Thursday, June 23, 2011

விடியலின் விழுதுகள் - சிறுகதை

விடியலின் விழுதுகள் சிறுகதை  தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை எழுதுதல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுகதைகளை எழுதும் வீதம் சமீக காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருமதி. ஸக்கியா ஸத்தீக் பரீத் அவர்களும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கின்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதி உட்பட முதிசம், இதயத்தின் ஓசைகள் என்ற நூல்களையும் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் திருப்பம், மங்கா வடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறை தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார், மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் 122 பக்கங்களில் அமைந்திருக்கின்றது.



திருப்பம் என்ற முதல் கதை அப்பாவிப் பெண்ணான மஸ்னாவைப் பற்றி பேசுகிறது. பிறக்கும்போதே தாயை இழந்த அவள் உம்மும்மாவின் தயவிலேயே வாழ்கின்றாள். காலங்கள் நகர்ந்து செல்ல உம்மும்மா மௌத்தாகின்றார். அதன் பின் மஸ்னாவுக்கு வாழ்க்கையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கின்றது. தான் தனித்த விடப்பட்டதாக எண்ணி கவலைக்கொண்டிருக்கும் சமயத்தின் பக்கத்து வீட்டு மைமூன் நோனா மஸ்னாவைத் தேடி வருகின்றார். மஸ்னாவின் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தனது வீட்டு வேலைக்காரியாக்குவதே மைமூன் நோனாவின் உள்நோக்கமாக இருந்தது. உம்மும்மாவின் சகோதரரான குஞ்சு மாமா மஸ்னாவை அவர்கள் நன்றாக பார்த்தக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளை அனுப்பி வைக்கிறார்.

அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயங்கர கட்டம் இங்குதான் நிகழ்கின்றது. அதாவது மைமூன் நோனாவின் மகன் பியாஸ், மஸ்னாவின் பேரழகில் மயங்கி அவளை வேட்டையாடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி அறுபது வயதாகியும் ஆசை நரைக்காத மைமூனின் கணவனும் மஸ்னாவில் குறிவைத்திருக்கிறார்.

எதேச்சையாக ஒருநாள் மைமூனின் கணவர் மஸ்தானிடம் அகப்பட்டுக்கொள்ளுவதிலிருந்து மயரிழையில் தப்பும் மஸ்னா, வீட்டைவிட்டு ஓடிவந்து தாஹிர் ஹாஜியாரின் வீட்டில் நுழைகிறாள். தங்க மனம் படைத்த அவரும் அவரது மனைவியும் மஸ்னாவை தம் பிள்ளைபோல ஆதரித்து அவளுக்கு வீடும் கட்டிக்கொடுத்து திருமணம் முடித்து வைப்பதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சமூகத்தில் நடமாடும் சில வேங்கைகள் பார்ப்பதற்குத்தான் பசுக்களாகத் தெரிகின்றனர். ஒரு அப்பாவி மாட்டி விட்டால் அவளை எப்படி கூறுபோட்டு எப்படி விற்றுவிடலாம் என்ற கேவலமான புத்திகொண்டவர்கள் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களிடமிருந்து தப்புதல் பெருங்கஷ்டம். எனினும் மஸ்னாவின் இறைபக்தியும், துணிச்சலும் அவனைக் காப்பாற்றி விட்டது.

சிறுமிகளை வேலைக்குச் சேர்க்கும் இன்னொரு கதையாக மங்கா வடு அமைந்திருக்கின்றது. ரிஸ்மினா என்ற பெண் வேலைக்கார சிறுமிக்கு செய்கின்ற கொடுமைகள் இக்கதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. எந்த வேலையென்றாலும் இந்தச் சிறுமியை ஏவுவது, அடிப்பது, சூடு வைப்பது முதலிய கொடுமைகள் நிகழ்கின்றன். இவ்வளவுககும் ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளாவின் வயதையொத்த சிறுமிதான் இந்த வேலைக்காரச் சிறுமி.

இவ்வாறு நடந்துகொள்வது பொலீஸீக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் வேலைக்கார சிறுமி மீது பரிவும் காட்டிக்கொண்டிருக்கின்றார் எதிர்வீட்டு ஆரிபா தாத்தா. தீடீரென கோலிங்பெல் அடிக்கிறது. பொலீஸார்தானோ என்று பயப்படும் ரிஸ்மினா பதட்டததோடு நிற்க, வந்தவர்கள் சொல்லும் விடயம் ரிஸ்மினாவை அதிர்ச்சியடைய வைக்க இருவரும் வைத்தியசாலையை அடைகின்றனர். அங்கே... ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளா இறந்து கிடக்கின்றாள்.

ரிஸ்மினாவை விட வேலைக்கார சிறுமிக்குத்தான் வேதனை அதிகமாக இருக்கின்றது. அது கீழுள்ள வரிகளில் அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

`நோனா அடிக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிய உத்தமி ஷர்மிளா, உம்மாவுக்குக் களவாக எல்லாத் தீன்பண்டங்களையும் தரும் என் அன்புத்தங்கை ஷர்மிளா, ஷர்மிளா தான் இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல்...'

இறுதியில் ரிஸ்மினாவின் இதயம் துடிக்கின்றது. தன் மகளாக வேலைக்காரச் சிறுமியை வளர்க்கப்போவதாக அவள் கூறுகையில் அந்தச்சிறுமி அதை மறுத்து, ஷர்மிளா இல்லாத வீட்டில் தான் இருக்கப் பேவதில்லை என்று கூறி தனது வீட்டுக்கு சென்று விடுகின்றாள்.

மனிதர்கள் போடும் திட்டங்கள் முற்று முழுதாக சரியாக இருக்காது. அல்லாஹ்வின் திட்டங்கள்தான் சரியாக இருககும் என்பதை இறைத்தீர்ப்பு என்ற கதை விளக்கி நிற்கிறது. வசதிவாய்ப்புகளோடு வாழும் ரிஸானாவுக்கு முப்பது வயதில் முர்ஷித் என்ற மகன். அவனுடைய திருமணத்தை தடைசெய்த படியே இருக்கும் ரிஸானாவின் நண்பியான சப்ரியத் ஆண்டி. உம்மாவும் சப்ரியத் ஆண்டியும் பார்ககும் பெண்களையெல்லாம் குறை கூறிக்கொண்டிருப்பது பிடிக்காமல் நல்மனம் படைத்த முர்ஷித் வெளிநாடு சென்று விடுகிறான். கதையின் இறுதி முடிவு மிகவும் சந்தோஷமாக அமைந்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே முர்ஷித் பெண்பார்க்கச்செல்லும் தாஹிரா என்ற பெண்னை உம்மா வேண்டாம் என்கிறாள். அல்லாஹ்வின் நாட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த அதே அழகில் தனது மழலைகளுடன் கணவரை இழந்து விதவையாக இருக்கிறாள் அந்தப்பெண் தாஹிரா. அவளை முர்ஷித் திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்து முதலில் ரிஸானா துடிக்க, சப்ரியத்துக்கு விட்மின் டொனிக் குடித்த பரவசம் ஏற்படுகிறது.

அடுத்தவரின் துக்கத்தில் சந்தோஷம் காணும் சப்ரியத்தின் திருவிளையாடல்களை புரிந்துகொண்டு, தனது நண்பியால் தனது மகனின் வாழ்வு இத்தனைக் காலங்களாக பாழ்ப்பட்டிருப்பதை இறுதியாக உணர்ந்து கொள்ளும் ரிஸானா, சப்ரியத்தைக் கூப்பிடாமல் தனது உறவினர்களுடன் தாஹிராவின் வீட்டுக்குச் சென்று திருமணம் பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. சப்ரியத் போன்றவர்கள் கதைகளில் மாத்திரம் உலாவும் பாத்திரங்களல்ல. நிஜத்திலும் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களை அறிந்து விலக வேண்டியது எங்கள் திறமையில் தங்கியிருக்கிறது.

இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் பகிடிவதை நடைபெறுகிறது. சிலர் அதைத் தாங்கிக் கொள்கிறார்கள். வேறுசிலர் படிப்புக்கே கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுகின்றார்கள். சமூக மயமாக்கல் என்ற பெயரில் நிகழும் இந்த கலாச்சாரம் வெறும் அநாச்சாரம் என்று இன்னும் மாணவ சமூகம் புரிந்துகொள்ளவில்லை. திசைமாறிய பறவை என்ற கதையில் வரும் அஸ்மா டாக்டர் ஆகும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அங்கு குழுமியிருந்த மாணவர் கூட்டம் அவளது ஹிஜாபை கழற்றி வீசச்சொல்கிறது. செருப்பை தலையில் வைத்து நடக்கச்சொல்கிறது. இறுதியில் புளித்த பாலில் மிளகாய்த் தூள் தூவி அதை அருந்த வைக்கிறார்கள். இந்த சம்பவம் அஸ்மாவை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இரைப்பையில் அலர்ஜி ஏற்படுவது மாத்திரமன்றி அவள் மனநோயாளியாகவும் மாறி விடுகின்றாள். காலம் கழிய பகிடிவதையில் நாயகனாக செயற்பட்ட முனாஸ் என்ற மாணவன் டாக்டராகி அஸ்மாவை இந்தக்கோலத்தில் சந்திக்கிறான். அவளது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவன் செய்த காரியத்தால் மனநோயாளியாகியிருக்கும் அஸ்மாவை இறுதியில் தன் மனைவியாக்கி அவளுக்கு வாழ்வு கொடுக்கின்றான். டாக்டராக வரமுடியாமல் போன அஸ்மா, டாக்டரின் மனைவியாகி நிற்பதைக் கண்டு ஊரே ஆனந்தப்படுவதாக கதை முடிந்திருக்கின்றது.

கோக்கி யார் என்ற கதை உள்ளத்தை உருக்கும் சம்பவமாக இருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் இரவுபகலாக நெருப்பில் வெந்து தனது மகனின் படிப்பு செலவுகளை மேற்கொள்ளும் காஸிம் காக்கா நம்பிக்கையான மனிதர். அவர் கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும்போது அவர் கொண்டுபோகும் நெய்பூந்தியை வாங்கவென்றே சிறுபிள்ளைகள் அவரது வருகைக்காய் காத்திருப்பார்கள். தந்தை படும் கஷ்டங்கள் தெரியாமல் வளரும் மகன் தப்ரிஸ் வீடுமுறைகளில் கொழும்புக்கு வந்து ஓரிரு நாட்கள் வாப்பா காஸிமுடன் தங்கிவிட்டுச் செல்வான். அவன் சாதாரணதர பரீட்சையில் நல்ல முறையில் சித்தியடைந்தாலும் அவனது ஒழுக்கத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் மனமுடைந்து இருதய நோயாளியாகிறார் காஸிம். தப்ரிஸ் உயர்தரம் கற்பதற்காக வேண்டி விண்ணப்பங்களுக்கு ஒப்பம் பெற காஸிமைத்தேடி வருகிறான். ஹோட்டலில் அவர் இல்லை. அவரது அறையிலும் இல்லை.

முதலாளியிடம் வந்து வாப்பா எங்கே என்று கேட்காமல் மரியதையின்றி கோக்கியார் எங்கே என்று கேட்க, முதலாளிக்கு கோபம் உச்சத்தை அடைகிறது. தறுதலையாக இருக்கிறானே என்று திட்டியவர் வைத்தியசாலைக்கு அழைத்துப்போகின்றார். போகும் வழியில் காஸிம் அடுப்படியில் வெந்து பட்ட கஷ்டங்களைச் சொல்ல தப்ரிஸூக்கு அடிமனதில் ஏதோ நெருடுகிறது. வைத்தியசாலையில் வைத்து காஸிம் காக்காவின் தலையை முதலாளி ஆறுதலாக தடவி விடும்போதே கண்மூடி காஸிம் இறந்து போகின்றார். தவறை உணர்ந்த தப்ரிஸ், முதலாளியின் உதவியுடன் வாப்பாவின் ஆத்ம சாந்திக்காக மீண்டும் பழைய தப்ரிஸாக மாறி படிக்கின்றான்.

இங்கே நான் கூறியவற்றிற்கும் அப்பால் இன்னும் பல நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. திறமையாகவும், வித்தியாசமான கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மனதை ஈர்க்கின்றன. அனைவரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 175/=

Monday, May 16, 2011

மிதுஹாவின் நந்தவனம் - சிறுவர் கதைகள்

மிதுஹாவின் நந்தவனம் சிறுவர் கதைகள் நூலுக்கான இரசனைக் குறிப்பு

ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள் தந்திருக்கும் மிதுஹாவின் நந்தவனம் என்ற நூல் சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அருள் வெளியீட்டகத்தினால் 72 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 16 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, பிரியமான சிநேகிதி, கட்டுரை எழுதுவோம் என்ற நூல்களுடன் இந்தத் தொகுப்பையும் தந்திருக்கும் ஜெனீரா அவர்கள் கிண்ணியாவை வதிவிடமாகக் கொண்டவர்.

ஏளனஞ் செய்யாதே, தன் வினை தன்னைச் சுடும், ஏமாற்றுபவர் ஏமாறுவார், முயற்சி வெல்லும், தாய் சொல்லைத் தட்டாதே, கேடு நினைத்தால், அடாது செய்பவன், அடி உதவுவது போல, வாயால் வந்த வினை, ஒற்றுமையே பலம், ஆசையின் விபரீதம், சுற்றுலா, மிதுஹாவின் நந்தவனம், திருந்திய உள்ளம், அருண்டவன் கண்ணுக்கு, கர்வம் கொள்ளாதே ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் பிரசுரம் பெற்றிருக்கின்றன.


திருமலை நவம் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'குழுந்தைகளுக்காக எழுதி வரும் ஜெனீராவின் கதைகளில் தர்மம், ஒழுக்கம், நீதி, அன்பு, பாசம், பற்று என்றெல்லாம் போதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால் வாசிப்பு அருகிவிட்ட இந்தக் காலத்தில் பெரியவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய கதைகளாக அவை இருக்கின்றன'.

உண்மையில் சொல்வதென்றால் சிறுவர்களுக்காக என்று தலைப்பிட்டு இந்நூல் வெளிவந்தாலும் இதை அனைவரும் படிக்கத்தான் வேண்டும். போட்டியும், பொறாமையும் தலை விரித்தாடும் இன்றைய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பிறரை கஷ்டத்தில் வீழ்த்திவிடும் எத்தனையோ பேர் இன்று நம் சமுதாயத்தில் வாழ்கின்றார்கள் என்று கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயம், தொழிலிலும் சரி, நட்பிலும் சரி வஞ்சகங்கள் தான் வலைபின்னி அடுத்தவனை குழிக்குள் தள்ளிவிடும் துரதிஷ்டங்கள் நிலவி வருகின்றன. எங்கு பார்த்தாலும் சண்டைகளும், சச்சரவுகளும் நம் கண்முன் காணக்கிடைக்கிறது. சொத்துக்காக பெற்றவர்களையே அவமானப்படுத்தி காவல் நிலையம் வரை கூட்டிச்சென்ற எத்தனை சம்பவங்கள் இன்று சரித்திரங்களாகி விட்டன? இவை எல்லாவற்றுக்குமான தீர்வுகள் இந்தச் சிறிய கதைகளில் மிகத் துல்லியமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றமை ஜெனீரா அவர்களின் திறமைக்கு சான்றாகும்.

மற்றவரை ஏளனஞ்செய்து தாம்செய்வதே சரி என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். உடலின் எல்லா பாகங்களும் சரிவர அமைந்தவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறாமல், ஊனமாக பிறந்தவர்களை கேலி செய்து மகிழ்வதை தம் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றார்கள். வேலைவெட்டியின்றி இருக்கும் பலர் செயற்கைக் காலுடன் இருப்பவர்களைப் பார்த்து ரொபோ என்று கூறி அவர்களை மானபங்கப்படுத்துகிறார்கள். ரொபோ போல அவர்கள் இருந்தாலும் உழைத்துச் சாப்பிடும் அவர்களை மதிப்பதில்லை. மானம் பற்றி யோசிக்காத இவர்கள் ஊனம்பற்றி யோசித்தல் சரியா என்பதை யோசித்திருக்கவேண்டும்.

மேலுள்ள கருத்தை உடையதாகத்தான் ஏளனஞ்செய்யாதே என்ற முதல் கதையானது கொக்கையும், காகத்தையும் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. கொக்கும் தான் வெள்ளை நிறமாக இருப்பதால் கருப்புக் காக்கை என காகத்தை ஏளனஞ்செய்கிறது. இயற்கை அழகு நிறைந்த பூவுலகில் காக்கை மாத்திரம் கருப்பாக இருப்பதாக நக்கலடிக்கிறது. எனினும் காகம் அதனால் மனமுடையவில்லை. அது தன் பக்க நியாயங்களை கொக்கிடம் எடுத்துரைக்கிறது. அதாவது கொக்கு வெள்ளையாக இருந்தாலும் அதன் மனதை கறுப்பென்கிறது. காகங்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக உணவு உண்பதை நாமும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். காகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒற்றுமையிணை வேறு எதனிடமும் கற்க முடியாது என்பது உண்மை. வேறு பறவை, மிருக இனங்களில் மாத்திரமன்றி மனித இனத்திடம் கூட இத்தகைய பண்பு இருக்கிறதா என்று காக்கை கேள்வி கேட்பது எம்மத்தியில் கேட்கப்படும் கேள்வியாகவே கருதலாம். குப்பைகளையும் உணவாகக்கொண்டு வாழும் காகத்தால்தான் நமது சூழலும் சுத்தமாக இருக்கிறது. இல்லாவிட்டால் மக்கள் தொற்றுநோய்களாலும், மரண அச்சுறுத்தலாலும் அல்லல்படுவார்கள் என்று சொல்கிறது ஆகாயத்தொட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படும் காக்கை. காக்கை கூறிய அறிவுரைகளைக்கேட்டு கொக்கு தலைகுனிவதாக கதை முடிந்திருக்கிறது.

இரண்டாவது கதையான தன்வினை தன்னைச் சுடும் என்பது பிறரை நோவினைப்படுத்தினால் தாமும் தண்டிக்கப்படுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல தம்பாட்டுக்கு இருந்த தேனீக்களின் கூட்டை கல்லெறிந்து உடைத்து விடுகிறான் றிப்தி என்ற குறும்புக்கார மாணவன். அதனால் கோபமடைந்த தேனீக்கள் அவ்வழியால் வருவோர் போவோர் எல்லோரையும் தாக்குவதுடன் றிப்தியையும் தாக்குகிறது. இதை அறிந்த ஆசிரியர் மாணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.

'பார்த்தீர்களா பிள்ளைகளே! நாம் உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டும். தேனீ எமக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. அதை உணராமல் கல்லெறிந்து கலைத்தால் என்ன செய்யும்? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்று விளக்கமளிக்கிறார்.

ஏமாற்றுபவர் ஏமாறுவார் என்ற கதை மிகவும் சிறப்பானது. நாம் ஒருவரை காரணமின்றி வஞ்சகமாக ஏமாற்ற நினைத்தால் அதே போல நாமும் ஒருநாள் நிச்சயம் ஏமாறியே தீருவோம். இது இறைவன் வகுத்த நியதி என்பதை இக்கதையினூடாக யதார்த்தபூர்வமாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியை ஜெனீரா அவர்கள். அரசமரத்தின் உச்சிக் கிளையில் வாழ்ந்து வந்த நாரைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கிறது காகம். நாரைகள் தம் இருப்பிடம் குறித்த நியாயத்தை விசாரிக்கையில் காகம் கரைந்து தன் இனத்தாரை அழைத்து நாரைகளை துன்புறுத்துகிறது. தப்பினோம் பிழைத்தோம் என்றவாறு போன நாரைகள் மறந்தும் அப்பக்கம் தலைகாட்டவில்லை. காகம் ஏமாறும் சந்தர்ப்பம் இப்போது ஆரம்பிக்கிறது. ஆம் குயில் தன் முட்டைகளை காக்கையின் கூட்டில் இடுகிறது. அதை அறியாத காகம் அடைக்காத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் வளர வளரத்தான் அவற்றின் குரலுக்கிடையே இருந்த வித்தியாசத்தை உணர்கிறது தாய்க்காகம். 'நானே தந்திரமான பறவை. எனக்கே யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?' என்று எண்ணுகிறபோது, வந்துசேர்கிறது குயில்கள். நீ ஏமாற்றியதால் இன்று நீயே ஏமாந்துவிட்டாய் என்று சொல்லுகையில்தான் காக்கைக்கு பொறி தட்டுகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற ஆழ்ந்த கருத்து பொதிந்த பழமொழியை அள்ளித்தெளித்திருக்கிறார் கதாசிரியர்.

தாய்சொல்லைத்தட்டாதே என்ற கருத்துள்ள பல கதைகளை வாசித்திருக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்றாக இக்கதையும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் மாணவன் மிகவும் துடிதுடிப்பானவன். அவனுக்கு கடலில் இறங்கி விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நண்பர்கள் வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவார்கள் எண்று எண்ணியதால் பல நாட்கள் தன் ஆசைகளை அடக்கி வைக்கிறான். ஒருநாள் அவன் எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஒரு நாளில் பாடசாலைவிட்டு வரும்போது மெதுவாக கடலில் காலடி எடுத்து வைப்பதற்காய் பாறைகளில் நடக்கிறான். எதிர்பாராதவாறு கால் சறுக்கிவிட சிப்பியும் பாறைக்கற்களும் கைகளையும், கால்களையும் உராய்ந்து பதம்பார்த்து விடுகின்றன. சீருடைகள் பாசியை அரவணைத்து பச்சையாகிப் போயின. இதே காயங்களோடு கடலில் விழுந்திருந்தால் நிச்சயம் அவன் கரை சேர்ந்திருக்கமாட்டான். அதை எண்ணியவன் அப்போது முதல் இனி தாய் சொல்லைத் தட்டவே கூடாது என்று உணர்கிறான்.

அடாது செய்பவன் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கதை கேடு நினைத்தால் கேடே விளையும் என்ற கருத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கானகத்தில் நடுவில் அழகியதொரு பொய்கை. அதில் நீரருந்தவரும் பிராணிகளை கொன்று சாப்பிட்டு வயிறு புடைக்கிறது சிங்கம். தானே ராஜா தானே மந்திரி என்ற கர்வத்துடன் வாழ்ந்துவந்த சிங்கம் அன்று யானை ஒன்றை வேட்டையாட வேண்டும் என்று எண்ணி யானையின் அருகே செல்கிறது. தனது நண்பர்களை சிங்கத்துக்கு பலிகொடுத்த வேதனையில் இந்த யானை சிங்கத்தின் ஆட்டத்தை அடக்க நினைத்து தன் தும்பிக்கையால் சுழற்றி சிங்கத்தை பாறைநோக்கி வீசியது. வலிதாங்க முடியாமல் அவலக்குரல் எழுப்பும் சிங்கத்தை ஆறுதல் படுத்த அங்கே ஒரு ஈ கூட இல்லை. எல்லாமே சிங்கம் அடிபட்டதைப் பார்த்து குதூகலிக்கின்றன. மகிழ்ச்சியுடன் நீரருந்துகின்றன.

இந்தக் கதை வெறுமனே விலங்குகளை வைத்து எழுதப்படவில்லை. எம்முடன் பழகி எம்மையே விலைபேசும் பலர் இருக்கிறார்கள். பசுத்தோல் போர்த்திய புலிகளாக இருந்துகொண்டு எத்தனை பிரச்சனைகளை விளைவிக்கிறார்கள். அடுத்தவன் நல்லாயிருப்பதை கண்டு பொருமி, அவர்களின் மகிழ்ச்சியை நிரந்தரமாக அழித்துவிடும் யோசனைகளுடன் வாழ்ந்து வரும் இவர்களுக்காகவும் தான் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. அநியாயம் செய்பவன் அநியாயமாகவே அழிந்து போவான் என்று உறுதியாயக் கூறும் இந்தக் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது.

ஆசைகள் இருந்தால்தான் அவன் மனிதன். ஆனால் பேராசை என்பது மனிதனுக்கு எமன். அந்த பேராசைதான் வாழ்வின் அந்தம்வரை எமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. ஆசையின் விபரீதம் என்ற கதையாடலும் இதனைத்தான் உணர்த்திச்செல்கிறது. தன்னிடம் நகை இல்லை என்பதற்காக எதிர்வீட்டுப் பெண்ணிடம் நகையை வாங்கிப்போகிறாள் பவ்யாவின் தாய். நகை காணாமல் போகிறது. பக்கத்து வீட்டுக்காரி அதை இரண்டு பவுண் நகை என்கிறாள். வாங்கிய அவசரத்தில் தங்கமா, இமிட்டேஷனா என்று கூட பார்க்காததால் அநியாயமாக அகப்பட்டுக்கொண்ட பவ்யாவின் தாய் அமைதியை இழக்கிறாள். புன்னகை இருக்க பொன்னகை எதற்கு என்று அவளைப் பார்த்து மகள் பவ்யா கேட்கும் கேள்வி ஆடம்பர ஆசை கொண்ட அனைவருக்கும் பொதுவானது.

புத்தகத்தின் தலைப்பான மிதுஹாவின் நந்தவனம் என்ற கதை ஆசிரியரின் சொந்தக்கதை என்பது புலப்படுகிறது. பிரபல சிறுகதை எழுத்தாளர்களான நிஸ்வான் ஆசிரியரின் வீட்டுக்கும், நயீமா டீச்சரின் வீட்டுக்கும் சென்றதாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. பூ மரங்களை நடுவதில் அதிக ஆர்வம்கொண்ட மிதுஹாவைப் பற்றியதுதான் இந்தக் கதை. எங்கு போனாலும் பூ மரங்களை ரசிக்கும் பழக்கமுடைய மிதுஹா பேருவலை ஜாமியா நளீமிய்யா வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது இயற்கை ரசனைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. மிதுஹாவுக்கு ஜோடியாக இருக்கிறார் பஸ்மியா. அவரும் மிதுஹாவைப் போன்று பூ மரங்களை வளர்ப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் என்பது புலனாகின்றது.

அதுபோல மாகாத் பெரியப்பா என்ற ஒருவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மிதுஹாவின் பூமர ஆசை அறிந்த பெரியப்பா அவளுக்கு பூமரக் கன்றுகளைக் கொடுத்தாலும் வில்வம் கன்றை வாங்க மறுக்கிறாள் மிதுஹா. எப்படியோ பெரியப்பாவின் ஆசைக்காக வில்வம் கன்றை எடுத்துவந்து நாட்டுகின்றாள். கதாசிரியரான ஜெனீரா அவர்கள் இக்கதையின் இறுதியில் எம்மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ சோகத்தை இழையோட விடுகிறார். அந்த வரிகள் கீழுள்ளவாறு அமைந்திருக்கின்றன.

'இன்று மாகாத் பெரியப்பாவுமில்லை. அவர் தந்த பூமரங்களும் இல்லை. அவர் ஆசையோடு தந்த வில்வம் மட்டும் பூத்துக் காய்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றைக் காணும் போதெல்லாம் மிதுஹாவின் உள்ளத்தில் மாகாத் பெரியப்பாவின் நினைவுகள் அலைமோதிக்கொண்டிருக்கும்.'

அன்புப் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் இவ்வாறான அறிவுரை சொல்லக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள் என்று கூறுவதுடன், ஆசிரியத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கதாசிரியரான ஜெனீரா அவர்கள் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடிய இவ்வாறான பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - மிதுஹாவின் நந்தவனம்
நூலாசிரியர் - ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான்
முகவரி - எகுத்தார் ஹாஜியார் வீதி, கிண்ணியா.
தொலைபேசி - 026 2236487
வெளியீடு - அருள் வெளியீட்டகம்
விலை - 150/=

Monday, April 18, 2011

'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி

'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்' தொகுதி பற்றிய எனது பார்வை

பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.

பாகம் ஒன்றில் சரத்சந்திரர், தகழி சிவசங்கரப்பிள்ளை, கிஷன் சந்தர், மக்தூம், வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும், பகுதி இரண்டில் அமரர் கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முஹம்மது சமீம், சுபத்திரன் ஆகியோர் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தின் அட்டையை செ. கணேசலிங்கன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நீர்வை பொன்னையன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர்.




பேராசிரியர் க. கைலாசபதிக்கு சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்தத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா இவ்வாறு குறிப்பிடுகின்றார். இலங்கையினதும், இந்தியாவினதும் குறிப்பிட்ட காலகட்டத்தின் முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் 'குறுக்குவெட்டுமுகம்' இந்நூலாக்கத்தின் தொகுப்பாகின்றது. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எழுத்தாக்கங்களும் ஆளுமை வெளிப்பாடுகளும், முற்போக்கு சிந்தனைகளின் பன்மை நிலைகளைப் புலப்படுத்துகின்றன. முற்போக்காளர் ஒரே அச்சில் வார்த்த வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற புலக்காட்சியும் இங்கே தகர்ப்புக்கு உள்ளாகின்றது. இது இந்நூலாக்கத்தின் ஒரு பரிமாணம். இதன் வேறொரு பரிமாணம் ஆளுமையின் பன்முகத் தன்மைகள் ஊடே கருத்தியலுக்குத் திரும்புதலாக அமைகின்றது.

கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தனது முன்னுரையில் கா. சிவத்தம்பி அவர்களின் கூற்றாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'முற்போக்கு எனும் சொற்றொடர் சமூக நிலைப்பட்ட ஒரு கருதுகோலாகும். அச்சொற்றொடர் மனிதன் சமூகம் தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை, மதிப்பீடுகளை, விபரிப்பதாகும். சமூகத்தின் படிநிலை வளர்ச்சிபற்றிய கண்ணோட்டமும் இதனுள் அடங்கும். பெரும்பாலும் மார்க்ஸியம் என்ற தத்துவத்தை வரித்துக்கொண்டவர்களது அரசியல், சமூக, இலக்கிய நடவடிக்கைகள் இந்த முற்போக்குத் தன்மை கொண்டிருப்பதை அறியலாம். முற்போக்குவாதம் மார்க்ஸியம் கூறும் சமூக வளர்ச்சி விதிகளை கற்றுக்கொள்கிறது'.

வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் திரு. தம்புசிவா அவர்களைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். 'நூலாசிரியர் தம்பு சிவசுப்பிரமணியத்தை கடந்த பல தசாப்தங்களாக அறிவேன். 1970 களில் கற்பகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்து இன்று வரை எழுதிக்கொண்டிருப்பவர். இளமைக்காலம் தொட்டு இன்றுவரை மார்க்ஸிய அனுதாபியாக இருந்து வருபவர். புனைவு, பத்தி, விமர்சனம், சஞ்சிகை ஆசிரியர் என பல்வேறு தளங்களில் முகம்கொண்டவர். பண்பாளர். அவர் அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது நூலாக்கம் பெற்றுள்ளன. இலகுவான நடையில் பொது வாசகர்களும், மாணவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் தொகுப்பு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், முற்போக்கு இலக்கியக் காரர்களை அறிந்துகொள்வதற்கும், அவர்களது ஆக்கங்களை தேடிப் பார்ப்பதற்குமான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை'.

வங்கப்பெண்களின் விடுதலைக்கும், எழுச்சிக்கும் தன் பேனா மூலம் குரல்கொடுத்த விடுதலை வீரரான சரத் சந்திரர் அவர்கள் வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் எனும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிறந்தவர். இவர் ஆட்டத்திலும், இசையிலும் அதிக ஈடுபாடுகாட்டி வந்தவர். குழந்தை என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி வந்த சரத்சந்திரர், ஆங்கில நாவல்களையும், அறிவியல் நூல்களையும் அதிகமாக வாசிப்பதில் ஆர்வமிக்கவர். பிறர் துன்பத்தைக் காணச் சகிக்காத இவர், அக்கம்பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணை புரிந்து வந்தார்.

பழைமை சிறப்புடையதானாலும், அதை பழைமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கிவிடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம். என்று தெளிவுபடுத்தியவர் சரத்சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும், காந்தியம், இந்து முஸ்லிம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம்பசலி பழைமைவாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஓலமிட்டனர்.

சரத் சந்திரரின் இலக்கியம் உயிர்துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால்தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை. பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத்சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள். சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார். 'அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல. இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல. அவர் இலட்சிய மனிதராவார். இத்தனை சிறப்புக்களையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது'

தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் தகழி என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் படைப்புளில் அவர் அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது. தகழியின் சிறுகதைத் தொகுதி 1934 இல் வெளிவந்தது. இவர் சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட அவலங்களை, போராட்டங்களை தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். 1956 இல் வெளிவந்த இவரது செம்மீன் என்ற நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. நில அமைப்பு சார்ந்த இலக்கியப் படைப்புக்கள் என்ற வகையில் கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையை செம்மீன் நாவலில் தந்திருப்பதால் அவரை 'குடா நாட்டின் வரலாற்று நாயக்' என்று சிறப்பிக்கின்றனர்.

இந்த நாவல் இருபது நாட்களுக்குள் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மக்களின் ஏற்றத்தாழ்வுகளில் இருக்கக்கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும், உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளரான இவர், தனது 85 ஆவது வயதில் உயிர்நீத்தார்.

இந்திய வாழ்க்கையின் அழகையும் அவலங்களையும் சித்தரித்த புனையியல்வாதியாக கிஷண்சந்தர் போற்றப்படுகின்றார். இவர் தனது இளமைப்பருவம் முதல் துடிப்புள்ள கொள்கைப்பற்றுறுதி கொண்ட செயல்வீரனாக இருந்தார். கே.ஏ. அப்பாஸ் என்பவர் கிஷண்சந்தரைப் பற்றி குறிப்பிடுகையில் 'கிஷண்சந்தர் படைப்பாளுமை மிக்கவர். உருதுமொழியில் அவருடைய நயமான எழுத்தாற்றலை, ஆற்றொழுக்கமான உரைநடையை எழுதிக் குவிக்கும் திறமையைக்கண்டு ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் ரகசியமாகப் பொறாமைப்பட்டேன்' என்கிறார்.

அவர் தனது தந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்த காலத்தில் காஷ்மீர் வாழ் விவசாயிகளின் கூலிகளின் பரிதாபத்துக்குரிய ஏழ்மையைக் கண்டு வருந்தினார். இயற்கைக்கும், மனிதனுக்குமிடையே இருந்த வேறுபாடு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் காரணமாக அவர் மனதில் பரிவு உணர்ச்சி ஏற்பட்டு அது ஆழப் பதிந்துவிட்டது. அத்துடன் கிஷண்சந்தர் காதல்வயப்பட்டு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோதிலும் அவருக்கு ஏற்பட்ட ஆழமான காதல் உணர்ச்சி ஒரு மென்மையான நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கிணங்க அவரது பல படைப்புகள் அமைந்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் 1908 இல் பிறந்தவர் கவிஞர் மக்தூம். மாமா பஷீருத்தீன் அவர்களிடம் வளர்ந்த இவர், தினமும் மசூதியை சுத்தம் செய்தலையும், தொழுகைக்கு வருவோரின் பாவனைக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதையும் தனது அன்றாடப் பணியாகக்கொண்டிருந்தார். 1933 க்குப் பின் தன்னுணர்ச்சிக் கவிதைகளைப் படைத்த மக்தூம் தொன்மை இலக்கியங்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1939ல் இரண்டாம் உலகப்போரை கண்டனம் செய்து பாடல்கள் எழுதினார். முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்த்து வந்த இவர், நாடகங்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் நகைச்சுவை உணர்வுமிக்கவரும் கூட. அவர் 1969 இல் இறையடி சேர்ந்தார்.

திருநெல்வேலி ராஜவல்லிபுரம் எனும் கிராமத்தில் 1920 இல் பிறந்த வல்லிக்கண்ணன் அவர்கள் சென்ற தலைமுறை எழுத்தாளருக்கும், இந்தத்தலைமுறை எழுத்தாளருக்கும் பாலமாக விளங்கியவர். பெயர், புகழ், பட்டங்களை விரும்பாத உண்மைப் படைப்பாளியான இவர், தனது 16 ஆவது வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகையை நடாத்திய பெருமைக்குரியவர். 30 வயதுக்குள் 25 நூல்கள் வரை வெளியிட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் என்று தொடர்ந்த இவரது எழுத்துலக வாழ்வு திறனாய்வு, சஞ்சிகை, புதுக்கவிதை, வரலாறு என்று தொடர்ந்தது. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞராகவும், முன்னுரை எழுதும் முன்னுரை திலகமாகவும் அறியப்பட்ட இவர் முற்போக்கு எழுத்தாளர்கள் மீது அளவுகடந்த தோழமை உணர்வுடன் தனது கடைசிக்காலம் வரை இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண உழவர் குடும்பத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். மக்களுடைய வாழ்வியலை ஆதாரமாக வைத்து இவரது படைப்புக்கள் உருப்பெற்றதால் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். அரசியல், சமூகம், காதல், பல்சுவை என பலதரப்பட்ட படைப்புக்களைப் படைத்த இவரது இலக்கியப் பிடிப்பும், கவித்திறனும் கவிதைகள் மூலம் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன. பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த இவர், 1951 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். பலராலும் அறியப்பட்ட பட்டுக்கோட்டையார் தனது 29 ஆண்டு வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக வெளிப்படுகின்றார்.

1933 இல் பிறந்த க. கைலாசபதி அவர்கள் இலக்கிய மரபில் புதிய பரிமாணங்களை உருவாக்கியவர். இவர் பேராசான் மு. கார்த்திகேசன் அவர்களின் மாணவராவார். தினகரன் நாளிதழின் ஆசிரியராக கடமை புரிந்த இவர், 1961 இல் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக சேர்ந்து 1966 இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவர் கவிதை, சிறுகதை, நாடகங்களை எழுதியிருக்கிறார். 'பூ பூக்காமலேயே சடைத்து வளரந்து பெரும் தோற்றம் காட்டும் தமிழறிஞர் மத்தியில் பூத்துக்காய்த்துக் கனிந்து நின்றது கைலாசபதி என்ற பெருமரம்' என்று அவரைப்பற்றி பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு குறிப்பிட்டிருக்கிறார்.

பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை எனும் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் பசுபதி படாடோபத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு சாதாரண மனிதர். அவர் முற்போக்கு இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட செயல்வீரராகவும், போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர். இவரது கவிதையில் கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும், போராட்ட உணர்வும், தர்மாவேசமும் மிகையாக காணப்பட்டன. இளமைக் காலத்திலிருந்தே சாதிவெறியை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தவர்.

எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் பசுபதியைப் பற்றி குறிப்பிடுகையில் 'நிலப் பிரபுத்துவத்தின் சாபக்கேடான சமூகக் கொடுமைகட்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் உட்பட்டு சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்குமாகத் தன் இளம்பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் க. பசுபதி' என்கிறார். 'மரணம் தன்னை நெருங்கி வருவதை அறிந்திருந்தாலும் அதற்காக கலங்காமல், எதிர்கால நம்பிக்கையை ஊட்டி விடுதலைக்காக ஏங்கி நிற்கும் மக்களை நினைவுபடுத்தி நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ளார் பசுபதி' என்கிறார் கே. டானியல்.

நாவல் இலக்கியத்துறையில் 40 நாவல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள செ. கணேசலிங்கன் அவர்கள் மு. வரதராஜன், அகிலன், காண்டேகர், ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துக்களில் கவரப்பட்டவர். இவர் பெண்ணிலைவாத சிந்தனைகளை மார்க்ஸிய நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் குமரன் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து ஈழுத்து இலக்கயத்துக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர். பல்துறை சார்ந்த பரிமாணங்களுடன் மார்க்ஸிய சிந்தனையில் பற்றுறுதியுடன் செயற்பட்டு இன்றும் சோர்ந்துவிடாமல் ஈழுத்து எழுத்தாளர்களுடைய நூல்களை குமரன் வெளியீடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

'இளம் எழுத்தாளர்கள் பலருக்கு ஏணியாக திகழ்ந்து வரும் நீர்வை பொன்னையன் அவர்கள் 1930ம் ஆண்டு யாழ்ப்பாணம் நீர்வேலி எனும் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தின்படி வாழ்க்கையை வாழும் உயர்ந்த இலட்சியம் கொண்டவர். தான்கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல் நேர்மையான எழுத்தாளராக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைத்து வந்தாலும் புகழ்ச்சி, பட்டங்களுக்கெல்லாம் சிறுமைப்பபட்டுவிடாமல் வாழ்ந்து வருகின்றார்.

இவர் கல்விகற்கும் காலத்திலேயே மாணவர் போராட்டங்களில் பங்குகொண்டார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்கொடுக்கத் தவறாத ஒரு இலட்சியவாதியாகவே இருந்தார். 1957 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர் அதன் பின் பல ஆண்டுகளாக வேலைதேடி அலைந்து கிடைக்காததால் தோட்டக்காரனாகவே வாழ்ந்தவர். 'சமுதாயத்தின்கண் தான் தரிசித்த போராட்டங்களை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைப் பட்டைத்தீட்டி மக்களுக்கு வழங்குகின்றவனே உண்மையான படைப்பாளி' என்று கூறிவரும் நீர்வை பொன்னையன் அவர்கள் எல்லோருடனும் மிக இனிமையாக பழகக்கூடியவர். எதற்கும் மனஞ்சோராத இந்த ஆக்க இலக்கிய கர்த்தா தொடர்ந்தும் நீண்டகாலம் தனது கலை இலக்கிய சேவையை மக்களுக்காக ஆற்றவேண்டுமென்று இலக்கிய நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன' என்கிறார் நூலாசிரியர் தம்புசிவா அவர்கள்.

மார்க்ஸிய தத்துவத்தை இன்றுவரை ஏற்று அதன்படி செயற்படுகின்றவர்களில் முஹம்மது சமீம் அவர்கள் முன்நிற்கின்றார். பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்களில் கொள்கைவழி நின்று செயற்படுகின்ற கொள்கைவாதியாக இவர் விளங்குகின்றார். கலாசார திணைக்களத்தின் மூலம் கலாபூஷணம் விருதைப் பெற்றுக்கொண்ட இவரின் ஆரம்பகால பள்ளிப்படிப்பு அவர் பிறந்த ஊரான பதுளையில் அமைந்திருந்தது.

சாந்த சுபாவமும் எல்லோருடனும் அன்பாக பழகும் குணத்தையும் கொண்ட சமீம் அவர்கள் இலங்கை சர்வகலாசாலையில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றபின் ஐம்பதுகளில் சாஹிரா கல்லூரியின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்று தற்போது இன்டர்நெஷனல் கல்லூரியை நடாத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1935ம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த கவிஞர் சுபத்திரன் சொல்லிலும், செயலிலும் வழுவாத உன்னதமானவர். முற்போக்குத் தளத்தில் நின்று மக்கள் விடுதலைக்காக உழைத்தவர். தங்கவடிவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராவார். இவர் கட்சிக் கவிதைகள், அரசியல் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுக் கவிதைகள் என்று பல்வேறு தளத்தில் நின்று எழுதியவர். அக உணர்வு சார்ந்து அவர் எழுதிய கவிதைகள், அவர் மனதில் உருவாகிய உணர்ச்சி வயப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருக்கிறது. மேலும் அவருடைய கவிதையில் உள்ள சிறப்பு என்னவென்றால் எவர் பொருட்டு அவர் தன் கவிதைக் குரலை ஒலித்தாரோ அவர்களில் ஒருவராகத் தன்னை நிறுத்தியே தனது குரலை அவர் ஒலித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தி திரு. தம்புசிவா அவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் இந்நூலானது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களோடு இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பை வாசித்துப் பயனடைய வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்!!!

நூலின் பெயர் - முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
நூலாசிரியர் - த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா)
முகவரி - 9/23, Nelson Place, Wellawatta.
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை - 50/= (இந்திய விலை)

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14177:2011-04-18-06-18-48&catid=4:reviews&Itemid=267

Thursday, April 7, 2011

'தாய் மடி தேடி' - சிறுகதைத் தொகுப்பு

'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பு

'இலக்கியம் காலத்தின் கண்ணாடி. மக்களே வராலாற்றின் உந்து சக்தி. இலக்கியப் படைப்புக்கள் அந்த மக்களின் வாழ்வை அவர்களது இன்ப துன்பங்களை, போராட்டங்களை, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும். மக்களை மறந்து வானத்தையும், முகில்களையும், மலைகளையும், தென்றலையும், காதலையும் பற்றி மாத்திரம் எழுதினால் அது இலக்கியமாகி விடாது. இயற்கையுடன் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் இணைக்காமல் படைப்புகள் புனைவதில் பிரயோசனமில்லை' என்று திரு. நீர்வை பொன்னையன் அவர்களின் முன்னுரையுடனும், பாரதி இராஜநாயகம் அவர்களின் அணிந்துரையுடனும் அமைந்திருக்கும் தாய் மடி தேடி என்ற இந்த சிறுகதைத்தொகுதி 113 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

நான் சீதையல்ல, துள்ள முடியாத புள்ளி மான், தனிமரம், ஊனம், அறுவடையாகாத விதைப்புக்கள், கருமுகில் தாண்டும் நிலவு, உதயம், இப்படியும், தாய் மடி தேடி, எச்சில் என்ற தலைப்புக்களைக் கொண்டு வெளிவந்திருக்கும் 'தாய் மடி தேடி' என்ற இச்சிறுகதைத்தொகுதியின் ஆசிரியர் திருமதி. கார்த்திகாயினி சுபேஸ். இவரது சிறுகதைகளில் மனித நேயம் மிகையாகக் கூறப்பட்டுள்ளது. சமூக அக்கறை எல்லா கதைகளிலும் விரவி நிற்கிறது. போரின் போது ஏற்பட்ட இழப்புக்கள், தவிப்புக்கள் என்பன வடுக்களாக மாறி வதைப்பதை வார்த்தைகளால் வடித்திருக்கிறார்.



'கார்த்திகாயினியின் சிறுகதைகள் ஈழத்து இலக்கிய உலகில் கவனிப்பை பெற்றுக்கொண்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சமகாலப்பிரச்சனைகளை அவர் தன்னுடைய கதைகளின் கருவாக பயன்படுத்தியிருக்கிறார். அந்தக் கருவை கதையாகச் சொல்லும் பாணி அவரது வெற்றிக்கு பாலமாக அமைந்துள்ளது' என்ற திரு. பாரதி இராஜநாயம் அவர்களின் கருத்தை ஆமோதித்து கதைக்குள் செல்கிறேன்.

நான் சீதையல்ல என்ற முதல் கதை யுத்தகாலத்தின் நெருக்கடியை களமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் சீதா என்ற பெண் தன்னுடைய தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். ஆறு மணியாகியும் மகள் இன்னும் வீட்டுக்கு வராததையிட்டு பதற்றப்படும் அம்மா கமலத்தை சமாதானபப்படுத்துகிறார் அப்பா. திடீரென குண்டுச்சத்தம் காதைத் துளைக்கிறது. கமலம் ஓலமிட, சற்றுமுன் சமாதானப்படுத்திய அப்பா, கமலத்துக்கு இவ்வாறு திட்டுகிறார்.

'குமர்ப்பிள்ளையை இந்த நேரத்தில் எங்க விட்டனி? நாடு கிடக்கிற கிடையில நாளைக்கு கலியாணம் முடிச்சுப்போறவளை கண்டபடி றோட்டில திரிய விட்டனியே? அவளுக்கு ஏதும் ஒன்டென்டால் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லிறது?'

இதில் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறோம் என்று தந்தை கேட்கும் கேள்வி நியாயமானது. எதிர்காலத்தில் எந்தவிதமான கேலிப் பேச்சுக்களுக்கும் சீதா உட்பட்டுவிடக்கூடாது என்ற அவரது எண்ணம் மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குப்பின் சீதா வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளைப் பார்த்து ஊரவர்கள் 'ஏய். உதில போறாளே. அவள் தான் சீதா. இரண்டு மாதமா ஆமிக்காரன் பிடிச்சு வச்சிருந்தவன்' என்று குத்தலாக பேசுகின்றனர். அந்தச் சம்பவம் சீதா பெற்ற அவமானத்தை கண்முன் நிறுத்தக்கூடிய வகையில் எடுத்தாளப்பட்டிருப்பது சிறப்பாகும். கதையின் இறுதியில் சீதா இரண்டு மாதங்களாய் ஆமியில் நின்றவள் என்பதால் சம்பந்தியர் சீதாவை வேண்டாம் என்றும், தமது மகனுக்கு வேறு இடத்தில் பெண் தேடப் போவதாகவும் கூறுகின்றனர். போதாத குறைக்கு ராமன் சீதையை தீக்குளிக்கச் ;சொன்ன கதையை உவமித்து பேசிவிடுகின்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் சீதா கோபத்தில் கூறும் வார்த்தைகள் வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது

'அண்டைக்கு அந்தச் சீதை தீக்குளிச்சு ராமனோட சேர்ந்தாள் என்று என்னையும் தீக்குளிக்கச் சொல்லுறியளோ? நான் சீதையல்ல. சீதா' என்ற வரிகள் அச்சொட்டாக அந்தச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதில் கார்த்திகாயினி அவர்கள் கையாண்டிருக்கும் சீதை, சீதா என்ற பெயர்கள் வலுவாகப் பொருந்தி நிற்கின்றன.

துள்ள முடியாத புள்ளி மான் என்ற கதையிலும் ஒரு பெண்ணின் சோகம் சொல்லப்பட்டிருக்கின்றது தாயானவள் சாந்தாவிடம் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் விரக்திச் சிரிப்பொன்றை உதிர்த்து, எனக்கு நேர்ந்த கதியை தரகருக்கு சொன்னியாம்மா என்று சாந்தா கேட்கும் போது சாந்தாவின் சோகம் நன்கு புலப்படுகின்றது. எப்படியம்மா ஒரு தாயால் இதையெல்லாம் சொல்ல முடியும் என்று சாந்தாவின் தாய் தலையிலடித்து அழும் அழுகையில் இதயம் கடுமையாக வலிக்கிறது.

எதிர்பாராத தினமொன்றில் நடந்த பயங்கரச் சம்பவத்தை ரசனை மாறாமல் அழகிய மொழிநடையுடன் கூறப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயம். அன்று அந்த சீருடையினர் சாந்தாவுக்கு செய்த அட்டகாசங்கள் அப்பட்டமாக இந்தக் கதையில் சாயம் வெளுக்கப்படுகிறது. தன் கண் முன்னாலேயே அண்ணனை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கிவிட்டு, சீருடையினர் தரதர என்று சாந்தாவை இழுத்துக்கொண்டு போகின்றனர். இரண்டு நாட்களின் பின் சாந்தா கற்பை இழந்து திரும்பி வருகின்றாள். உயிரை விட பெறுமதியான பெண்மையை அவள் கதறக்கதற சூறையாடிவிட்ட மிருகங்களின் வக்கிரப் புத்தி ஆழமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதையின் இறுதி முடிவில், சாந்தா எதிர்பார்த்தது போலவே அவளது திருமணம் தடைப்பட்டுப்போவது கவலையாய் இருக்கிறது.

ஒரு நிலா இரவில் சாந்தா வாசற்படியில் அமர்ந்து வெளியே நோக்குகையில் தூரத்தில் நெடிய வளர்ந்த பனையும், அதன் அருகே வாரிசைப்போல சிறிய பனையும் காணப்படுவதாக கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இறுதித்தருவாயில் சாந்தாவின் தாய் இறந்துவிட்டாதாகக் கூறியது மட்டுமில்லாமல் அவள் அன்று பார்த்த அந்த நெடிய பனை மரமும் காணப்படவில்லை என்று கூறி பனையை தாய்க்கு உவமித்து கதை கூறியிருக்கும் பாங்கு சுவாரஷ்யமாக இருக்கிறது.

தனிமரம் என்ற சிறுகதையானது சுனாமியின் கொடுமையை மீண்டும் நினைவுபடுத்திச் செல்கின்றது. மனைவி செல்வியுடனும், குழந்தைகளான விஜி, ஜெனியுடனும் ஆனந்தமாக வாழுகிறான் தாஸ். யுத்த நெருக்கடியிலிருந்து சற்று விடுபட்ட தாஸ், நத்தார் தினத்தை குதூகலமாகக் கழிக்க பிள்ளைகளையும் அழைத்து, சுற்றத்தாருடன் சேச்சுக்கு செல்கின்றான்.

பொழுதுபட நாளை காலையில் முக்கிய அலுவல் இருப்பதாகவும் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்றும் கூறி செல்வியை அழைக்கிறான் தாஸ். தன் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த செல்வியும், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு 'ஆ. அப்ப சரி. நான் போறன்' என்று விடைபெறுகிறாள்.

'போறன் என்று சொல்லாதை பிள்ளை, போட்டு வாறன் என்று சொல்லு. கவனமாய்ப் பாத்துப்போட்டு வாங்கோ' என்று கூறி வழியனுப்பி வைக்கின்றனர் சுற்றத்தார். நாயொன்று பெரிதாகக் குரைக்க, அதைப் பார்த்து பயப்படும் செல்வியை கிண்டலடிக்கிறான் தாஸ். எனினும் செல்வியின் மனத்திரையில் ஏதோ நடக்கக்கூடாததொன்று நடக்கப் போவதாக பயங்கரக் காட்சிகள் நர்த்தனமாடுகின்றன.

அடுத்தநாள் விஜி தாஸிடம் பட்டாசு வாங்கிவருமாறு தன் மழலை மொழியில் கூற அவர்களிடமிருந்து விடைபெறுகின்றான் தாஸ். கொஞ்ச நேரத்தில் அலை வருது, அலை வருது என்ற மரண ஓலம் செல்வியின் காதில் விழ, அந்த கணத்திலும் அவளுக்கு யுத்தகால வாழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. ஆமி வருது ஓடுங்கோ என்று கேள்விப்பட்டிருந்த அவளால் அலை வருது ஓடுங்கோ என்ற கூக்குரலை சுதாகரித்துக்கொள்ளுமளவு நேரமிருக்கவில்லை. காரணம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வரும் கடல் அலை. பிள்ளைகளை இறுகப் பற்றியவாறு செல்வி ஓட எத்தனிக்கையில் விழுந்துவிடுகிறாள், விஜியைப் பிடித்திருந்த பிடி தளர்ந்து அவள் கண் முன்னாலேயே அலையின் ராட்சத வாய்க்குள் விஜி அகப்பட்டதை பார்த்து கதறுகிறாள் செல்வி.

விடயம் கேள்விப்பட்டு வந்த தாஸ் ஊரின் தலையெழுத்தே மாறிப்போயிருந்த நிலையில் தன் மனைவி பிள்ளைகளுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு திரும்பும் போது எதிலோ கால் இடறுகிறது. குனிந்து பார்த்தால் அங்கே செல்வியும், ஜெனியும் இறந்து கிடக்கிறார்கள். தாஸ் அவர்களை தன் மடியில் இருத்தி கதறியழுதவாறு விஜியைத் தேடுகிறான். மருத்துவமனையில் சில பிரேதங்கள் இருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்க்க... அங்கே விஜியின் உயிரற்ற உடலும் காணப்படுகின்றது. மூவரையும் கடலலைக்கு பலிகொடுத்த தாஸ் பைத்தியமாகிறான். கடலருகில் பட்டாசுப் பொதியுடன் நின்றவாறு தன் மனைவி பிள்ளைகளைத் தருமாறு கடல் அலையிடம் கேட்டுத் திரிவதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. நான் மலையகத்தைச் சேர்ந்தவள் என்றபடியால் சுனாமியின் கோரப் பற்களின் வடுக்களையாவது பார்க்க நேரவில்லை. அது தொடர்பாக பல விடயங்களை நான் அறிந்திருந்தேன். எனினும் தனிமரம் என்ற இந்தச்சிறுகதை சொல்லபட்டிருக்கும் விதத்தில் சுனாமியை கண்முன் தரிசித்ததொரு அதிர்ச்சி நிலை என்னில் தொற்றிக்கொண்டது. வாழ்த்துக்கள் திருமதி. கார்த்திகாயினி.

ஊனம் என்ற சிறுகதை வாழ்வின் அர்த்தத்தை போதிப்பதாக அமைந்து நிற்கிறது. வாலிப வயதில் ஆண்மை மிடுக்குடன் வாழ்ந்து வந்த மகாலிங்கத்தார், தனது வாழ்வின் அந்திம காலத்தில் படுகின்ற பாட்டைத்தான் இக்கதை விளக்கி நிற்கின்றது. மனைவியை மதிக்காமல், அவளது ஆலோசனைகளையும் கேட்காமல் வாழ்ந்த அவருக்கு மனைவியை இழந்த பிற்பாடுதான் அவளின் அருமை புரிகிறது. காலம் கடந்துவிட்டது... என்ன பயன்? அவர் அழுகிறார். அது தன் ஊனமான வாழ்வை நினைத்தா? மனைவியை நினைத்தா? இல்லை! மகாலிங்கத்தார் வாழ்வில் கடைசி விளிம்பில் நிற்பதையும், வாழ்ந்த காலங்கள் வீணாகிவிட்டன என்பதையும் எண்ணித்தான் அழுகிறார் என்று கதையை நிறைவு செய்திருக்கிறார் கதாசிரியர்.

அறுவடையாகாத விதைப்புக்கள் என்ற கதையும் சீருடையினரின் அடாவடித்தனத்தை பிரதிபலிப்பதாகத்தான் புனையப்பட்டிருக்கிறது. தனது மானம் போய்விட்டது என்ற அவமானத்தில் தற்கொலைக்குத் துணிந்த கோகிலாவின் கதைதான் இது. கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போன அவளை எப்படியோ காப்பாற்றிவிடுகின்றார்கள். தாயில்லாத கோகிலாவை வளர்த்து வரும் ஆச்சியும், தந்தையும் தற்கொலைக்கான காரணத்தை அறிந்து துடித்துப் போகின்றார்கள். எவ்வளவு வைத்தியம் செய்தும் வயிற்றில் தங்கிய கருவை அழிக்க அவகாசம் போதாததால் பிள்ளையைப் பெறுவது என்று முடிவெடுக்கப்படுகின்றது. பிள்ளைப் பேற்றின் போது கோகிலா இறந்துவிட அந்தத் துயர் தாங்காமல் அவளின் தந்தையும் இறந்துவிடுகின்றார். பிறந்து ஆறு வருடங்கள் கழிந்தும் பேச்சின்றியும் ஊனமாகவும் இருக்கும் அந்தப் பாலகனுக்காக எண்பது வயதுக் கிழவியான ஆச்சி வாழ்கின்றாள். விதி விளையாட ஆச்சியும் இறந்து விட, ஏதுமறியாத அந்த ஊனமான குழந்தை அழுதுகொண்டிருக்கின்றது. இக்கதைக்கு அறுவடையாகாத விதைப்புக்கள் என்ற பெயர் மிகப்பொருத்தமானதாக இடப்பட்டிருக்கின்றது.

கருமுகில் தாண்டும் நிலவு என்ற சிறுகதை ஒரு சிறுமி சொல்வது போல சொல்லப்பட்டிருக்கிறது. சதாவும் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் பாலா மாஸ்டர் ஒரு பெண் பித்தன். உடற்கல்வி பாடம் படிப்பிக்கும் போது மாணவிகளை உரசி அவர்களின் கையைக் காலைப் பிடித்து பாடம் நடாத்துவதில் வல்லவர். அதனால் அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. குடித்துவிட்டு வந்து சதாவும் மனைவியை துன்புறுத்துவார். காலங்கள் செல்ல மனைவியான சீதாக்காவுக்கு இனியும் பொறுக்கேலாது என்ற நிலை. அவள் வீட்டை விட்டுப்போகும் போது பாலா மாஸ்டர், சீதாவை நடத்தை கெட்டவள் என்று கூறி, 'இந்தக் குழந்தை எனக்குப் பிறந்ததென்றால் விட்டிட்டுப்போ. இல்லாவிட்டால் எனக்கு பிறந்த பிள்ளை இல்லையென்று கற்பூரத்தில சத்தியம் செய்துவிட்டுப்போ' என்று ஆவேசமடைகின்றார். சீதாக்கிவின் நற்குணமறிந்த ஊரார், பாலா மாஸ்டர் மீது வெறுப்படைந்து நிற்க, சீதா கற்பூரத்திலடித்து செய்யும் சத்தியம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிர்ச்சி தெளிந்த பின்பு செய்யப்பட்ட சத்தியத்தின் உள்ளார்ந்த வலியும், நியாயமும் தெரிகிறது.

'சத்தியமாய் என்ர பிள்ளைக்கு நீ அப்பனில்லை. உன்னாலை நல்ல அப்பனாய் இருக்கவும் முடியாது' - இது தான் அந்த சத்தியம். கருமுகிலுக்குள் மறைந்திருந்த நிலவு வெளியே வந்து பிரகாசமாக இருந்தது போல இனி சீத்தாக்காவும் தனது வாழ்வை வளமாக வாழ்வார் என்ற விதத்தில் கதை சொல்லும் பாணி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

உதயம் என்ற கதை பிள்ளைப் பேறின்மையால் தவிக்கும் தம்பதியினரை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. தான் தாயாகவில்லை என்ற ஒரே காரணத்தால் பல விஷேச வைபவங்களுக்கும் போகமுடியாத பெண்களின் வேதனையை கொட்டித்தீர்க்கிறாள் கதைப்பாத்திரமான நித்தியா. பல பிள்ளைகளையும் பெற்று இறுதியில் தனியாயிருக்கும் பெற்றோர், சுனாமியில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், ஊனமான பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் அனைவரும் பிள்ளையைப் பெற்று விட்டோம் என்று நிம்மதியாக இருக்கிறார்களா என்று நித்தியா கேட்கும் கேள்வி சமூகத்தில் பெண்களை மலடி என்று வாட்டுகின்ற ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட வேண்டியதாகும். பூனை நான்கு குட்டிகளை ஈனுவதும், சோடை பத்திப்போன தென்னம் பிள்ளையைக் கேட்டு வருபவரிடம் நித்தியாவின் கணவன் பார்த்திபன், அது காய்க்கும் என்று சொல்லுவதும் அவர்கள் எதிர்காலத்தில் பெற்றோர் ஆகுவது நிச்சயம் என்ற அர்த்தத்தை ஏற்று நிற்கின்றமை வாசகனை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. ஒருநாள் பார்த்தீபன் கூப்பிடும் சத்தத்தில் ஓடிப்போய் பார்க்கும் நித்தியா, அங்கு தென்னையிலிருந்து அழகாக பாளை வெளித் தள்ளியிருப்பதைக் கண்டு ஆனந்தமடைகிறாள். அதனூடாக தான் வெகு சீக்கிரம் தாயாகிவிடலாம் என்ற மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்ற விதத்தில் கதையை நிறைவு செய்திருக்கிறார்.

இப்படியும் என்ற கதையில் ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான நாயின் அன்பைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சந்திரசேகரன் அந்த ஜோடி நாய்களுடன் மிகவும் பிரியமாக இருந்தவர். வேலைக்குப் போகும் போது அவற்றுக்கு சாப்பாடும் எடுத்துக்கொண்டு போவார். அவையும் இவருடன் நல்ல ஒட்டுதல். ஒருநாள் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறது பெட்டை நாய். பெட்டை நாயை தொடர்ந்து வந்த ஆண் நாய் குறுக்கே வந்த ரயிலுக்கு அடிபட்டு தலைவேறு உடம்பு வேறாகிப்போவதைக்கண்டு அதிர்ச்சியின் உச்சத்தையடைகிறார் சந்திரசேகரன். அவர் காலையில் பெண் நாய்க்கு சாப்பாடு கொண்டு போகிறார். ஆண் நாயை புதைத்த இடத்தில் நேற்று சுற்றிச்சுற்றி வந்த பெண் நாய் விறைத்து நிற்கிறது. மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதர் காதல் அல்ல என்ற வரியை ஞாபகப்படுத்திப் போனது இந்தக்கதை.

நூலின் மகுடத் தலைப்பைக்கொண்ட தாய்மடி தேடி என்ற கதை, போரின் தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் மனநிலையை பிரதிபலிக்கின்றது. பத்து பதினொரு வயதான சிறுவன் வைத்தியசாலையில் இருந்தவாறு தனது அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளை எண்ணி தவிக்கின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் நர்ஸ் தனது அம்மாவின் சாயலில் இருப்பதால் நர்ஸம்மா என்று அழைக்கிறான். சற்று சுகமானதும் அவன் போன்ற பல சிறுவர்களை ஏற்றிப்போக வாகனம் வருகிறது. வீட்டுக்குப் போகப்போறேன் என்ற அவனது கனவு, அகதிமுகாமில் கொண்டு போய்விட்டதும் கனவாகவே முடிகின்றது. தெரிந்தவர்கள் யாரும் இல்லை. வெக்கையாக இருக்கிறது. தூரத்தில் பருந்துக்குப் பயந்து கொக்கரிக்கும் கோழியின் சத்தம். பார்த்திருக்க பருந்து குஞ்சொன்றைக் கௌவி பறந்து செல்ல குஞ்சியின் அவலக்குரல் காற்றில் வந்து சிறுவனின் இதயத்தை அறைகிறது. குண்டு போடப்பட்ட போது தனது பெற்றோர், சகோதரர்களும் இப்படித்தான் அவல ஒலி எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியவாறு மயக்கமடைகிறான் சிறுவன். அதில் கையாளப்பட்டிருக்கும் மொழிநடை யதார்த்தத்தை சித்திரித்தவாறு எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

எச்சில் சிறுகதை சாதியத்தை அடிப்படையாகக்கொண்டது. கந்தனின் மகன் சிறுவனாயிருக்கும் போது வேலாயுதத்தாரின் தண்ணீர் செம்பில் கை வைத்ததற்காய் கொய்யா மரக் கம்பினால் அடிவாங்குகிறான்.

'சிரட்டையில குடிக்கிற நாயளுக்கு, செம்பில தண்ணி கேக்குதோ| என்று வசைமாரி பொழிந்து கந்தனையும் ஏசிவிட்டுச்செல்கிறார் வேலாயுதத்தார். கைவைத்ததற்காக இப்படி கொதிக்கிறார் என்றால், வாய்வைத்து தண்ணீரைக் குடித்திருந்தால்???

காலம் கனிய வேலாயுதத்தாரின் மகனை விட நன்றாக கற்று பல்கலைக்கழகம் செல்கிறான் கந்தனின் மகன். அந்தக் கோபத்தில் தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் வேலாயுதத்தார்.

வருடங்கள் உருண்டோடுகிறது. மனைவியும் இறந்துபோக அதற்குப்பின் மகனுடன் வாழ லண்டனுக்கு செல்கிறார் வேலாயுதத்தார். கந்தனின் மகனிடம்தான் வேலாயுதத்தின் மகன் வேலை செய்கிறான். அத்துடன் ஒருநாள் நடக்கிற விருந்தில் வைத்து கந்தனின் பேத்தியுடைய (அதாவது கந்தனின் மகனின் குழந்தை) தட்டிலிருந்த இனிப்பை தெரியாமல் சாப்பிட்டுவிடுகிறார் வேலாயுதத்தார். அவர் அப்படி சாப்பிட்டதையும், தான் கந்தனின் மகனிடம் தான் வேலை செய்கிறேன் என்றும் தந்தையிடம் விபரிக்கிறான் மகன். மகன் கூறிய விடயங்களைக் கேட்டு தீ மிதித்தவர் போல் ஆகின்றார் வேலாயுதம்.

'கந்தனின் மகன் என்டு சொன்னனியல்லோ? ஆளைச் சரியாப் பாத்தியா?' என்று வேலாயுதத்தார் இயலாமையின் உச்சகட்டத்தில் தன் மகனிடம் கேட்க, அவன் அவரை அலட்சியமாக பார்த்து விட்டுச் செல்கிறான். அதைத்தாங்க முடியாதவராய் உட்கார்ந்திருக்கிறார் வேலாயுதத்தார்.

இவ்வாறு தன்னைச் சுற்றியிருந்த சூழலை மையமாக வைத்தும், மானிட நேயத்தை வலியுறுத்தியும், சுமார் முப்பது ஆண்டுகாலமாக எமது தாய்நாட்டை தின்ற யுத்தத்தின் வடுக்கள் பற்றியும் அழகிய முறையில் கதைகளைக் கூறியிருக்கும் பாணி வாசிக்கும் எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. சொல்லவந்த விடயத்தை அலட்டல்களன்றி சொல்கின்ற திருமதி. கார்த்தியாயினியின் எழுத்துநடை எளிமையாகவும், இயல்பாகவும் காணப்படுகின்றது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

பெயர் - தாய் மடி தேடி (சிறுகதைகள்)
நூலாசிரியர் - கார்த்திகாயினி சுபேஸ்
முகவரி - இல 111, படித்த மகளிர் திட்டம், மிருசுவில்.
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 300/=

Wednesday, April 6, 2011

'ஒரு காலம் இருந்தது' - கவிதைத் தொகுதி

'ஒரு காலம் இருந்தது' கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

'ஒரு காலம் இருந்தது' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் மூதூர் முகைதீன் அவர்கள். சுமார் நாற்பது ஆண்டுகால ஆசிரிய சேவையில் தன்னை அர்ப்பணித்து, அண்மையில் ஓய்வுபெற்றுள்ள அவர், சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றியவர். தான் கடமையாற்றிய பாடசாலைகளில் சஞ்சிகைகளை, கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டு மாணவர்களின் இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டிருப்புதுடன் மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக இருந்து ஓசை என்ற கவிதைச் சிற்றிதழையும் வெளியிட்டு வருகிறார்.

இவரது கல்விப் பணிக்காக 2006ம் ஆண்டு தேசிய சமாதானப் பேரவையினால் வித்தியாகீர்த்தி விருதையும், இலங்கை அரசின் கலாசார மரபுரிமை அமைச்சால் 2007ம் ஆண்டு கலாபூஷணம் விருதையும், சாமஸ்ரீ, கல்விச்சுடர் போன்ற பட்டங்களையும் பெற்றுக்கொண்ட திரு. மூதூர் முகைதீன் அவர்களின் நான்காவது தொகுப்பே ஒரு காலம் இருந்தது என்ற இந்த கவிதை நூலாகும்.



மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் நூறு பக்கங்களில் அமைந்திருக்கிறது. இதில் உள்ள அநேகமான கவிதைகள் கடந்த காலத்தில் நமது நாட்டை கூறுபோட்டுப் பிரித்துக்கொண்டிருந்த யுத்தத்தின் வடுக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலங்களாக பேதங்கள் மறந்து, குரோதங்களைத் துறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்று மதத்தாலும், மொழியாலும் பிரிவினைப்பட்டு சமுதாயங்களுக்கிடையில் பிளவுபட்டு யாரோ பெற்ற அநாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சோகத்தை நிதர்சனமான முறையில் நோக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

'... இனங்களிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இவர் பேச வரும் பொழுதெல்லாம் சக இனத்தை வெறுக்காது மனித நேயத்துடன் இவருக்குள் இருக்கின்ற இன ஒருமைப்பாட்டுக்கான பிடிவாதத்துடன் பேசுகின்றார். அதாவது எதிர் இனம் என இன்று அடையாளப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் இன்று அடைந்திருக்கும் இழிவு நிலையிட்டு சந்தோஷிக்கும் வக்கிர உணர்ச்சியினை வெளிப்படுத்தாது அவர் கொண்டிருக்கும் மனித நேயத்திலிருந்து ஒரு சொட்டேனும் குறையாது அக்கவிதைகளை ஆக்கியிருக்கிறார்..' என்று திரு. மேமன் கவி அவர்கள் தனது உரையில் நூலாசிரியரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்

நூலாசிரியரான மூதூர் முகைதீன் அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

'... எனது வாழ்வியல் அனுபவங்களினூடாக தரிசித்த சம்பவங்களையும், உள்வாங்கிய உணர்வுகளையும் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி மனிதம் என்ற உயரிய பார்வையில் வைத்தே இக்கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன...'

ஆகவே இந்த அழகிய தேசத்தை முப்பதாண்டு காலங்களாக யுத்தத்தின் சின்னமாக மாற்றிவிட்டு தற்போது ஓழிந்திருக்கும் போர்க்கால வடுக்களை வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கவிதைகள் நிச்சயமாய் வருங்கால சந்ததிக்கு திரு. முகைதீன் அவர்கள் தந்திருக்கும் சொத்துக்கள். கவிதையின் பாணி, எழுத்து நடை என்பன அழகிய முறையில் கையாளப்பட்டு மிகவும் காத்திரமான முறையில் நேர்த்தியாக வெளிவந்திருக்கும் ஒரு காலம் இருந்தது என்ற தொகுப்பின் கவிதைக் களத்துக்குச் செல்வோம்.

முதல் கவிதையான ஒரு காலம் இருந்தது என்ற கவிதை, இன ஒருமைப்பாட்டின் அன்றைய நிலையையும், தற்கால நிஜங்களையும் புடம் போட்டுக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது. காகத்தின் கூட்டில் குயில் இட்ட முட்டை என்ற உவமையை இதற்கு உவமித்திருக்கும் விதம் சிறப்பானது. ஆயிசா உம்மா, அன்னம்மா ஆகிய இருவகையான பெண்களும் ஆலய மணியோசை, பாங்கொலி கேட்டு தமது கடமை முடித்த அந்த ஒரு காலம் பற்றி இப்படி விபரித்திருக்கிறார்.

ஒரு காலம் இருந்தது
அந்திப் பொழுது உச்சம் கொடுக்க
ஆலய மணி ஓசையில்
அரிசி உலை வைப்பதற்காய்
ஆயிசா உம்மா அவசரப்படுவதும்

அதிகாலை பாங்கொலியில்
அன்னம்மா எழுந்து
புகையிலைத் தோட்டத்துக்கு
புறப்பட்டுப் போவதுமாய்
ஒருவர் வழியில் இருவரும் இணைந்தே
வரையப்பட்ட விதி வழியாய்
வாழ்ந்த ஒரு காலம் இருந்தது... என்றவாறு நீள்கின்றன வரிகள்.

எனது உலகம் என்ற கவிதையிலும் போர்க்காலத்தின் சாயல்களே பயணித்துக் கிடக்கிறது. பதுங்குக் குழிகளுக்குள் ஒழிந்தும், மறைந்தும் வாழ்க்கை ஓட்டிய அப்பாவி மக்களின் துயரங்கள் கண்கூடாக பார்த்ததைப் போன்ற மனநிலையை இந்தக் கவிதை ஏற்படுத்திப்போகிறது. போர்க்கால இரவுகள் அம்மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். தெருநாய்களின் ஓலத்துடனும், துவக்குச் சத்தங்களுடனும், சீருடையினரின் காலடி சத்தங்களும் பயப்பட்டு செத்துச்செத்து வாழ்ந்த இரவுகளை எண்ணிப் பார்த்தால் இன்றும் மனம் வேகிறது. அந்தப் பிரதேசங்களில் நீண்டு உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள், வெந்த உடல்களின் சாம்பலை உரமாகக்கொண்டு வளர்ந்தவை என்று கூறும் கவிஞர், நாம் இந்த உலகில் இருப்பது வாழ்வதற்காக அல்ல. மாறாக உயிரைக் காப்பதற்காகவே என்கிறார்.

பசி மயக்கத்துடன் பதுங்குக் குழிக்குள் இருந்து நிலவைப் பார்க்கின்ற போது, பாட்டி சுட்ட அப்பமும் பொரித்த முட்டையின் உருவமும் தெரிவதாக கூறியிருப்பதானது, அவ்வேளையில் கொண்டிருந்த வயிற்றுப் பசியின் கொடூரத்தை விளக்கி நிற்கிறது. அகதிமுகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், கடந்தகால இனிமைகள் நினைவுகளில் தோன்றி மனசை வருத்தி வருத்தியே இன்றைய நாளை கழிக்கச் செய்கிறது என 'நேற்றைய நாளில் இன்று' என்ற கவிதையின் பொருள் அமைந்திருக்கின்றது.

ஏதிலிகள் என்ற கவிதையில் இடைத்தங்கல் முகாம், நலன்புரி நிலையங்கள், அகதி முகாம்கள் என்று பல பெயர்கொண்ட இடங்களில் அணிந்த ஆடையுடனும், ஊனமாகிப் போன உடம்புடனும் வாழும் மனிதர்களை, யுத்தம் விட்டுப் போன எச்சங்கள் என்ற அடைமொழியிட்டு விளித்திருப்பது வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கிறது.

சுகமாகிய தூங்கிய காலங்கள் எல்லாம் இன்று சுமையாகிப் போனதில் எல்லோருமே வயிற்றெரிச்சல் கொள்கின்ற காலமிது. தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்தும், ஈடுகொடுக்க முடியாமலும் திண்டாடும் பலர் இன்று எம்மத்தியில் காணப்படுகின்றனர் என்பதே மெய் நிலை. இணையப் பாவனையாளர்கள் பரவலாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், நடுநிசிகளில் ஒரு மணி, இரண்டு மணிகளிலும் பேஸ்புக் என்ற வலையமைப்பில் தமது நேரங்களையும், காலங்களையும் வெறுமனே கழித்துக் கொண்டிருந்தால் சுகமான தூக்கம் எங்கே கிடைக்கப் போகிறது?

கனவு கண்டு பீதியுடன் விழிக்கையில் அம்மா அரவணைத்து ஆசுவாசப்படுத்தும் அந்த இனிய சுகமும், குளிர்காலங்களில் போர்வைக்குள் புகுந்து தவளையின் கத்துதலை தாலாட்டாகக் கொண்டு உறங்கிய அந்த இதமும், ஏழுதலை நாகங்கள் பற்றியும் கொள்ளிவாய்ப் பிசாசுகளின் தீப்பிழம்பான கண்களையும் பற்றி அப்பா அழகாக பொய்கூறிய அந்தக்காலங்களில் அப்பாவைக் கட்டியபடி அயர்ந்து விடும் அந்த இனிய கணங்களும் இன்று... குளிரூட்டப்ட்ட அறையில் தூங்கினாலும் கிடைப்பதில்லை. இந்த கருத்துக்களை வைத்து ஏக்கத்தோடு எழுதப்பட்ட 'சுகமான தூக்கங்கள்' எனும் கவிதை சிந்திக்க வைக்கிறது.

எங்கு போனாலும் நாம் காணக்கூடிய துக்ககரமான காட்சிகளில் ஏழைகளின் அதிகரிப்பு முக்கிய பங்;கு வகிக்கிறது. குடியிருப்பு வசதிகளற்று, சுகாதார தீர்வுகளற்று பாதையோரங்களிலும், கடைவாசல்களிலும் தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் இழிநிலையைப் பற்றி பேசும் கவிதையாக தீர்வு என்ற தலைப்பிலான கவிதை அமைந்திருக்கிறது. நிலத்தில் சுருண்டு கிடக்கும் சின்னஞ்சிறார்களை சப்பித்துப்பிய கரும்புச் சக்கை என்று உவமித்திருக்கும் நிலையானது, நொந்து நூலாகி எலும்பும் தோலும், அழுக்கும் புண்ணுமாகப் படுத்திருக்கும் சிறுவர்கள் பற்றிய கழிவிரக்கத்தை விதைத்துச் செல்கிறது. அது மாத்திரமன்றி அந்த சமூகத்தின் வயோதிபர்கள் எருமைகளுடனும், எச்சில் குப்பைகளுடனும் படுத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருப்பதுடன், மீன் வலைக்குக் கூட மீள உபயோகிக்க முடியாத கண்விழுந்த கந்தல் உடைகளை அணிந்திருக்கும் அவர்களின் வாழ்வியல் முறையை சித்தரித்திருக்கிறார் கவிஞர்.

அந்த சித்தரிப்பினூடாக ஆட்சியைப் பிடித்தவர்களின் ஏளனப் பார்வையையும், அலட்சியமான பதிலளிப்புக்களையும் பற்றி விபரித்து ஆத்திரரமடைகிறார். வானளாவ உயர்ந்த அரசியல்வாதிகளின் வீடுகளுடன் ஏழைகளின் வரட்சியான நிலையை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். இந்த கவிதையில் கவிஞர் முகைதீனின் மானிட நேயம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாம் இன்று அடிக்கடி பஸ் வண்டிகளில் பயணம் செய்கிறோம். அதற்காக பலமணி நேரம் பஸ் வரும் வரை காத்திருக்கிறோம். அவ்வேளைகளில் எம்மைச்சுற்றி நடக்கும் விடயங்களை நாம் கவனித்திருந்தாலும் கூட, அதை ரசித்திருக்கமாட்டோம். எனினும் முகைதீன் அவர்கள் பஸ் தரிப்பிடத்தினிலே என்ற கவிதையில் தொட்டுக் காட்டியிருக்கும் விடயங்கள் நயக்கத்தக்கதாக இருக்கிறது. அதாவது நீண்ட நேரம் காத்து நின்றதால் ஏற்படும் கால் வலியை, ஒற்றைக் காலில் தூண்களில் சாய்ந்து சுகம் காண தூண்களே துணை நிற்கும் என்கிறார். பிச்சைக்காரனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக கண்கள் எங்கேயோ கவனம் செலுத்துவதாக காட்டிக்கொள்ளும் பலபேரை பார்த்திருக்கிறோம். இன்றைய பத்திரிகையை இரவலாய் வாசிக்க எட்டிப் பார்ப்பதில் கழுத்து நீளும், எங்கிருந்தோ ஓடிவந்த தெருநாய் ஒன்று ஒரு காலை உயர்த்தி நாட்டிய கம்பத்தை நாசம் செய்யும் என்றெல்லாம் அழகிய முறையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கவிதையாக்கியிருக்கிறார்.

அந்திச் சூரியன் மறைவதை நாம் எல்லோரும் ரசிப்பவர்கள் தாம். எனினும் நாம் அடிக்கடி கூறுவது சூரியன் கடலுக்குள் சென்றுவிட்டான் அல்லது மலைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான் என்பது தான். என்றாலும் திரு. முகைதீன் அவர்கள் கூறியிருக்கும் விதத்தைப் பாருங்கள்.

பகல் முழுவதும்
வெப்பக் கரங்களால்
பூமி மேனியைத் தழுவிய கதிரவன்
புழுக்கம் தீர
கடல் நீரில் இறங்கி
கந்தக உடலைக் கழுவும்

எத்தனை அழகான கற்பனை? என்னை வியக்க வைத்தது. இது போன்ற பல அழகிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபோது கவிதை மீது இன்னுமின்னும் பற்று ஏற்படுகின்றது. மனிதநேயத்துக்காக குரல்கொடுத்தும், தேசத்தின் ஒற்றுமைக்காக பேனை எடுத்தும் தனது மனப் போராட்டங்களை வெள்ளைத் தாளில் வடித்து அந்த உணர்வுகளை எமக்குள்ளும் ஊற்றிய கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இலக்கியப் பணி மென்மேலும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

Sunday, March 13, 2011

'புதிய பாதை' - இளைஞர் இலக்கியம்

'புதிய பாதை' இளைஞர் இலக்கிய நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

இலங்கை தேசிய நூலக அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட புதிய பாதை எனும் இளைஞர் இலக்கிய நூல் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. 32 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

'புதிய பாதை எனும் இத்தொகுதியை இளைஞர் சமுதாயத்திற்குத் தேவையான பல கருத்துக்களை உள்வாங்கிப் படைத்துள்ளேன். ஆக்கப் பாதையில் ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க வைப்பதே எனது நோக்கமாகும்' என்கிறார் நூலாசிரியரான தம்பலகாமம் சிவசக்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு. ஞானராசா அவர்கள். இது இவரது இரண்டாவது தொகுதியாகும். முதல் தொகுதி சிறுவர் பா அமுதம் என்ற மகுடத்தில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



தன்னம்பிக்கை, பயன்பெற வழி, இளைஞர் நாம், காதல் கலை, வெறுக்காதீர், நாட்டு வளம், தொழில் செய்வீரே, தகவல் தொழில்நுட்பம், பொறுப்புணர்ச்சி, கிராம முன்னேற்றம், வெளிநாடு, புதிய பாதை, தொழிற் கல்வி, கலைக்கூடம், உழைப்பும் ஊதியமும், மாதர் சங்கம், ஒற்றுமை, சமாதானம், துணிவே துணை, எதிர்ப்பும் எதிரியும், உதவி செய்ய முன்வாரீர், வாசிக்க வேண்டும், எழுத்துப் பயிற்சி, மதித்து நடத்தல், அகந்தை கூடாது, கோபம் குறைப்போம், மது அருந்தாதே, நடைப் பயிற்சி, தலைமை தாங்குதல், பயிர்ச்செய்கை, புகை பிடிக்காதீர், பொறுமையின் பெருமை எனும் தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம் பெறுகின்றன.

தன்னம்பிக்கை என்ற முதல் கவிதையானது நமது முன்னோர்கள் பற்றி எடுத்தியம்புகிறது. அவர்கள் பாடுபட்டு செய்த பணிகளைக் காட்டி நிற்கிறது.

'முயற்சியும் பயிற்சியும் பெற்று
முன்னேற்றப் பாதை நோக்கி
வியத்தகு சாதனை செய்தார்
விளங்கிடுவீரே அதனை நீரும்..

அயலவர் சுற்றம் அவரை
ஆதரித்து தொண்டு ஆற்றி
துயரினை நீக்கி வைத்தாரே
தூய்மையைக் கடைபிடித்தாரே'

கற்ற கல்வியைக் கொண்டு பயனடைந்தால் மாத்திரமே அந்தக் கல்வி பெருமைக்குரியதாகிறது. இதுபோல அந்தக் கல்வியானது பிறருக்கு உதவாவிட்டால் அது பிரயோசனமற்றதாகி விடும். இதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாகக் காணலாம்.

'பாடுபட்டுப் பட்டம்பெற்று
பலருக்கு உதவி செய்து
கூடுவிட்டுப்போகும் முன்னே
கூடி நாம் வாழ்ந்திடுவோம்...

ஏடுதூக்கிப் பயின்றவைகள்
ஏட்டுச் சுரைக்காய் ஆகிடாமல்
ஓடுகின்ற நீரைப் போல
ஒழுங்கில் செயலமைய வேண்டும்'

நாம் செய்யும் நல்ல செயற்பாடுகள்தான் மற்றவர் முன் எம்மை பற்றின நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நாம் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய பிறரிடம் எமது நாமம் இகழ்ச்சிக்குரியதாக அமைந்துவிடக் கூடாது. கடந்த நாட்களில் அறியாமல் நாம் செய்த பிழைகளை இன்றிலிருந்து விட்டு விட்டு நல்லவர்களாக மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் உலகத்திலுள்ள கெட்டவன் ஒருவன் திருந்தி விட்டான் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.

'சென்ற நாட்கள் போய்விடட்டும்
செய்தவை போகட்டும்
இன்று புதிதாய் பிறந்ததாக
இளைஞர் நாம் விழிப்போம்

நன்று என்று நான்குபேரும்
நம்மைப் போற்றவே
இன்று தொடக்கம் அணிவகுத்து
இளைஞர் நாம் வெல்வோம்'

என்ற கவி வரிகள் மேற்சொன்ன கருத்தில் அமைந்திருக்கிறது.

காதல் என்பது இரு உள்ளங்கள் சம்பந்தட்பட்ட அழகிய விடயம். காதலின் தூய நோக்கம் அறியாமல் காதல் எனும் பெயரில் இன்று நடக்கும் நாகரீகமற்ற விடயங்கள் ஏராளம் உண்டு. சாதி, மதம், பணம் எல்லாவற்றையும் கடந்தது காதல் என்ற உணர்வு. உலகில் எல்லா ஜீவராசிகளும் காதல் செய்கின்றன. ஒருகாலமும் காதல் பின்வருமாறு இருக்கக்கூடாது என்கிறார் திரு. ஞானரசா அவர்கள். அதாவது

'சாதி சமயப் பிரிவு பார்த்து
சரிந்து வீழ்வதா?
பாதியிலே முறி;த்து விட்டுப்
பறந்து செல்வதா?...

கூதலுக்குப் போர்வையாக
கூடி இருப்பதும்
பாதகத்தைச் செய்து பதுங்கி
பயந்துநடப்பதும் காதலில்லையே...'

இன்றைய இளைஞர்களில் பலர் வேலைவெட்டிகள் எதுவுமின்றி வீணாக தமது பொழுதுகளைப் போக்க வல்லவர்களாக இருக்கின்றனர். தாய் தந்தையின் தயவில் வாழும் பலர் தொழில் ஒன்றை கட்டாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. அவர்கள் தத்தமது செலவுகளையாவது சமாளித்துக்கொள்ளுமளவுக்கு அவர்களின் மனநிலை இன்னும் வளரவில்லையா? வேறு சிலர் தாம் செய்கின்ற தொழில்களை வெளியில் கூறுவதற்கு தயங்குவார்கள். இத்தகையவர்களைப் பார்த்து நூலாசிரியர் கேட்கும் இந்தக்கேள்வி நியாயமானது.

'என்ன தொழில் எனினும்
எல்லாம் தொழில் என்றே
சொன்ன உண்மை காக்க
சோர்வு நீக்கி வருவீரே...'

'... வேலை செய்யாதிருந்து
வெட்டி பேச்சு பேசி
சாலை பார்த்து இருந்தால்
சாவு எழுந்து அழைக்கும்'

இன்றைய நவீன யுகமானது தொழில்நுட்பப் புரட்சியில் கொடி கட்டிப்பறக்கிறது. உலக விடயங்கள் விரல்நுனியில் இருக்கும் காலமிது. இணையம் என்றும், கைத்தொலைப்பேசி என்றும் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. தொழிற்சாலைகளிலும் மக்களின் வேலைகளை விட இயந்திரங்களின் பாவனை தான் பல்கிப்பெருகிக்கொண்டு வருகின்றது. வளர்முக நாடுகளில் ரோபோ மூலம் சமையலறை வேலைகளைக்கூட பூர்த்தியாகச்செய்கின்ற வழிமுறைகளைக் கையாண்டிருக்கின்றார்கள். இதைப்பற்றி தகவல் தொழில்நுட்பம் என்ற கவிதையில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

பொறுப்புணர்ச்சி என்ற கவிதையில் வரும் அடிகள், மட்டம் தட்டிப் பேசுவோரைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதாவது மட்டம் தட்டிப்பேசுபவர்கள் முன்னிலையில் நாம் சபதம் பூண்டு நல்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டமிட்ட செயலாலும், தீர்மான உறுதிப்பாட்டாலும் செய்கின்ற கருமங்களை திறம்படச்செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்கு முதலில் பொறுமை வேண்டும் என்ற உன்னத கருத்தை இந்தக்கவிதை இயம்பி நிற்கிறது.

கிராமப்புறங்களில் 'சங்கம்' என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிகளை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்து, பாதைகளை அமைத்து மக்களுக்கான வசதிகளை செய்துகொடுக்கின்றார்கள். மேலும் பண்ணைகளை வைத்தும், விவசாயங்கள் செய்தும் தமது வாழ்வியல் தராதரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். இத்தகைய நல்ல விடயங்களுக்காக சிரமதானத்திலும் ஈடுபட்டு சிறியளவிலேனும் மருத்துவ வசதிகள், பாடசாலை வசதிகளை பெற்றுக்கொள்ளவே அந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். இவர்களின் இந்த அடிப்படை வசதிகள் தொடர்பான விடயங்களை வைத்து எழுதப்பட்டதாக கிராம முன்னேற்றம் என்ற கவிதை காணப்படுவதை அவதானிக்கலாம்.
வெளிநாட்டு முகவர்களைப் பார்த்து 'வெளிநாடு' என்ற கவிதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் கவனயீனத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் வெளிநாட்டுக்குப் போய் சீரழிகின்ற பலரின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அத்தகையவர்கள் வெளிநாடுகளில் படும் துன்பம் சொல்லி மாளாதது. குழந்தைகளை விட்டு, கணவனை விட்டு, மனைவியை விட்டுச்சென்ற எத்தனைப்பேர் இன்று அயல்நாடுகளில் அநியாயமாக துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வகையான மனதை உருக்கும் செய்திகள் நாளாந்தம் நடக்கின்றன. தன்னிடம் இருப்பதை வைத்து சமாளிக்கத் தெரியாமல், வெளிநாட்டு மோகத்தில் அலைபவர்களை கண்டிக்கிறார் நூலாசிரியரான ஞானராசா அவர்கள். அவர் கோபமாப் பாடும் வரிகளைப் பாருங்கள்.

'இல்லையென்றால் அங்கே செல்வீர்
இருந்தால் முயற்சி இங்கு செய்வீர்
தொல்லை தீர்க்கும் வழியைக்கண்டு
தொடர்வீர் பயணம் வெல்வதாக'

புத்தகத்தின் தலைப்பான புதிய பாதை என்ற கவிதையில் பல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இது இளைஞர்களுக்கு மட்டுமான அறிவுரை அல்ல. அவ் அறிவுரைகள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியவையாகும். அன்பு காட்டுதல், பகையற்று வாழ வேண்டும், கோள் சொல்லுதல் கெட்ட பழக்கம் போன்றவை பற்றியும் அவ்வறிவுரைகள் அமைந்திருக்கின்றன.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலிருப்பதே பெரும் புண்ணியமாகும். அதை விடுத்து பதவி பணத்துக்காக யாருக்கும் பாதகம் செய்யக்கூடாது. ஏழை எளியவர்களை மதிக்கத்தெரிந்தோரே உண்மையான அறிவாளியாவார். அதுபோல சத்தியம் செய்தலானது அதை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது. மேற்சொன்ன விடயங்கள் யாவற்றைப்பற்றியும் அழகிய வரிகளில் ஓசை நயத்துடன் எதிர்ப்பும் எதிரியும் என்ற கவிதையில் கூறப்பட்டுள்ளது.

வாசிப்பின் மகோன்னதம் பற்றியும், எழுத்துப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இதிலுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பகட்டுப்பெருமைகள் அற்று பிறரை மதித்து வாழல், மதுவினால் ஏற்படும் கேடுகள், எல்லோரிடத்திலும் இருக்க வேண்டிய கட்டாயப் பண்புகளில் ஒன்றான தலைமை தாங்குதல் இன்னும் இதர விடங்களைப் பற்றியும் ஏனைய கவிதைகளில் அழகிய முறையில் கூறப்பட்டுள்ளன. இந்தப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாகும். அனைவரும் வாசித்து மகிழக்கூடிய வகையில் அதனை எழுதிய திரு. ஞானராசா அவர்களுக்கு எமது பாராட்டுக்கள.; அவரது தமிழ்த்தொண்டு மேலும் சிறந்துவளர மனமார வாழ்த்துகிறோம்.

பெயர் - புதிய பாதை (இளைஞர் இலக்கியம்)
நூலாசிரியர் - செ.ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 125/=

Thursday, March 3, 2011

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட்டிருப்பவன் தான் இலக்கியவாதி. அவ்வகையான நற்குணங்களும், சமுதாய நோக்கும் உடைய, இன்று ஷெல்லிதாசன் என்று பரவலாக அறியப்பட்ட மாபெரும் கவிஞரான பேரம்பலம் கனகரெத்தினம் அவர்களின் செம்மாதுளம்பூ என்றதொரு இனிமையான தலைப்பையுடைய புத்தகம் 114 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

நீங்களும் எழுதலாம் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் பல அம்சங்களைக்கொண்ட கவிதைகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் இத்தொகுப்பின் இறுதியில் ஷெல்லிதாசன் அவர்கள் எழுதிய மெல்லிசைப்பாடல்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.



இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் பெரும்பாலும் நீங்களும் எழுதலாம், செங்கதிர், சுட்டும் விழி, இனிய நந்தவனம், இசை உலகம் போன்ற சிற்றிதழ்களிலும், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி போன்ற வாரப்பத்திரிகைகளிலும் வெளியானவை.

1970 களிலிருந்து இன்று வரையும் சளைக்காமல் கவிதை எழுதி வரும் ஷெல்லிதாசனின் முதல்புத்தகத்தை நீங்களும் எழுதலாம் வெளியீட்டகம் வெளியிட்டது பாராட்டத்தக்க விடயம்.
முதல் கவிதையான 'விழும் வரை நானோயேன்' என்பதில் உழைப்பைப் பற்றியும், உழைப்பில் சோம்பல்தனம் இருக்கக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

'... வெய்யிலோ மழையோ எனக்கில்லை
வியர்வையிற்குளித்தே தினமெழுவேன்
கையிலே இருக்கும் காலத்தினை - ஏழை
கண்ணீரைத்துடைத்திட கவி புனைவேன்
சோம்பலென்பதை நானறியேன், எந்த
சொந்தத்தை நம்பியும் நான் வாழேன்
வீழும் வரையும் நானோயேன் அதற்கு
வேண்டும் திடங்கொள் மனசிருக்கு!'

இன்று பணத்துக்கு கட்டுப்படாத மனிதனில்லை. பணக்காரருக்கு கொடுக்காத மரியாதையுமில்லை. அவ்வாறு யாராவது ஒருவரின் கீழ் அடிமையாக வாழும் வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது. இதை நிஜங்களின் நிழல்கள் என்ற கவிதையில் முதல் அடியில் நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்கிறார் ஷெல்லிதாசன் அவர்கள்,

'உனது
சுயத்தை நீ இழக்காத வரை
உனது
சுதந்திரம் நிலைத்திருக்கும்'

விஞ்ஞான யுகதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தெரியாமலிருக்க முடியாது. அந்த வகையில் மண்வாசனை என்ற கவிதை, நவீனத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கி நிற்கிறது.

ஆயிரங்காலத்துப்பயிர் என்றும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயயிக்கப்படுகின்றன என்றும் காலங்காலமாக கேட்டு வந்தோம். ஆனால் தற்காலத்தில் திருமணங்கள் வெறுமனே காதல் என்ற போர்வையில் நிகழ்ந்து விடுகின்றன. கீழுள்ள வரிகளில் அதை தெளிவாக புரியலாம்.

'... கைத்தொலைபேசி
கடுகதி அழைப்பில்
அரும்பும் காதல்கள்!
வலையமைப்பின் வலைவீச்சில்
வளைத்துப்பிடித்த திருமணங்கள்...'

'... ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
குறும்பேச்சாகி (SMS)
ஆசை ஆறு நாள்
மோகம் மூன்று நாள் என
சிறகு முறிக்கும்
ஆயிரமாண்டு கால பந்தங்கள்'

திருமணமாகாத பெண்கள் தாலி வரம் கேட்டுத்திரியும் போது திருமணம் முடித்த பெண்கள் கணவனிடம் படும்பாடு தெரியாததொன்றல்ல. சில கணவன்மார் வெளியுலகுக்கு கனவான்களாக இருப்பினும் நான்கு சுவர்களுக்குள் அவர்கள் செய்கின்ற துவம்சம் சொல்லி முடிக்கக்கூடியதல்ல. அத்தகைய ஒரு பெண்ணின் கண்ணீர், கவிதையாக இவ்வாறு விழுகிறது

'மணமாலைக்கும்
மாங்கல்யத்துக்குமாய்
மனமாய்
கழுத்து நீட்டியது
ஒரு மனிதனுக்கல்ல...
கழுதைக்குத்தானென்பதை
காலம் உணர்த்தியது
நாளாந்தம் அது என்னை
காலால் உதைக்கிறது...'

ஆண்மைத்தனம் என்பது பெண்களைப்போலவே கற்போடு வாழ்வதும், கைப்பிடித்த மனைவியிடம் அன்பாக நடப்பதுவும் தான். தவிர பெண்களை அடக்குவதும் ஒடுக்குவதும் ஆண்மைக்கு அழகல்ல என்று உணர்த்துவதற்காக அதே கவிதையில் நக்கலாக கீழுள்ளவாறு குறிப்பிட்டு பெண்ணின் சோகத்தை காட்டி நிற்கிறார்.

'... அடக்கி ஒடுக்குவது
ஆண்களின் ஆளுமையாம்
அடங்கிப்போவது
பெண்மையின் பூர்வீகமாம்
அடித்துச்சொல்கிறான்...
குடித்துக் கும்மாளமடிப்பதும்
கொண்டவளை விட்டு
கண்டவளைத்தழுவி
காலங்கழிப்பதும்
ஆண்மையின்
தத்துவமாம் கேளுங்கள்'

இதே கருத்துடைய இன்னொரு கவிதை 'நானாக நான்'. இதிலும் தான் படும் அவலம் பற்றி பெண்னொருத்தி கூறுவதாக அமையப்பெற்றிருக்கிறது. இந்த கவிதையின் சந்தம் என்னை மிகவும் கவர்ந்தது. பல தடவை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை தந்தது. உதாரணமாக சில வரிகள்...

' பஞ்சவர்ணக் கிளியாகி
பறந்து வர ஆசைப்பட்டேன்
கூண்டுக்குள்ளே எனை அடைத்து
குதூகலிக்க அவனும் வந்தான்
கலாப மயிலாக மாறி
களி நடனம் புரிய வந்தேன்
நீண்ட தோகை அதைப்பறித்து
நிர்வாணமாக்க அவன் வந்தான்'

அரசியல் தலைவர்கள் என்றுமே மக்களுக்காக போராடுவதில்லை என்ற கருத்தில் 'போதுமே உங்கள் ஜாலங்கள்' என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களிடம் 'பண்டிகை தினங்களில் ஊடகங்களில் வாய்கிழிய பொய் பேசுவதை விட்டாலே எங்கள் வாழ்வு செழிக்கும்' என்று நகைச்சுவையாக இயம்பியுள்ளார் நூலாசிரியர் ஷெல்லிதாசன்.

காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக அடிமைச் சமுதாயமாக கணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்காய் பாடப்பட்ட கவிதை 'மலையுச்சியில் மையங்கொள்ளும் சூறாவளி'. தேயிலை சுமையுடன் கூடிய மனச்சுமையையும் தினம்தினம் அனுபவிக்கும் அந்த ஆத்மாக்கள் எத்தனை துன்பங்களை சந்திக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியாது.
ஆனால் ஒரு கவிஞனால் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நபர்களாகவே மாறி சிந்திக்கும் திறன் கவிஞனுக்கு மாத்திரம் தான் உண்டு. பொதுவாக கங்காணி, துரைமார் தன்னலவாதிகளாகவே இருப்பார்கள் என்ற பரவலான கருத்தொற்றுமை எல்லோருக்கும் இருக்கிறது. தொழிலாளிகளின் கஷ்டம் புரியாத அவ்வாறான ஒரு துரை பற்றி இப்படி கூறுகிறார்.

'... அந்த
ஐயா - துரையின்
அழகு மலைத்தோட்டத்தில்
தேயிலை
கொய்யும் ராமசாமியின்
ஐந்து பிள்ளைக்குடும்பத்துக்கு
அன்றாடம் கூலி
ஐந்நூறு ரூபா
அப்பப்பா ரூ மச்சாம்
துரை சொல்லி அழுகிறார்'

இன்று எல்லோரையும் மிக வேகமாக தொற்றிக்கொண்டதொரு நோய் தான் ஈகோ. விட்டுக்கொடுப்பின்மையால் இன்று பல குடும்பங்கள் சீரழிகின்றன. நட்பு வட்டாரங்கள் வலுவற்று போகின்றன. நான், எனது, எனக்கு என்ற தன்னிலைவாதத்தால் சமூகம் புரையோடிப்போயிருக்கிறது. அத்தகையதொரு நிலைப்பாட்டின் எடுத்துக்காட்டாவே 'சுவருடைத்து வெளியே வா' என்ற கவிதை அமைந்திருக்கிறது.

கீழுள்ளவற்றிலிருந்து விடுபட்டு மனிதர்களை நேசிக்கும் ஒருத்தனாக மாறி வருமாறு அழைக்கிறார் கவிஞர் ஷெல்லிதாசன்.

'.. மதிப்பு மரியாதைகள்
பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்டன
கொடுப்பதற்கல்ல என்ற
உனது
கொள்கை பிரகடனங்கள்
இறுக்கமானதும்
ஏளனம் நிறைந்ததுமான
உனது பார்வைகள்
சிரிப்பை உதிர்க்க மறுக்கும்
உன் உதடுகள்
நடையுடையிலொரு
நாட்டாண்மைக்காரத்தனம்'

ஆளுமைக்கொண்ட அன்னைத்தமிழ் என்ற கவிதையில் தமிழின் பெருமை பறைசாற்றப்பட்டிருக்கிறது. தமிழின் சுவையை அறியாதவர்களால் தமிழைக்கற்று அதன்படி கருமமாற்றுவது கஷ்டமாகத்தானிருக்கும். ஆனால் உலகத்திலேயே இனிமையான மொழி தமிழ் தான் என்பதை நாமெல்லோரும் அறிவோம். கவிஞர் ஷெல்லிதாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

'பாலையும் தேனையும் நீ பருக - சில
நாளிலே அவைகூட திகட்டிவிடும்
நாலையும் இரண்டையும் பெற்ற தமிழ் - அதை
நாளும் படித்திட சுவைபெருகும்
காதலைப்படித்திட ஆசை வந்தால் - அக
நானூறு இருக்கவே இருக்குதடா
கச்சிதமாகவே அதைப்படித்து - நல்ல
காதலை செய்ததில் மூழ்கிடலாம்'

'நானும் ஒரு இளங்குயிலும்' என்ற கவிதையை ஆரம்பத்தில் வாசிக்கும் போது தொலைந்து விட்ட காதலியைப் பற்றி பாடுவதாக எழுதியருக்கிறாரோ என்று தான் எண்ணினேன். ஆனால் இறுதியில் வெகு சுவாரஷ்யமாக நாமெல்லோரும் சிறுவயதில் படித்த காக்கையும், குயிலும் சம்பவத்தை கூறியிருப்பதைக்கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அழகான சந்தத்துடனும் ஓசை நயத்துடனும் இது எழுதப்பட்டாலும் இறுதியில் வாசகரைப்பார்த்து கேட்டிருக்கும் இரு கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. அதாவது

'பழைமையில் பல காலம்
பாய்விரித்து படுத்த மனம்
ஒரு நாளில் தன்னுறக்கம்
ஒழித்து கண் விழித்திடுமா?
மூடத்தனங்களிலே
மூழ்கிவிட்ட மனிதனையும்
மாற்றிவிட பலர் வந்தார்
மாறியதா மனிதமனம்?'

இது போன்று பல கவிதைகள் இவ்வாறாக புதுவிதமாகவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கக்கூடிய வகையில் எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மெத்தப்படித்தவன் என்று தன்னைக்காட்டிக்கொள்வதற்காக இன்று எழுதப்படும் பல கவிதைகள் யாருக்குமே புரிவதில்லை. அவ்வாறு எழுதப்படுபவை தான் சிறந்த கவிதைகள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல கால அனுபவமும், திறமையும் ஆளுமையும் கொண்ட ஷெல்லிதாசன் போன்ற சிலரின் கவிதைகள் கருத்து செறிவுள்ளதாகவும், மக்களுக்கு ஏதாவதொரு நல்ல செய்தியை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. அவரது கவிதைகளில் வாசகனை திக்குமுக்காடச்செய்யும் சொற்றொடர்கள் வந்து கஷ்டப்படுத்தவில்லை. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதை முடியும் வரை வாசித்து விட்டுத்தான் எழும்ப வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தியது. அவர் இன்னும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் இலக்கிய முயற்சிகள் இன்னும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - செம்மாதுளம்பூ
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
முகவரி – 11/6, சென்யூட்லேன்,
பாலையூற்று, திருகோணமலை
தொலைபேசி – 026 - 4900648
வெளியீடு – நீங்களும் எழுதலாம்
விலை - 200/=