம் கூட செல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் குழாய் நீரை பயன்படுத்த அந்த மாதம் ஐநூறு ரூபாய் 'பில்' வருகிறது. இதில் சுவாரஷ்யமான வரி ஒன்று இறுதியில் இருக்கிறது. அதாவது 'இப்போது பூனைக்கு பெல் கட்டுவதும் நாதர்ஷாதான். தண்ணீருக்கு பில் கட்டுவதும் நாதர்ஷா தான்'.

இவர்களா இப்படி என்ற சிறுகதையும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டது. யாக்கூப் தம்பதியரின் ஐந்தாவது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். மூத்த புதல்விகள் மூவரும் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவள் நல்ல அழகியாக இருந்தாலும் வீடு இல்லாததால் சீதனம் கொடுக்க வழியின்றி அவளது திருமணம் தள்ளிப்போகிறது. எதிர்பாராத தருணமொன்றில் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய புதல்வன் யாக்கூபின் மகளை திருமணம் முடிக்க ஆசைப்படுகின்றான். அதை எல்லோரும் ஆமோதிக்கிறார்கள். ஆனால் பிரச்சினை வேறு உருவத்தில் வருகிறது. அதாவது மூன்றாவது பெண் தாய்வீட்டுக்கு ஓடி வருகிறாள். தங்கைக்கு அந்தப் பையனை திருமணம் முடித்துக்கொடுக்க வேண்டாம் என்கிறாள்.

அதற்காண காரணத்தை அறிந்த யாக்கூப் தம்பதியருக்கு அந்தச ;செய்தி இடியாய் இறங்குகிறது. அவள் தாயிடம் சொல்லும் காரணம் என்னவென்றால், மூன்றாவது நான்காவது மருமகன்மார் இருவருடைய தங்கைக்கும் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய மகனை கேட்டிருக்கிறார்கள். அவன் மறுத்திருக்கிறான். தமது தங்கையை வேண்டாம் என்றவன் மனைவியின் தங்கைக்கும் தேவையில்லை என்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? சரியாகப் பார்த்தால் அக்காவின் கணவர் என்ற பொறுப்பிலிருந்து அவர்கள்தான் திருமணம் செய்துகொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வந்த வரனையும் கெடுத்துவிட்டார்களே. ஒரு மகளை கரைசேர்க்கப் போனால் இரு மகளின் வாழ்வு பட்டுப்போய்விடும். இந்த அவலம் வேறு யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது.

மனிதர்கள் தமது வாழ்வை மட்டுமே யோசிக்கிறார்கள். பிறரின் வாழ்க்கை எப்படிப் போனாலும் பிரச்சினையில்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் மனிதநேயத்துடன் எல்லோரும் இருந்தால் பூமிப்பந்து ஆனந்தமாக சுற்றும். நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - ஒரு தென்னை மரம் (சிறுகதை)
நூலாசிரியர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி
தொலைபேசி - 077 2765174
வெளியீடு - ஹாஜரா வெளியீட்டகம்
விலை - 350 ரூபாய்

Thursday, June 30, 2011

ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள்

ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை

சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.

இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்துகின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.

தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.

தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும், ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.

முதல் சம்பவமான அவன் ஒரு நட்சத்திரம் என்ற கதையில் முஹம்மத் என்ற பலஸ்தீனச் சிறுவனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறுவதையே தன் இலட்சியமாகக் கொண்டிக்கும் அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதுதான் ஆகிறது. தனது தந்தையுடன் கடைவீதிக்குச் செல்லும் முஹம்மதையும், முஹம்மதின் தந்தையையும் இஸ்ரேலிய இராணுவத்தினன் ஒருவன் தனது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றான். ஆக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது எப்படிப் போனாலும் தனது ஆரம்பப் பாடசாலை அணியில் கூட விளையாடும் அதிர்ஷ்டம் இன்றி இறந்து போகிறான் சிறுவன் முஹம்மத். மற்ற பிள்ளைகளுக்காக வாழும் முஹம்மதின் தாய் அவர்களிடம் இப்படிச் சொல்கிறாள். 'முஹம்மத் இப்போது சுவர்க்கத்தில் இருக்கிறான். ஒரு நட்சத்திரமாக' இதயத்தை கசக்கிப்பிழியும் சம்பவம் இது. ஒரு அப்பாவிச் சிறுவனின் ஆசை இங்கே நிராசையாகிப்போகிறது.

பிஞ்சுகளும் பிசாசுகளும் என்ற கதையில் 1988 இல் பிறந்த ரீட்டா, ருத் என்ற இரு யுவதிகளின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. டுட்சி இனத்தவரான இவர்கள் மீது ஹூட்டு இனத்தவர்கள் தாக்குதல்களை மேற் கொள்கின்றார்கள். தமது உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பா, அம்மா, பதினொறு வயதான மாமி கேத்தி எல்லோரும் காடுகளுக்கூடாவும், மலைகளுக்கூடாவும் எந்தவித வரைபடங்களோ, இலக்குகளோ இன்றி செல்கின்றார்கள். டுட்சி இனத்தவர்களை வலை விரித்துத்தேடும் ஹூட்டு இனத்தவர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க பெரும்பாடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் தாயும் தந்தையும் இறந்துவிட மாமியான கேத்தியுடன் வேறிடம் தேடி செல்கையில் ஜேன் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. எனினும் அதுவும் தமக்கு உகந்த இடமல்ல என்பதுபோல அவர்களைத் தேடி ஹூட்டு இனத்தவர்கள் ஜேனின் வீட்டுக்கு வருகின்றார்கள். அதனால் தம்மால் ஜேன் என்ற பெண்ணுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக மீண்டும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இந்தக் கதையினிடையே சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை வாசிக்குமிடத்து இவ்வாறான பயங்கரங்கள் நிகழுமா என்ற அச்சம் தோன்றுகிறது. காட்டுப் பாதையை ஊடுறுவி அவர்கள் வரும்போது காணாமல் போயிருந்த தந்தையின் சடலத்தைக் காண்கின்றனர். அஞ்சலி செலுத்தவோ, கதறியழவோ வழிகளின்றி அவரது பிணத்தை அநாதரவாக விட்டுச்செல்லும் அந்த நிலைமை அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஒரு மணிப்புறாவின் மரணம் என்ற கதையில் வல்லுறவுக்கு உட்பட்டு அநியாயமாக இறந்துபோன இளம் நங்கையின் சோகத்தை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். அதாவது பெயரில் மாத்திரம் பசுமையாக (கிறீன்) வாழுகிறான் ஒரு அமெரிக்க இராணுவ வீரன். ஜோர்ஜ் புஷ்ஷின் ஊர்க்காரன் என்பதால் அவனுக்கு இராணுவத்தில் இடம் கிடைத்ததா அல்லது குற்றம் புரிவதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டானா என்ற கேள்வி சாட்டையடியாக இருக்கின்றது. அபீர் ஹம்சா என்ற பதினான்கு வயது இளம்பெண் மீது குறியாக இருக்கும் கிறீன் அவளை துவம்சிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். திட்டத்தை அமுல்படுத்தும் நாளன்று தனது சகாக்களுடன் செல்லும் கிறீன், அபீர் ஹம்சாவின் பெற்றோரையும், ஐந்து வயதேயான அவளது சகோதரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு தனது நண்பர்களுடன் இணைந்து அவளை மானபங்கப்படுத்துகின்றான். காரியம் முடிந்த பின் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தின் மீது தலையணையை வைத்து ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகின்றான்.

சராசரி மனிதர்களுக்கு நேரும் இக்கொடுமைகளுக்கும் அப்பால் ஒரு பிக்குவுக்கு நேர்ந்த துன்பகரமான விடயங்களை தப்பிப் பிழைத்த பிக்கு என்ற கதையில் அறியக் கிடைக்கிறது. பிக்குவின் கரங்கள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் அவரது நெஞ்சிலும் முகத்திலும் இராணுவத்தினர் ஓங்கி உதைககின்றனர். மூர்க்கத்தனமாக அறைந்து காதுகளில் ஏறி மிதிக்கின்றனர். அகில பர்மா துறவிகள் அமைப்பின் தலைவர் யார், நீ அதில் அங்கத்துவம் வகிக்கின்றாயா போன்ற கேள்விகளைக் கேட்டு அந்த பிக்குவை படுத்தும்பாடு மிகவும் வேதனைக்குரியது. அதிஷ்டவசமாக அந்த சிறையிலிருந்து தப்பி விடுகின்றார் பிக்கு. எனினும் அதிகார வர்க்கதினருக்கு அந்த பிக்கு சொல்லும் போதனை இதுதான். அதாவது 'அராஜகங்களைக் கைவிடுங்கள். இல்லையேல் நீங்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவீர்கள்' என்பதுதான்.

உபகாரம் என்ற சம்பவம் லூசியா என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஷெல்களும், துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துவிட்டால் லூசியாவின் குடும்பத்தினர் பைபிளோடு சங்கமமாகிவிடுவார்கள். சேர்ச்சுக்குப் போகும் ஒருநாளில் குண்டுச் சத்தம் காதைப் பிளக்க தனது குழந்தைகளுக்கு ஒன்றும் நிகழக்கூடாது என்று எண்ணியவாறு கிட்டத்தட்ட மூர்ச்சையான நிலையை எய்துகிறாள் லூசியா. புனித பூமி மன்றம் என்ற அமைப்பினால் லூசியாவைப் போன்ற பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உதவியும் இல்லாமல் போகிறது. ஆம். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் புனித பூமி மன்றம் மூடப்படுகிறது. மன்றத்தின் பணம் ரமழான் மாதம் முழுவதற்கும் முடக்கப்படுகின்றது. தனது வாழ்வையும், சுவாசத்தையும், நம்பிக்கையையும் யாரோ தூர எடுத்துச் சென்றுவிட்டதாக லூசியா உணர்கின்றாள். நீண்ட நேரத்துக்குப் பின் அவளது மகனான ஜோனை தேடுகிறாள் லூசியா. தூரத்தில் குண்டுச்சத்தம் கேட்கிறது. அவளால் எதையும் அனுமானிக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமாக இருக்கின்றாள். எனினும் போதகர் அவளை நோக்கி ஓடி வருவதாக காண்கிறாள். ஜோன் இறந்து விட்டானா? என்ற அச்சத்தை வாசகர்களின் மனதுக்குத் தந்து விடுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள்.

இவ்வாறான பல நிகழ்வுகளை உள்ளம் உருகும் விதத்தில் தந்திருக்கும் நூலாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது எழுத்துப் பணி மென்மேலும் சிறந்து விளங்கவும், இன்னும் பல படைப்புக்களைத் தர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - ஒரு குடம் கண்ணீர் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
தொலைபேசி - 0777 303818
வெளியீடு - யாத்ரா
விலை - 300 ரூபாய்

Thursday, June 23, 2011

விடியலின் விழுதுகள் - சிறுகதை

விடியலின் விழுதுகள் சிறுகதை  தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை எழுதுதல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுகதைகளை எழுதும் வீதம் சமீக காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருமதி. ஸக்கியா ஸத்தீக் பரீத் அவர்களும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கின்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதி உட்பட முதிசம், இதயத்தின் ஓசைகள் என்ற நூல்களையும் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் திருப்பம், மங்கா வடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறை தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார், மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் 122 பக்கங்களில் அமைந்திருக்கின்றது.



திருப்பம் என்ற முதல் கதை அப்பாவிப் பெண்ணான மஸ்னாவைப் பற்றி பேசுகிறது. பிறக்கும்போதே தாயை இழந்த அவள் உம்மும்மாவின் தயவிலேயே வாழ்கின்றாள். காலங்கள் நகர்ந்து செல்ல உம்மும்மா மௌத்தாகின்றார். அதன் பின் மஸ்னாவுக்கு வாழ்க்கையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கின்றது. தான் தனித்த விடப்பட்டதாக எண்ணி கவலைக்கொண்டிருக்கும் சமயத்தின் பக்கத்து வீட்டு மைமூன் நோனா மஸ்னாவைத் தேடி வருகின்றார். மஸ்னாவின் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தனது வீட்டு வேலைக்காரியாக்குவதே மைமூன் நோனாவின் உள்நோக்கமாக இருந்தது. உம்மும்மாவின் சகோதரரான குஞ்சு மாமா மஸ்னாவை அவர்கள் நன்றாக பார்த்தக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளை அனுப்பி வைக்கிறார்.

அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயங்கர கட்டம் இங்குதான் நிகழ்கின்றது. அதாவது மைமூன் நோனாவின் மகன் பியாஸ், மஸ்னாவின் பேரழகில் மயங்கி அவளை வேட்டையாடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி அறுபது வயதாகியும் ஆசை நரைக்காத மைமூனின் கணவனும் மஸ்னாவில் குறிவைத்திருக்கிறார்.

எதேச்சையாக ஒருநாள் மைமூனின் கணவர் மஸ்தானிடம் அகப்பட்டுக்கொள்ளுவதிலிருந்து மயரிழையில் தப்பும் மஸ்னா, வீட்டைவிட்டு ஓடிவந்து தாஹிர் ஹாஜியாரின் வீட்டில் நுழைகிறாள். தங்க மனம் படைத்த அவரும் அவரது மனைவியும் மஸ்னாவை தம் பிள்ளைபோல ஆதரித்து அவளுக்கு வீடும் கட்டிக்கொடுத்து திருமணம் முடித்து வைப்பதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சமூகத்தில் நடமாடும் சில வேங்கைகள் பார்ப்பதற்குத்தான் பசுக்களாகத் தெரிகின்றனர். ஒரு அப்பாவி மாட்டி விட்டால் அவளை எப்படி கூறுபோட்டு எப்படி விற்றுவிடலாம் என்ற கேவலமான புத்திகொண்டவர்கள் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களிடமிருந்து தப்புதல் பெருங்கஷ்டம். எனினும் மஸ்னாவின் இறைபக்தியும், துணிச்சலும் அவனைக் காப்பாற்றி விட்டது.

சிறுமிகளை வேலைக்குச் சேர்க்கும் இன்னொரு கதையாக மங்கா வடு அமைந்திருக்கின்றது. ரிஸ்மினா என்ற பெண் வேலைக்கார சிறுமிக்கு செய்கின்ற கொடுமைகள் இக்கதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. எந்த வேலையென்றாலும் இந்தச் சிறுமியை ஏவுவது, அடிப்பது, சூடு வைப்பது முதலிய கொடுமைகள் நிகழ்கின்றன். இவ்வளவுககும் ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளாவின் வயதையொத்த சிறுமிதான் இந்த வேலைக்காரச் சிறுமி.

இவ்வாறு நடந்துகொள்வது பொலீஸீக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் வேலைக்கார சிறுமி மீது பரிவும் காட்டிக்கொண்டிருக்கின்றார் எதிர்வீட்டு ஆரிபா தாத்தா. தீடீரென கோலிங்பெல் அடிக்கிறது. பொலீஸார்தானோ என்று பயப்படும் ரிஸ்மினா பதட்டததோடு நிற்க, வந்தவர்கள் சொல்லும் விடயம் ரிஸ்மினாவை அதிர்ச்சியடைய வைக்க இருவரும் வைத்தியசாலையை அடைகின்றனர். அங்கே... ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளா இறந்து கிடக்கின்றாள்.

ரிஸ்மினாவை விட வேலைக்கார சிறுமிக்குத்தான் வேதனை அதிகமாக இருக்கின்றது. அது கீழுள்ள வரிகளில் அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

`நோனா அடிக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிய உத்தமி ஷர்மிளா, உம்மாவுக்குக் களவாக எல்லாத் தீன்பண்டங்களையும் தரும் என் அன்புத்தங்கை ஷர்மிளா, ஷர்மிளா தான் இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல்...'

இறுதியில் ரிஸ்மினாவின் இதயம் துடிக்கின்றது. தன் மகளாக வேலைக்காரச் சிறுமியை வளர்க்கப்போவதாக அவள் கூறுகையில் அந்தச்சிறுமி அதை மறுத்து, ஷர்மிளா இல்லாத வீட்டில் தான் இருக்கப் பேவதில்லை என்று கூறி தனது வீட்டுக்கு சென்று விடுகின்றாள்.

மனிதர்கள் போடும் திட்டங்கள் முற்று முழுதாக சரியாக இருக்காது. அல்லாஹ்வின் திட்டங்கள்தான் சரியாக இருககும் என்பதை இறைத்தீர்ப்பு என்ற கதை விளக்கி நிற்கிறது. வசதிவாய்ப்புகளோடு வாழும் ரிஸானாவுக்கு முப்பது வயதில் முர்ஷித் என்ற மகன். அவனுடைய திருமணத்தை தடைசெய்த படியே இருக்கும் ரிஸானாவின் நண்பியான சப்ரியத் ஆண்டி. உம்மாவும் சப்ரியத் ஆண்டியும் பார்ககும் பெண்களையெல்லாம் குறை கூறிக்கொண்டிருப்பது பிடிக்காமல் நல்மனம் படைத்த முர்ஷித் வெளிநாடு சென்று விடுகிறான். கதையின் இறுதி முடிவு மிகவும் சந்தோஷமாக அமைந்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே முர்ஷித் பெண்பார்க்கச்செல்லும் தாஹிரா என்ற பெண்னை உம்மா வேண்டாம் என்கிறாள். அல்லாஹ்வின் நாட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த அதே அழகில் தனது மழலைகளுடன் கணவரை இழந்து விதவையாக இருக்கிறாள் அந்தப்பெண் தாஹிரா. அவளை முர்ஷித் திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்து முதலில் ரிஸானா துடிக்க, சப்ரியத்துக்கு விட்மின் டொனிக் குடித்த பரவசம் ஏற்படுகிறது.

அடுத்தவரின் துக்கத்தில் சந்தோஷம் காணும் சப்ரியத்தின் திருவிளையாடல்களை புரிந்துகொண்டு, தனது நண்பியால் தனது மகனின் வாழ்வு இத்தனைக் காலங்களாக பாழ்ப்பட்டிருப்பதை இறுதியாக உணர்ந்து கொள்ளும் ரிஸானா, சப்ரியத்தைக் கூப்பிடாமல் தனது உறவினர்களுடன் தாஹிராவின் வீட்டுக்குச் சென்று திருமணம் பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. சப்ரியத் போன்றவர்கள் கதைகளில் மாத்திரம் உலாவும் பாத்திரங்களல்ல. நிஜத்திலும் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களை அறிந்து விலக வேண்டியது எங்கள் திறமையில் தங்கியிருக்கிறது.

இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் பகிடிவதை நடைபெறுகிறது. சிலர் அதைத் தாங்கிக் கொள்கிறார்கள். வேறுசிலர் படிப்புக்கே கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுகின்றார்கள். சமூக மயமாக்கல் என்ற பெயரில் நிகழும் இந்த கலாச்சாரம் வெறும் அநாச்சாரம் என்று இன்னும் மாணவ சமூகம் புரிந்துகொள்ளவில்லை. திசைமாறிய பறவை என்ற கதையில் வரும் அஸ்மா டாக்டர் ஆகும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அங்கு குழுமியிருந்த மாணவர் கூட்டம் அவளது ஹிஜாபை கழற்றி வீசச்சொல்கிறது. செருப்பை தலையில் வைத்து நடக்கச்சொல்கிறது. இறுதியில் புளித்த பாலில் மிளகாய்த் தூள் தூவி அதை அருந்த வைக்கிறார்கள். இந்த சம்பவம் அஸ்மாவை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இரைப்பையில் அலர்ஜி ஏற்படுவது மாத்திரமன்றி அவள் மனநோயாளியாகவும் மாறி விடுகின்றாள். காலம் கழிய பகிடிவதையில் நாயகனாக செயற்பட்ட முனாஸ் என்ற மாணவன் டாக்டராகி அஸ்மாவை இந்தக்கோலத்தில் சந்திக்கிறான். அவளது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவன் செய்த காரியத்தால் மனநோயாளியாகியிருக்கும் அஸ்மாவை இறுதியில் தன் மனைவியாக்கி அவளுக்கு வாழ்வு கொடுக்கின்றான். டாக்டராக வரமுடியாமல் போன அஸ்மா, டாக்டரின் மனைவியாகி நிற்பதைக் கண்டு ஊரே ஆனந்தப்படுவதாக கதை முடிந்திருக்கின்றது.

கோக்கி யார் என்ற கதை உள்ளத்தை உருக்கும் சம்பவமாக இருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் இரவுபகலாக நெருப்பில் வெந்து தனது மகனின் படிப்பு செலவுகளை மேற்கொள்ளும் காஸிம் காக்கா நம்பிக்கையான மனிதர். அவர் கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும்போது அவர் கொண்டுபோகும் நெய்பூந்தியை வாங்கவென்றே சிறுபிள்ளைகள் அவரது வருகைக்காய் காத்திருப்பார்கள். தந்தை படும் கஷ்டங்கள் தெரியாமல் வளரும் மகன் தப்ரிஸ் வீடுமுறைகளில் கொழும்புக்கு வந்து ஓரிரு நாட்கள் வாப்பா காஸிமுடன் தங்கிவிட்டுச் செல்வான். அவன் சாதாரணதர பரீட்சையில் நல்ல முறையில் சித்தியடைந்தாலும் அவனது ஒழுக்கத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் மனமுடைந்து இருதய நோயாளியாகிறார் காஸிம். தப்ரிஸ் உயர்தரம் கற்பதற்காக வேண்டி விண்ணப்பங்களுக்கு ஒப்பம் பெற காஸிமைத்தேடி வருகிறான். ஹோட்டலில் அவர் இல்லை. அவரது அறையிலும் இல்லை.

முதலாளியிடம் வந்து வாப்பா எங்கே என்று கேட்காமல் மரியதையின்றி கோக்கியார் எங்கே என்று கேட்க, முதலாளிக்கு கோபம் உச்சத்தை அடைகிறது. தறுதலையாக இருக்கிறானே என்று திட்டியவர் வைத்தியசாலைக்கு அழைத்துப்போகின்றார். போகும் வழியில் காஸிம் அடுப்படியில் வெந்து பட்ட கஷ்டங்களைச் சொல்ல தப்ரிஸூக்கு அடிமனதில் ஏதோ நெருடுகிறது. வைத்தியசாலையில் வைத்து காஸிம் காக்காவின் தலையை முதலாளி ஆறுதலாக தடவி விடும்போதே கண்மூடி காஸிம் இறந்து போகின்றார். தவறை உணர்ந்த தப்ரிஸ், முதலாளியின் உதவியுடன் வாப்பாவின் ஆத்ம சாந்திக்காக மீண்டும் பழைய தப்ரிஸாக மாறி படிக்கின்றான்.

இங்கே நான் கூறியவற்றிற்கும் அப்பால் இன்னும் பல நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. திறமையாகவும், வித்தியாசமான கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மனதை ஈர்க்கின்றன. அனைவரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 175/=

Monday, May 16, 2011

மிதுஹாவின் நந்தவனம் - சிறுவர் கதைகள்

மிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் நூலுக்கான இரசனைக் குறிப்பு

ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள் தந்திருக்கும் மிதுஹாவின் நந்தவனம் என்ற நூல் சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அருள் வெளியீட்டகத்தினால் 72 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 16 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, பிரியமான சிநேகிதி, கட்டுரை எழுதுவோம் என்ற நூல்களுடன் இந்தத் தொகுப்பையும் தந்திருக்கும் ஜெனீரா அவர்கள் கிண்ணியாவை வதிவிடமாகக் கொண்டவர்.

ஏளனஞ் செய்யாதே, தன் வினை தன்னைச் சுடும், ஏமாற்றுபவர் ஏமாறுவார், முயற்சி வெல்லும், தாய் சொல்லைத் தட்டாதே, கேடு நினைத்தால், அடாது செய்பவன், அடி உதவுவது போல, வாயால் வந்த வினை, ஒற்றுமையே பலம், ஆசையின் விபரீதம், சுற்றுலா, மிதுஹாவின் நந்தவனம், திருந்திய உள்ளம், அருண்டவன் கண்ணுக்கு, கர்வம் கொள்ளாதே ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் பிரசுரம் பெற்றிருக்கின்றன.


திருமலை நவம் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'குழுந்தைகளுக்காக எழுதி வரும் ஜெனீராவின் கதைகளில் தர்மம், ஒழுக்கம், நீதி, அன்பு, பாசம், பற்று என்றெல்லாம் போதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால் வாசிப்பு அருகிவிட்ட இந்தக் காலத்தில் பெரியவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய கதைகளாக அவை இருக்கின்றன'.

உண்மையில் சொல்வதென்றால் சிறுவர்களுக்காக என்று தலைப்பிட்டு இந்நூல் வெளிவந்தாலும் இதை அனைவரும் படிக்கத்தான் வேண்டும். போட்டியும், பொறாமையும் தலை விரித்தாடும் இன்றைய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பிறரை கஷ்டத்தில் வீழ்த்திவிடும் எத்தனையோ பேர் இன்று நம் சமுதாயத்தில் வாழ்கின்றார்கள் என்று கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயம், தொழிலிலும் சரி, நட்பிலும் சரி வஞ்சகங்கள் தான் வலைபின்னி அடுத்தவனை குழிக்குள் தள்ளிவிடும் துரதிஷ்டங்கள் நிலவி வருகின்றன. எங்கு பார்த்தாலும் சண்டைகளும், சச்சரவுகளும் நம் கண்முன் காணக்கிடைக்கிறது. சொத்துக்காக பெற்றவர்களையே அவமானப்படுத்தி காவல் நிலையம் வரை கூட்டிச்சென்ற எத்தனை சம்பவங்கள் இன்று சரித்திரங்களாகி விட்டன? இவை எல்லாவற்றுக்குமான தீர்வுகள் இந்தச் சிறிய கதைகளில் மிகத் துல்லியமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றமை ஜெனீரா அவர்களின் திறமைக்கு சான்றாகும்.

மற்றவரை ஏளனஞ்செய்து தாம்செய்வதே சரி என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். உடலின் எல்லா பாகங்களும் சரிவர அமைந்தவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறாமல், ஊனமாக பிறந்தவர்களை கேலி செய்து மகிழ்வதை தம் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றார்கள். வேலைவெட்டியின்றி இருக்கும் பலர் செயற்கைக் காலுடன் இருப்பவர்களைப் பார்த்து ரொபோ என்று கூறி அவர்களை மானபங்கப்படுத்துகிறார்கள். ரொபோ போல அவர்கள் இருந்தாலும் உழைத்துச் சாப்பிடும் அவர்களை மதிப்பதில்லை. மானம் பற்றி யோசிக்காத இவர்கள் ஊனம்பற்றி யோசித்தல் சரியா என்பதை யோசித்திருக்கவேண்டும்.

மேலுள்ள கருத்தை உடையதாகத்தான் ஏளனஞ்செய்யாதே என்ற முதல் கதையானது கொக்கையும், காகத்தையும் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. கொக்கும் தான் வெள்ளை நிறமாக இருப்பதால் கருப்புக் காக்கை என காகத்தை ஏளனஞ்செய்கிறது. இயற்கை அழகு நிறைந்த பூவுலகில் காக்கை மாத்திரம் கருப்பாக இருப்பதாக நக்கலடிக்கிறது. எனினும் காகம் அதனால் மனமுடையவில்லை. அது தன் பக்க நியாயங்களை கொக்கிடம் எடுத்துரைக்கிறது. அதாவது கொக்கு வெள்ளையாக இருந்தாலும் அதன் மனதை கறுப்பென்கிறது. காகங்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக உணவு உண்பதை நாமும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். காகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒற்றுமையிணை வேறு எதனிடமும் கற்க முடியாது என்பது உண்மை. வேறு பறவை, மிருக இனங்களில் மாத்திரமன்றி மனித இனத்திடம் கூட இத்தகைய பண்பு இருக்கிறதா என்று காக்கை கேள்வி கேட்பது எம்மத்தியில் கேட்கப்படும் கேள்வியாகவே கருதலாம். குப்பைகளையும் உணவாகக்கொண்டு வாழும் காகத்தால்தான் நமது சூழலும் சுத்தமாக இருக்கிறது. இல்லாவிட்டால் மக்கள் தொற்றுநோய்களாலும், மரண அச்சுறுத்தலாலும் அல்லல்படுவார்கள் என்று சொல்கிறது ஆகாயத்தொட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படும் காக்கை. காக்கை கூறிய அறிவுரைகளைக்கேட்டு கொக்கு தலைகுனிவதாக கதை முடிந்திருக்கிறது.

இரண்டாவது கதையான தன்வினை தன்னைச் சுடும் என்பது பிறரை நோவினைப்படுத்தினால் தாமும் தண்டிக்கப்படுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல தம்பாட்டுக்கு இருந்த தேனீக்களின் கூட்டை கல்லெறிந்து உடைத்து விடுகிறான் றிப்தி என்ற குறும்புக்கார மாணவன். அதனால் கோபமடைந்த தேனீக்கள் அவ்வழியால் வருவோர் போவோர் எல்லோரையும் தாக்குவதுடன் றிப்தியையும் தாக்குகிறது. இதை அறிந்த ஆசிரியர் மாணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.

'பார்த்தீர்களா பிள்ளைகளே! நாம் உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டும். தேனீ எமக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. அதை உணராமல் கல்லெறிந்து கலைத்தால் என்ன செய்யும்? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்று விளக்கமளிக்கிறார்.

ஏமாற்றுபவர் ஏமாறுவார் என்ற கதை மிகவும் சிறப்பானது. நாம் ஒருவரை காரணமின்றி வஞ்சகமாக ஏமாற்ற நினைத்தால் அதே போல நாமும் ஒருநாள் நிச்சயம் ஏமாறியே தீருவோம். இது இறைவன் வகுத்த நியதி என்பதை இக்கதையினூடாக யதார்த்தபூர்வமாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியை ஜெனீரா அவர்கள். அரசமரத்தின் உச்சிக் கிளையில் வாழ்ந்து வந்த நாரைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கிறது காகம். நாரைகள் தம் இருப்பிடம் குறித்த நியாயத்தை விசாரிக்கையில் காகம் கரைந்து தன் இனத்தாரை அழைத்து நாரைகளை துன்புறுத்துகிறது. தப்பினோம் பிழைத்தோம் என்றவாறு போன நாரைகள் மறந்தும் அப்பக்கம் தலைகாட்டவில்லை. காகம் ஏமாறும் சந்தர்ப்பம் இப்போது ஆரம்பிக்கிறது. ஆம் குயில் தன் முட்டைகளை காக்கையின் கூட்டில் இடுகிறது. அதை அறியாத காகம் அடைக்காத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் வளர வளரத்தான் அவற்றின் குரலுக்கிடையே இருந்த வித்தியாசத்தை உணர்கிறது தாய்க்காகம். 'நானே தந்திரமான பறவை. எனக்கே யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?' என்று எண்ணுகிறபோது, வந்துசேர்கிறது குயில்கள். நீ ஏமாற்றியதால் இன்று நீயே ஏமாந்துவிட்டாய் என்று சொல்லுகையில்தான் காக்கைக்கு பொறி தட்டுகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற ஆழ்ந்த கருத்து பொதிந்த பழமொழியை அள்ளித்தெளித்திருக்கிறார் கதாசிரியர்.

தாய்சொல்லைத்தட்டாதே என்ற கருத்துள்ள பல கதைகளை வாசித்திருக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்றாக இக்கதையும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் மாணவன் மிகவும் துடிதுடிப்பானவன். அவனுக்கு கடலில் இறங்கி விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நண்பர்கள் வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவார்கள் எண்று எண்ணியதால் பல நாட்கள் தன் ஆசைகளை அடக்கி வைக்கிறான். ஒருநாள் அவன் எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஒரு நாளில் பாடசாலைவிட்டு வரும்போது மெதுவாக கடலில் காலடி எடுத்து வைப்பதற்காய் பாறைகளில் நடக்கிறான். எதிர்பாராதவாறு கால் சறுக்கிவிட சிப்பியும் பாறைக்கற்களும் கைகளையும், கால்களையும் உராய்ந்து பதம்பார்த்து விடுகின்றன. சீருடைகள் பாசியை அரவணைத்து பச்சையாகிப் போயின. இதே காயங்களோடு கடலில் விழுந்திருந்தால் நிச்சயம் அவன் கரை சேர்ந்திருக்கமாட்டான். அதை எண்ணியவன் அப்போது முதல் இனி தாய் சொல்லைத் தட்டவே கூடாது என்று உணர்கிறான்.

அடாது செய்பவன் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கதை கேடு நினைத்தால் கேடே விளையும் என்ற கருத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கானகத்தில் நடுவில் அழகியதொரு பொய்கை. அதில் நீரருந்தவரும் பிராணிகளை கொன்று சாப்பிட்டு வயிறு புடைக்கிறது சிங்கம். தானே ராஜா தானே மந்திரி என்ற கர்வத்துடன் வாழ்ந்துவந்த சிங்கம் அன்று யானை ஒன்றை வேட்டையாட வேண்டும் என்று எண்ணி யானையின் அருகே செல்கிறது. தனது நண்பர்களை சிங்கத்துக்கு பலிகொடுத்த வேதனையில் இந்த யானை சிங்கத்தின் ஆட்டத்தை அடக்க நினைத்து தன் தும்பிக்கையால் சுழற்றி சிங்கத்தை பாறைநோக்கி வீசியது. வலிதாங்க முடியாமல் அவலக்குரல் எழுப்பும் சிங்கத்தை ஆறுதல் படுத்த அங்கே ஒரு ஈ கூட இல்லை. எல்லாமே சிங்கம் அடிபட்டதைப் பார்த்து குதூகலிக்கின்றன. மகிழ்ச்சியுடன் நீரருந்துகின்றன.

இந்தக் கதை வெறுமனே விலங்குகளை வைத்து எழுதப்படவில்லை. எம்முடன் பழகி எம்மையே விலைபேசும் பலர் இருக்கிறார்கள். பசுத்தோல் போர்த்திய புலிகளாக இருந்துகொண்டு எத்தனை பிரச்சனைகளை விளைவிக்கிறார்கள். அடுத்தவன் நல்லாயிருப்பதை கண்டு பொருமி, அவர்களின் மகிழ்ச்சியை நிரந்தரமாக அழித்துவிடும் யோசனைகளுடன் வாழ்ந்து வரும் இவர்களுக்காகவும் தான் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. அநியாயம் செய்பவன் அநியாயமாகவே அழிந்து போவான் என்று உறுதியாயக் கூறும் இந்தக் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது.

ஆசைகள் இருந்தால்தான் அவன் மனிதன். ஆனால் பேராசை என்பது மனிதனுக்கு எமன். அந்த பேராசைதான் வாழ்வின் அந்தம்வரை எமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. ஆசையின் விபரீதம் என்ற கதையாடலும் இதனைத்தான் உணர்த்திச்செல்கிறது. தன்னிடம் நகை இல்லை என்பதற்காக எதிர்வீட்டுப் பெண்ணிடம் நகையை வாங்கிப்போகிறாள் பவ்யாவின் தாய். நகை காணாமல் போகிறது. பக்கத்து வீட்டுக்காரி அதை இரண்டு பவுண் நகை என்கிறாள். வாங்கிய அவசரத்தில் தங்கமா, இமிட்டேஷனா என்று கூட பார்க்காததால் அநியாயமாக அகப்பட்டுக்கொண்ட பவ்யாவின் தாய் அமைதியை இழக்கிறாள். புன்னகை இருக்க பொன்னகை எதற்கு என்று அவளைப் பார்த்து மகள் பவ்யா கேட்கும் கேள்வி ஆடம்பர ஆசை கொண்ட அனைவருக்கும் பொதுவானது.

புத்தகத்தின் தலைப்பான மிதுஹாவின் நந்தவனம் என்ற கதை ஆசிரியரின் சொந்தக்கதை என்பது புலப்படுகிறது. பிரபல சிறுகதை எழுத்தாளர்களான நிஸ்வான் ஆசிரியரின் வீட்டுக்கும், நயீமா டீச்சரின் வீட்டுக்கும் சென்றதாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. பூ மரங்களை நடுவதில் அதிக ஆர்வம்கொண்ட மிதுஹாவைப் பற்றியதுதான் இந்தக் கதை. எங்கு போனாலும் பூ மரங்களை ரசிக்கும் பழக்கமுடைய மிதுஹா பேருவலை ஜாமியா நளீமிய்யா வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது இயற்கை ரசனைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. மிதுஹாவுக்கு ஜோடியாக இருக்கிறார் பஸ்மியா. அவரும் மிதுஹாவைப் போன்று பூ மரங்களை வளர்ப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் என்பது புலனாகின்றது.

அதுபோல மாகாத் பெரியப்பா என்ற ஒருவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மிதுஹாவின் பூமர ஆசை அறிந்த பெரியப்பா அவளுக்கு பூமரக் கன்றுகளைக் கொடுத்தாலும் வில்வம் கன்றை வாங்க மறுக்கிறாள் மிதுஹா. எப்படியோ பெரியப்பாவின் ஆசைக்காக வில்வம் கன்றை எடுத்துவந்து நாட்டுகின்றாள். கதாசிரியரான ஜெனீரா அவர்கள் இக்கதையின் இறுதியில் எம்மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ சோகத்தை இழையோட விடுகிறார். அந்த வரிகள் கீழுள்ளவாறு அமைந்திருக்கின்றன.

'இன்று மாகாத் பெரியப்பாவுமில்லை. அவர் தந்த பூமரங்களும் இல்லை. அவர் ஆசையோடு தந்த வில்வம் மட்டும் பூத்துக் காய்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றைக் காணும் போதெல்லாம் மிதுஹாவின் உள்ளத்தில் மாகாத் பெரியப்பாவின் நினைவுகள் அலைமோதிக்கொண்டிருக்கும்.'

அன்புப் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் இவ்வாறான அறிவுரை சொல்லக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள் என்று கூறுவதுடன், ஆசிரியத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கதாசிரியரான ஜெனீரா அவர்கள் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடிய இவ்வாறான பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - மிதுஹாவின் நந்தவனம்
நூலாசிரியர் - ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான்
முகவரி - எகுத்தார் ஹாஜியார் வீதி, கிண்ணியா.
தொலைபேசி - 026 2236487
வெளியீடு - அருள் வெளியீட்டகம்
விலை - 150/=

Monday, April 18, 2011

'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி

'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி பற்றிய எனது பார்வை

பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.

பாகம் ஒன்றில் சரத்சந்திரர், தகழி சிவசங்கரப்பிள்ளை, கிஷன் சந்தர், மக்தூம், வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும், பகுதி இரண்டில் அமரர் கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முஹம்மது சமீம், சுபத்திரன் ஆகியோர் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தின் அட்டையை செ. கணேசலிங்கன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நீர்வை பொன்னையன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர்.




பேராசிரியர் க. கைலாசபதிக்கு சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்தத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா இவ்வாறு குறிப்பிடுகின்றார். இலங்கையினதும், இந்தியாவினதும் குறிப்பிட்ட காலகட்டத்தின் முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் 'குறுக்குவெட்டுமுகம்' இந்நூலாக்கத்தின் தொகுப்பாகின்றது. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எழுத்தாக்கங்களும் ஆளுமை வெளிப்பாடுகளும், முற்போக்கு சிந்தனைகளின் பன்மை நிலைகளைப் புலப்படுத்துகின்றன. முற்போக்காளர் ஒரே அச்சில் வார்த்த வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற புலக்காட்சியும் இங்கே தகர்ப்புக்கு உள்ளாகின்றது. இது இந்நூலாக்கத்தின் ஒரு பரிமாணம். இதன் வேறொரு பரிமாணம் ஆளுமையின் பன்முகத் தன்மைகள் ஊடே கருத்தியலுக்குத் திரும்புதலாக அமைகின்றது.

கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தனது முன்னுரையில் கா. சிவத்தம்பி அவர்களின் கூற்றாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'முற்போக்கு எனும் சொற்றொடர் சமூக நிலைப்பட்ட ஒரு கருதுகோலாகும். அச்சொற்றொடர் மனிதன் சமூகம் தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை, மதிப்பீடுகளை, விபரிப்பதாகும். சமூகத்தின் படிநிலை வளர்ச்சிபற்றிய கண்ணோட்டமும் இதனுள் அடங்கும். பெரும்பாலும் மார்க்ஸியம் என்ற தத்துவத்தை வரித்துக்கொண்டவர்களது அரசியல், சமூக, இலக்கிய நடவடிக்கைகள் இந்த முற்போக்குத் தன்மை கொண்டிருப்பதை அறியலாம். முற்போக்குவாதம் மார்க்ஸியம் கூறும் சமூக வளர்ச்சி விதிகளை கற்றுக்கொள்கிறது'.

வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் திரு. தம்புசிவா அவர்களைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'நூலாசிரியர் தம்பு சிவசுப்பிரமணியத்தை கடந்த பல தசாப்தங்களாக அறிவேன். 1970 களில் கற்பகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்து இன்று வரை எழுதிக்கொண்டிருப்பவர். இளமைக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்ஸிய அனுதாபியாக இருந்து வருபவர். புனைவு, பத்தி, விமர்சனம், சஞ்சிகை ஆசிரியர் என பல்வேறு தளங்களில் முகம்கொண்டவர். பண்பாளர். அவர் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது நூலாக்கம் பெற்றுள்ளன. இலகுவான நடையில் பொது வாசகர்களும், மாணவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் தொகுப்பு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், முற்போக்கு இலக்கியக் காரர்களை அறிந்துகொள்வதற்கும், அவர்களது ஆக்கங்களை தேடிப் பார்ப்பதற்குமான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை'.

வங்கப்பெண்களின் விடுதலைக்கும், எழுச்சிக்கும் தன் பேனா மூலம் குரல்கொடுத்த விடுதலை வீரரான சரத் சந்திரர் அவர்கள் வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் எனும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிறந்தவர். இவர் ஆட்டத்திலும், இசையிலும் அதிக ஈடுபாடுகாட்டி வந்தவர். குழந்தை என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்த சரத்சந்திரர், ஆங்கில நாவல்களையும், அறிவியல் நூல்களையும் அதிகமாக வாசிப்பதில் ஆர்வமிக்கவர். பிறர் துன்பத்தைக் காணச் சகிக்காத இவர், அக்கம்பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணை புரிந்து வந்தார்.

பழைமை சிறப்புடையதானாலும், அதை பழைமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கிவிடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம். என்று தெளிவுபடுத்தியவர் சரத்சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும், காந்தியம், இந்து முஸ்லிம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம்பசலி பழைமைவாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஓலமிட்டனர்.

சரத் சந்திரரின் இலக்கியம் உயிர்துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால்தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை. பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத்சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள். சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார். 'அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல. இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல. அவர் இலட்சிய மனிதராவார். இத்தனை சிறப்புக்களையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது'

தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் தகழி என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் படைப்புளில் அவர் அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது. தகழியின் சிறுகதைத் தொகுதி 1934 இல் வெளிவந்தது. இவர் சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட அவலங்களை, போராட்டங்களை தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். 1956 இல் வெளிவந்த இவரது செம்மீன் என்ற நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. நில அமைப்பு சார்ந்த இலக்கியப் படைப்புக்கள் என்ற வகையில் கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையை செம்மீன் நாவலில் தந்திருப்பதால் அவரை 'குடா நாட்டின் வரலாற்று நாயக்' என்று சிறப்பிக்கின்றனர்.

இந்த நாவல் இருபது நாட்களுக்குள் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மக்களின் ஏற்றத்தாழ்வுகளில் இருக்கக்கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும், உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளரான இவர், தனது 85 ஆவது வயதில் உயிர்நீத்தார்.

இந்திய வாழ்க்கையின் அழகையும் அவலங்களையும் சித்தரித்த புனையியல்வாதியாக கிஷண்சந்தர் போற்றப்படுகின்றார். இவர் தனது இளமைப்பருவம் முதல் துடிப்புள்ள கொள்கைப்பற்றுறுதி கொண்ட செயல்வீரனாக இருந்தார். கே.ஏ. அப்பாஸ் என்பவர் கிஷண்சந்தரைப் பற்றி குறிப்பிடுகையில் 'கிஷண்சந்தர் படைப்பாளுமை மிக்கவர். உருதுமொழியில் அவருடைய நயமான எழுத்தாற்றலை, ஆற்றொழுக்கமான உரைநடையை எழுதிக் குவிக்கும் திறமையைக்கண்டு ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் ரகசியமாகப் பொறாமைப்பட்டேன்' என்கிறார்.

அவர் தனது தந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்த காலத்தில் காஷ்மீர் வாழ் விவசாயிகளின் கூலிகளின் பரிதாபத்துக்குரிய ஏழ்மையைக் கண்டு வருந்தினார். இயற்கைக்கும், மனிதனுக்குமிடையே இருந்த வேறுபாடு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் காரணமாக அவர் மனதில் பரிவு உணர்ச்சி ஏற்பட்டு அது ஆழப் பதிந்துவிட்டது. அத்துடன் கிஷண்சந்தர் காதல்வயப்பட்டு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோதிலும் அவருக்கு ஏற்பட்ட ஆழமான காதல் உணர்ச்சி ஒரு மென்மையான நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கிணங்க அவரது பல படைப்புகள் அமைந்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் 1908 இல் பிறந்தவர் கவிஞர் மக்தூம். மாமா பஷீருத்தீன் அவர்களிடம் வளர்ந்த இவர், தினமும் மசூதியை சுத்தம் செய்தலையும், தொழுகைக்கு வருவோரின் பாவனைக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதையும் தனது அன்றாடப் பணியாகக்கொண்டிருந்தார். 1933 க்குப் பின் தன்னுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்த மக்தூம் தொன்மை இலக்கியங்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1939ல் இரண்டாம் உலகப்போரை கண்டனம் செய்து பாடல்கள் எழுதினார். முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்த்து வந்த இவர், நாடகங்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் நகைச்சுவை உணர்வுமிக்கவரும் கூட. அவர் 1969 இல் இறையடி சேர்ந்தார்.

திருநெல்வேலி ராஜவல்லிபுரம் எனும் கிராமத்தில் 1920 இல் பிறந்த வல்லிக்கண்ணன் அவர்கள் சென்ற தலைமுறை எழுத்தாளருக்கும், இந்தத்தலைமுறை எழுத்தாளருக்கும் பாலமாக விளங்கியவர். பெயர், புகழ், பட்டங்களை விரும்பாத உண்மைப் படைப்பாளியான இவர், தனது 16 ஆவது வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடாத்திய பெருமைக்குரியவர். 30 வயதுக்குள் 25 நூல்கள் வரை வெளியிட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் என்று தொடர்ந்த இவரது எழுத்துலக வாழ்வு திறனாய்வு, சஞ்சிகை, புதுக்கவிதை, வரலாறு என்று தொடர்ந்தது. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞராகவும், முன்னுரை எழுதும் முன்னுரை திலகமாகவும் அறியப்பட்ட இவர் முற்போக்கு எழுத்தாளர்கள் மீது அளவுகடந்த தோழமை உணர்வுடன் தனது கடைசிக்காலம் வரை இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண உழவர் குடும்பத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். மக்களுடைய வாழ்வியலை ஆதாரமாக வைத்து இவரது படைப்புக்கள் உருப்பெற்றதால் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். அரசியல், சமூகம், காதல், பல்சுவை என பலதரப்பட்ட படைப்புக்களைப் படைத்த இவரது இலக்கியப் பிடிப்பும், கவித்திறனும் கவிதைகள் மூலம் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன. பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த இவர், 1951 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். பலராலும் அறியப்பட்ட பட்டுக்கோட்டையார் தனது 29 ஆண்டு வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக வெளிப்படுகின்றார்.

1933 இல் பிறந்த க. கைலாசபதி அவர்கள் இலக்கிய மரபில் புதிய பரிமாணங்களை உருவாக்கியவர். இவர் பேராசான் மு. கார்த்திகேசன் அவர்களின் மாணவராவார். தினகரன் நாளிதழின் ஆசிரியராக கடமை புரிந்த இவர், 1961 இல் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக சேர்ந்து 1966 இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவர் கவிதை, சிறுகதை, நாடகங்களை எழுதியிருக்கிறார். 'பூ பூக்காமலேயே சடைத்து வளரந்து பெரும் தோற்றம் காட்டும் தமிழறிஞர் மத்தியில் பூத்துக்காய்த்துக் கனிந்து நின்றது கைலாசபதி என்ற பெருமரம்' என்று அவரைப்பற்றி பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு குறிப்பிட்டிருக்கிறார்.

பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை எனும் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் பசுபதி படாடோபத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு சாதாரண மனிதர். அவர் முற்போக்கு இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட செயல்வீரராகவும், போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர். இவரது கவிதையில் கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும், போராட்ட உணர்வும், தர்மாவேசமும் மிகையாக காணப்பட்டன. இளமைக் காலத்திலிருந்தே சாதிவெறியை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தவர்.

எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் பசுபதியைப் பற்றி குறிப்பிடுகையில் 'நிலப் பிரபுத்துவத்தின் சாபக்கேடான சமூகக் கொடுமைகட்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் உட்பட்டு சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்குமாகத் தன் இளம்பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் க. பசுபதி' என்கிறார். 'மரணம் தன்னை நெருங்கி வருவதை அறிந்திருந்தாலும் அதற்காக கலங்காமல், எதிர்கால நம்பிக்கையை ஊட்டி விடுதலைக்காக ஏங்கி நிற்கும் மக்களை நினைவுபடுத்தி நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ளார் பசுபதி' என்கிறார் கே. டானியல்.

நாவல் இலக்கியத்துறையில் 40 நாவல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள செ. கணேசலிங்கன் அவர்கள் மு. வரதராஜன், அகிலன், காண்டேகர், ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துக்களில் கவரப்பட்டவர். இவர் பெண்ணிலைவாத சிந்தனைகளை மார்க்ஸிய நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் குமரன் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து ஈழுத்து இலக்கயத்துக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர். பல்துறை சார்ந்த பரிமாணங்களுடன் மார்க்ஸிய சிந்தனையில் பற்றுறுதியுடன் செயற்பட்டு இன்றும் சோர்ந்துவிடாமல் ஈழுத்து எழுத்தாளர்களுடைய நூல்களை குமரன் வெளியீடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

'இளம் எழுத்தாளர்கள் பலருக்கு ஏணியாக திகழ்ந்து வரும் நீர்வை பொன்னையன் அவர்கள் 1930ம் ஆண்டு யாழ்ப்பாணம் நீர்வேலி எனும் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தின்படி வாழ்க்கையை வாழும் உயர்ந்த இலட்சியம் கொண்டவர். தான்கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல் நேர்மையான எழுத்தாளராக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைத்து வந்தாலும் புகழ்ச்சி, பட்டங்களுக்கெல்லாம் சிறுமைப்பபட்டுவிடாமல் வாழ்ந்து வருகின்றார்.

இவர் கல்விகற்கும் காலத்திலேயே மாணவர் போராட்டங்களில் பங்குகொண்டார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்கொடுக்கத் தவறாத ஒரு இலட்சியவாதியாகவே இருந்தார். 1957 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர் அதன் பின் பல ஆண்டுகளாக வேலைதேடி அலைந்து கிடைக்காததால் தோட்டக்காரனாகவே வாழ்ந்தவர். 'சமுதாயத்தின்கண் தான் தரிசித்த போராட்டங்களை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைப் பட்டைத்தீட்டி மக்களுக்கு வழங்குகின்றவனே உண்மையான படைப்பாளி' என்று கூறிவரும் நீர்வை பொன்னையன் அவர்கள் எல்லோருடனும் மிக இனிமையாக பழகக்கூடியவர். எதற்கும் மனஞ்சோராத இந்த ஆக்க இலக்கிய கர்த்தா தொடர்ந்தும் நீண்டகாலம் தனது கலை இலக்கிய சேவையை மக்களுக்காக ஆற்றவேண்டுமென்று இலக்கிய நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன' என்கிறார் நூலாசிரியர் தம்புசிவா அவர்கள்.

மார்க்ஸிய தத்துவத்தை இன்றுவரை ஏற்று அதன்படி செயற்படுகின்றவர்களில் முஹம்மது சமீம் அவர்கள் முன்நிற்கின்றார். பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்களில் கொள்கைவழி நின்று செயற்படுகின்ற கொள்கைவாதியாக இவர் விளங்குகின்றார். கலாசார திணைக்களத்தின் மூலம் கலாபூஷணம் விருதைப் பெற்றுக்கொண்ட இவரின் ஆரம்பகால பள்ளிப்படிப்பு அவர் பிறந்த ஊரான பதுளையில் அமைந்திருந்தது.

சாந்த சுபாவமும் எல்லோருடனும் அன்பாக பழகும் குணத்தையும் கொண்ட சமீம் அவர்கள் இலங்கை சர்வகலாசாலையில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றபின் ஐம்பதுகளில் சாஹிரா கல்லூரியின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்று தற்போது இன்டர்நெஷனல் கல்லூரியை நடாத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1935ம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த கவிஞர் சுபத்திரன் சொல்லிலும், செயலிலும் வழுவாத உன்னதமானவர். முற்போக்குத் தளத்தில் நின்று மக்கள் விடுதலைக்காக உழைத்தவர். தங்கவடிவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராவார். இவர் கட்சிக் கவிதைகள், அரசியல் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுக் கவிதைகள் என்று பல்வேறு தளத்தில் நின்று எழுதியவர். அக உணர்வு சார்ந்து அவர் எழுதிய கவிதைகள், அவர் மனதில் உருவாகிய உணர்ச்சி வயப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருக்கிறது. மேலும் அவருடைய கவிதையில் உள்ள சிறப்பு என்னவென்றால் எவர் பொருட்டு அவர் தன் கவிதைக் குரலை ஒலித்தாரோ அவர்களில் ஒருவராகத் தன்னை நிறுத்தியே தனது குரலை அவர் ஒலித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தி திரு. தம்புசிவா அவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் இந்நூலானது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களோடு இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பை வாசித்துப் பயனடைய வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்!!!

நூலின் பெயர் - முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
நூலாசிரியர் - த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா)
முகவரி - 9/23, Nelson Place, Wellawatta.
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை - 50/= (இந்திய விலை)

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14177:2011-04-18-06-18-48&catid=4:reviews&Itemid=267