Tuesday, February 28, 2012

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார்.


மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.


அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன.

முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.

பசியை இசையாய் நீ இறக்கிய
வெய்யிற் பொழுதில்
அத்தனைச் சோடிக் காதுகளாலும்
முழுச் செவிடாய்
உன்னைக் கடக்கும்
பெரும் வீதி

தன் மகனைக் கடத்திச் சென்ற சோகம் தாளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட ஒரு தாய்க்கான பாடலாக ஹயாத்தும்மா என்ற கவிதை இருக்கிறது. கீழுள்ள வரிகள் மூலமாக அந்தத் தாயின் துயர் நிரம்பிய இதயத்தை தரிசிக்க முடிகிறது.

நீ நெய்த கனவுகள்
நெய்தல் அலைகளில் கரைந்து அழிகையில்
உன்னால் எய்த முடிந்தது
மரணம் மட்டுமாயிற்று

மனிதர்கள் தனக்குக் கிடைத்தவற்றையிட்டு ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. எதைப் பெற்றாலும் அதைவிட சிறந்ததைப் பெறுவதற்கே மனம் அலைவதுண்டு. அதை கருத்தாகக்கொண்டு முரண் வாழ்வு என்ற கவிதை பிறந்திருக்கிறது. அழகிய உவமானமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை, மனித நிலை பற்றி விளக்குவதாக இருக்கின்றது.

குளத்து மீனுக்கு
தூண்டிலும் வலையுமான
அடக்கு முறைக்குள் சிக்காது
கண்ணாடிப் பளிங்குத் தொட்டியில்
வாழும் விருப்பம்

தொட்டி மீனுக்கோ
இன்னது இன்னதென்று எழுதிய
செயற்கை இருப்பின்
சொகுசுச் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு
குளத்தில் நீந்தவே ஆசை

என் வீட்டு மழை என்ற கவிதை ரசிக்கத்தக்கதாகும். மழைக் காலத்தில் நனையாமல் இருந்த எமது சிறுவயதுப் பொழுதுகள் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அந்த அழகிய நாட்களை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது. கவிதையின் கடைசி வரிகள் யதார்த்த வாழ்வை சுட்டிக்காட்டுவதாயும் இருக்கிறது.

பழைய வீட்டுக் கொப்பி
விதவிதமாய் கப்பலாகும்
என் கப்பல்கள் கரையேறுவதெப்படி
நான்கு குமர்களோடு உம்மா இருப்பாள்

முல்லை முஸ்ரிபா அவர்கள் ஆசிரியராக இருப்பதினால் மாணவர்களின் சுமைகள் பற்றி உளப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கின்றார். பிள்ளைகளை படி என்று சொல்கின்றோம். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான துறையில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வைத்தியர், பொறியிலாளர் என்ற வரையறைக்குள் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வலுக்காட்டாயமாக திணிக்கப்படுகிறது. விளைவு, சிலர் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்? கல் தெப்பம் என்ற கவிதையில் ஒரு மாணவனின் மேற்சொன்ன துயரங்கள் கீழுள்ள வரிகளாக...

இதயத்தை தோண்டியெடுத்துவிட்டு
அதனிடத்தில்
ஏதோவொன்றைத் திணிக்கிறீர்கள்
எனதான இலக்குகளை வரையவும்
இலக்கு நோக்கி பறக்கவும் முடியாதபடி
இறக்கைகளைப் பறிக்கிறீர்கள்

எத்தனைப் பிரச்சினைகள் மனதை வாட்டிய போதிலும் மழலையின் மொழி கேட்டால் அவை தூரமாகிவிடும். பெண் என்பவள் போற்றப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தாய்மையும் குறிப்பிடப்படுவது இதனால்தான். பெற்றோர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு பிள்ளைகள் என்கிறோம். அத்தகைய குழந்தைச் செல்வங்களைப் பற்றியதாக நிலவு துளிர்த்து அமாவாசை கருகி என்ற கவிதை காணப்படுகிறது.

செல்லமே நீ காலுதைக்கவும்
மென்பூச் சிரிப்புதிர்க்கவுமான
வினாடிகளில் மனசு மீளவும்
எல்லையில்லாப் பெருவெளியாய்
விரிகிறது

உள் முகங்கள் என்ற கவிதை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிதர்சனத்தை சொல்லி நிற்கின்றதை அவதானிக்கலாம். மாலை அயர்வில் தேனீர் சுவையாக இருக்கின்றது. சோர்வும் பறக்கின்றது. எனினும் தேயிலைத் தோட்டத்தில் உச்சி வெயில் கொடுமையில் பறிக்கப்பட்ட தேயிலையின் வாசம் தொண்டை வழியால் உள்ளிறங்குகிறது. மீண்டும் முகத்தில் அயர்வின் சாயல் படர்கின்றது என்கிறார் நூலாசிரியர்.

சாறாய்ப் பிழிந்த
உழைப்பின் சக்கை
துயராய்க் கசிகிறது
என் கோப்பைக்குள் இறங்குகிறது
வாழ்தலின் யதார்த்தம்

வவுனியா அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை இருள்வெளியும் நாளைய சூரியனும். யுத்தம் விட்டுப்போன எச்சங்களாக வாழ்ந்துகொண்டே மரணத்தை அனுபவிக்கும் அந்த மக்களுக்காக தனது துயரை பதிவு செய்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா அவர்கள். இருளிடம் கையேந்திப் பயனில்லை. சூரியனும் கருகிற்று. காற்றும் அசுத்தமாகிக் கிடக்கின்றது என்றவாறு புறச் சூழலை விபரித்து, இந்த வரிகளின் வழியே அங்குள்ள மக்களின் துயரை துல்லியமாகக் கூறுகின்றார்.

படர்வுறும் முட்கம்பிச் செடி
கிளைப்பதில்லை துளிர்ப்பதில்லை
காய்ப்பதில்லை கனிவதுமில்லையெனின்
குயிலாய்க் கூவித் தோப்பாகும்
கனவுகளுமற்றுப் போக
குரல் கிழிந்து தொங்குகிறது
முட்கம்பி வேலிகளில்

எனது தமிழ்ப்பாட ஆசானாக விளங்கிய இக்கவிஞரின் தொகுதிக்கு எனது குறிப்பை எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது இலக்கியத்தேடல் பற்றி சொன்னபோது, அந்த ஆவலை தன் எழுத்துக்கள் மூலமும், உற்சாக வழிகாட்டுதல் மூலமும் எனக்குத் தந்த நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கு இதனூடாக நன்றி நவில்தலை மேற்கொள்வது எனது கடமையாகிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - அவாவுறும் நிலம் (கவிதைகள்)
நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 200 ரூபாய்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

திருமதி சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற கவிதைத்தொகுதி இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 93 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் இளைய புதல்வியான சுமதி அவர்கள் தனது கவிதைகளுக்கூடாக சமூகம் பற்றி இருப்பு நிலையை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.



சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து மக்களை சரியான திசையில் வழிநடாத்தக்கூடிய இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களின் வரிசையில் திருமதி. சுமதி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார் என்று பதிப்புரையில் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தனதுரையில் சாதாரண பேச்சிலிருந்து இவரது கவிதைகள் புனித நெறியைக் காட்டுகின்றன. சிறப்பான எடுத்துக்காட்டாக இதனைச் சொல்லாம். நெருக்கடியான நேரங்களிலும், சோதனை தரும் வேளைகளிலும் இவரது கவிதைகள் நுட்பங்கள் நிறைந்து வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமதி சுமதி அவர்கள் ஓர் ஆசிரியையாக கடமையாற்றியதால் மாணவர்களோடு ஒன்றுபட்டு அவர்களது அகநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் எவ்வாறான முறையில் உதவலாம் என்று நன்கறிந்திருப்பவர். ஆதலால் தளிர்களின் சுமைகள் என்று மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதையின் தலைப்பையே புத்தகத்தினதும் மகுட தலைப்பாக்கியிருக்கிறார். அதுபோல நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கின்றார் நூலாசரிரியர்.

மாணவம் என்ற கவிதையில்

ஏணிப்படிகள் என
எண்ணிக் கால்வைக்க
உக்கி உருக்குலைந்து
சிதிலங்களாய்ப் போனதில்
இன்னும் இருண்டு கிடக்கின்றேன்
பள்ளிச் சிறைக்குள் (பக்கம் 21)

என்ற கவிதையானது குறிப்பிட்டதொரு விடயத்தை அடைய நினைத்து அதில் ஏமாற்றமடைந்தவர்களின் நிலையை சித்தரிக்கிறது எனலாம். வாழ்க்கையில் எல்லோரும் எத்தனையோ இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றில் எல்லாமே ஈடேறுவதில்லை. அத்தகையதொரு மனத்தாக்கதின் வெளிப்பாடாக ஒரு மாணவனின் பார்வையினூடாக இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

காதல் என்பது பள்ளிக் காலத்திலும் வரலாம். பருவக்காலத்திலும் ஏற்படலாம். ஆனால் பள்ளிக்காலத்தில் வரும் காதல் வெறும் இனக்கவர்ச்சியாக மாத்திரமே இருக்க முடியும். பக்குவப்படாத மனதில் காதல் விதைகளை விதைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று வந்தாகிவிட்டன. ஆனால் அனைவரும் பேதமின்றி அவற்றைப் பாவிக்கின்றனர். இத்தகைய வழிமுறைகளினால் மாணவர்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றார்கள் என்பது மெய்யான விடயம். அவர்களிடம் காதல் தப்பு என்று சொல்லலாம். எனினும். அத்தகைய சூழலை பிள்ளைகளுககு ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களுக்குச் சொல்வது யார்? அவ்வாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுமானால் மாணவச் சமூகத்தை சிறந்த எதிர்காலத்தின் பிரதிநிதிகளாக மாற்ற வழிவகைகள் ஏற்படும். இது பாதுகாப்பு என்ற இந்தக் கவிதையில் இவ்வாறு வருகிறது.

பருவ வயதில் காதல் பாழ்
பெற்றோர்களும் பாதுகாவலர்களும்
சொல்கிறார்கள் தம்
அறிவு முதிராத குழந்தைகளிடம்
இவர்களிடம் சொல்பவர் யார்
ஆதலினால் அவர்களை
அச்சூழலினின்று
பாதுகாருங்கள் என்று (பக்கம் 34)

சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறானதொரு சமத்துவம் வீட்டில் நிலவாதவிடத்து குடும்பங்களுக்குள் சச்சரவுகள் தலை நீட்டிப் பார்க்கின்றன. வெளியிடங்களில் பிரச்சனை என்றால் வீட்டுக்குள் போய் ஒதுங்கியிருக்கலாம். வீட்டிலேயே பிரச்சினை என்றால் யாரிடம் சொல்லியழுவது? ஆட்சி என்ற கவிதை இவ்வாறு

பிழையான ஆட்சி
நாட்டிலே நடந்தால்
வீட்டிற்குள்ளே
பூட்டிக்கிடக்கலாம்
அதுவே வீட்டிலும் என்றால்? (பக்கம் 35)

தளிர்களின் சுமைகள் என்ற கவிதை மாணவர்களின் பிரச்சினையாக உருவகித்திருக்கின்றது. பள்ளி செல்கையில் புத்தகச்சுமை. வகுப்பில் பாடங்களின் சுமை. வீட்டுப்பாடங்களை செய்யாதவிடத்தோ அல்லது ஏதாவது நிகழ்வில் தண்டனைச் சுமை. பிறகு மாலை வகுப்புச் சுமைகள் இப்படியே கழிந்து வீட்டிற்கு வந்தவுடன்

வீடு வந்து சேர்கையிலே
பெற்றோர் தம் எதிர்பார்ப்பு (கள்)
அத்தனையும் பெருஞ்சுமையாய்
மீண்டும் நாளை காலை
பள்ளி செல்கையில்.... (பக்கம் 37)

என்றவாறு கவிதை முடிகிறது. இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக இளங்குருத்துக்கள் படும்பாடு நன்கறிந்ததே. காலையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் பாடசாலைக்கு ஓடுகின்றார்கள். பாடசாலை முடிந்து அரக்கப்பறக்க சாப்பிட்டுவிட்டு மாலை வகுப்பு. மாலையில் வீடு வந்து எட்டு மணி வரை இன்னொரு வகுப்பு என்றே அவர்களது காலம் கழிகிறது. பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு கஷ்டப்பட்டு படித்து பரீட்சையில் தற்செயலாக சித்தியடையாவிட்டால் அவர்கள் உள்ளத்தால் அழுகின்ற வலி வார்த்தைகளில் உள்ளடக்க முடியாது. இந்தளவுக்கு மாணவர்கள் சுமைகளைத் தாங்குகின்றார்கள். அத்தகைய சுமைகளைத்தான் நூலாசிரியர் தனது கவிதையில் மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் தந்திருக்கின்றார்.

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பிரம்படி கொடுக்கப்படுவதுடன் முழங்காலில் உட்கார வைத்தல் என்ற தண்டனையும் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான தண்டனைகள் எவ்வாறிருக்கும் என்பது அனுபவப்பட்ட மாணவ உள்ளங்களிடம் விசாரித்தால் அறியலாம். முழங்காலில் நிற்க வைத்தல் என்ற தண்டனை குறைவானது என்ற எண்ணத்தை ஆசிரியத்தோழி மாற்றினார் என்று தண்டனை என்ற கவிதையில் கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாற்றினார் என்ற கேள்விக்கு கவிதையிலேயே இவ்வாறு பதிலிருக்கின்றதைக் காணலாம்.

ஏழைகளின்
உழைப்புக்காய்
இருக்கும் ஒரே
மூலதனம் உடல்தான்
அதை நாம்
நாசம் பண்ணாமல்
அப்படியே விட்டுவிடுவோம் (பக்கம் 41 - 42)

பெற்றோர்களின் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாகத்தான் வளருவார்கள். பெற்றோர்களின் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாதவிடத்து பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இறுதியில் பெற்ற தாய் தந்தையரைக்கூட மதிக்கமாட்டார்கள். அதை வளர்ப்பு என்ற கவிதை நிதர்சனமாக்கி நிற்கிறது.

பிஞ்சுகள் ஆவதும்
நம்மாலே
அவை நஞ்சுகள்
ஆவதும் நம்மாலோ (பக்கம் 64)

நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் அற்புதமானவை. அனைவரும் வாசிக்க வேண்டியவை. திருமதி. சுமதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தளிர்களின் சுமைகள் (கவிதைகள்)
நூலாசரியர் - திருமதி. சுமதி குகதாசன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 350 ரூபாய்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.

வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.

அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.

இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.

வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.

அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.

இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.

நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.

பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.

'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'

எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.

இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)
நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
வெளியீடு - சேமமடு பதிப்பகம்
தொலைபேசி - 011 4902406, 0718 676482
விலை - 280 ரூபாய்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.


'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.


பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.

பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.

இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை.

சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.

முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.
திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப் பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.

இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்
டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்
தொலைபேசி - 011 455 1098
விலை - 200 ரூபாய்

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.



இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.

'எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்'

இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.

இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ - மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.

வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.

அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.

இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - குள்ளன் (சிறுவர் கதை)
நூலாசரியர் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்
முகவரி - 460ஃ16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.
தொலைபேசி - 0773 706374
விலை - 100 ரூபாய்