Friday, April 5, 2019

மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு



மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர். 

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர். 

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.  

பக்கம் 108 இல் நாவல் துறையிலும் சிறுகதைத் துறையிலும் பெயர் பெற்றவர் சுலைமா சமி இக்பால் அவர்கள். வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், ஊற்றை மறந்த நதிகள், நந்தவனப் பூக்கள், உண்டியல் ஆகிய நூல்களை வெளியி;ட்டுள்ளார். ஊற்றை மறந்த நதி என்ற அவரது நாவல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. இவரது கணவர் இக்பால் மௌலவி அவர்கள் எக்மி பதிப்பகத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வருபவர். இவர்களது மூத்த மகளான இன்ஷிராவும் (பக்கம் 242) ஒரு இலக்கியவாதி. தற்போது தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியராகக் கடiமாற்றும் இவர் பூ முகத்தில் புன்னகை, நிழலைத் தேடி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 112 இல் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது தனித்துவம் தனது நூல் வெளியீடுகளின் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தொகையை ஏழை மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நன்கொடையாகக் கொடுத்து தனது மறுமை வாழ்வுக்காக நன்மையைப் பெற்றுக் கொள்வதே. அவர் பலருக்கும் உதவக் கூடிய இளகிய மனம் படைத்தவர். ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 153 இல் புன்னியாமீன் என்றமா பெரும் இலக்கியவாதியின் மனைவியான மஸீதா புன்னியாமீன் அவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் காலியைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட கணித விஞ்ஞான ஆசிரியர். புதிய மொட்டுக்கள், ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகள் (கூட்டு முயற்சி), மூடு திரை ஆகிய நூல்களோடு கல்வி சார்ந்த பல நூற் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

குருநாகலை மல்லவப்பிட்டியைச் சேர்ந்த சுமைரா அன்வர்; பற்றிய தகவல்கள் பக்கம் 158 இல் இடம்பிடித்துள்ளது. சுமைரா அன்வர்; ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியர். இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற இவரது நாவல் இன்னும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த நாவலாசிரியை ஸனீரா காலிதீன் அவர்கள் பற்றிய தகவல்கள் பக்கம் 190 இல் காணப்படுகிறது. ஒரு தீபம் தீயாகிறது,  அலைகள் தேடும் கரை என்ற இரு நாவல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ள இவர், களுத்துறை முஸ்லிம் மகளிர் கலலூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

பக்கம் 234 இல் கண்டி தெஹிதெனிய மடிகேயைச் சேர்ந்த மரீனா இல்யாஸ் ஷாபியின் தகவல்கள் நூலை அலங்கரித்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாபி ஓய்வுபெற்ற ஆசிரியராவார். கட்டுரை, சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர். தற்போது நியூசிலாந்தில் வாழும் இவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர் பிறை நிகழ்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். 

மின்னும் தாரகைகள் என்ற இந்த நூலில், ''நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..'', ''புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்..'' மற்றும் ''பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்'' ஆகிய தலைப்புகளில்தான் நூலின் மூன்று அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். கோடிட்டுக் காட்டக்கூடிய சில முக்கியமானத கவல்களையும் ஷஷமின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்|| என்ற தலைப்பில் அவற்றை நூலாசிரியர் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதுவரை இலக்கியம் படைத்திருந்தாலும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகமில்லாத பலர், மின்னும் தாரகைகள் என்ற இந்நூலின்; மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இத்தகையதொரு ஆத்மார்த்தமான சேவையைச் செய்திருக்கும் நூலாசிரியர் நூருல் அயினுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது கணவர் கவிமணி நஜ்முல் ஹூசைன் அவர்கள்.

இனிமையான தம்பதியராகவும், இலக்கியத் தம்பதியராகவும் திகழும் இவர்கள் எனது நூல் வெளியீடுகளிலும் கலந்துகொண்டு என்னை கௌரவித்து இதயம் மகிழ்பவர்கள். மக்களளோடு ஐக்கியமாகப் பழகக் கூடிவர்கள். மென்மேலும் இலக்கியப் பணியாற்ற எனது வாழ்த்துப் பூக்கள் என்றென்றும் இவர்களுக்கு உண்டு!!!

நூல் - மின்னும் தாரகைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - நூருல் அயின் நஜ்முல் ஹுசைள்
விலை - 1000 ரூபாய்
வெளியீடு - ஸல்மா பதிப்பகம்

Sunday, March 31, 2019

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.

இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.

அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.

''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.

இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது. 

இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்''  என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கியின் நிழலில்
என்னைஅமரச் செய்து
என் கையில் 
பிரித் நூலைக் கட்டினர்...
அவர்களிடம் 
விசிறிகளுக்கு பதிலாக 
அல்குர்ஆன் இருந்தது.. 
..அங்கொன்றும் இங்கொன்றுமாக 
அதில் பிழைகண்டனர்..

பால் அம்மா (பக்கம் 04) என்ற கவிதை ஆகுமாக்கபட்ட உணவுகளை பசுவதை என்ற பெயரில் தடுத்துக்கொண்டிருக்கும் கும்பலின் இழிசெயல் பற்றிப் பேசுகின்றது. குவியல் குவியலாக மக்கள் இறந்துபோன இந்த நாட்டில் உணவுக்காக மாடுகளை அறுப்பது பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றவர்களைச் சாடி நிற்கின்றது இந்தக் கவிதை.

எத்தனையோ
எமது அம்மாக்களை
சும்மாக்கள் என்று
சுட்டுத் தள்ளியவர்கள்
ஷஷகிரி|| அம்மாவின்
முலையில் வாய் வைத்து
தாய்ப் பால் குடித்ததாய்க் கூறி
தமக்குத் தாமே 
தீ மூட்டிக் கொள்கின்றார்கள்..

இன்பமயமான கதைகளைக் கேட்டுவளர வேண்டிய எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்த வரலாற்றைப் பரிசளித்த தேசம் நம்முடையது. போர்க் காலத்தில் நடந்த அவலங்களின் எச்சசொச்சம் இன்னும் வடுக்களாக காணப்படுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஒரு பெருங்கூட்டம் இன்னும்கூட கையறு நிலையில் தம் காலத்தைக் கடத்துகின்றது. அத்தகையவர்களுக்காய் எழுதப்பட்ட கவிதையாக மொழிபெயர்க்கப்படாத வலிகள் (பக்கம் 25) காணப்படுகின்றது.

நிறம் மாறிய தேசத்தில்
நீதி மறுக்கப்பட்ட
யாருக்கும் புலப்படாத
மௌன ஜீவன்களின்
ஒவ்வொரு விடியலும்
வலி சுமக்கும் முடிவுகளில்

அப்பாவிகளாய் திக்கற்றுத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளுக்காக துணிந்து வந்து குரல் கொடுத்திருக்கும் ஒரு வைத்தியக் கவிஞன் அஸாத் எம். ஹனிபா அவர்கள். சாத்வீகப் போராட்டங்களால் பெறமுடியாத உரிமைகளால் துவண்டு போய்க் கிடக்கும் மக்களுக்காகக் கிடைத்த ஒரு புரட்சியாளன் இவர். இவரது இலக்கியப் பணியும் சமூகப் பணியும், வைத்தியப் பணியும் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!

நூல் - தம்பியார்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அஸாத் எம். ஹனிபா
வுpலை - 400 ரூபாய்
வெளியீடு - ஏ.ஜே. பதிப்பகம்

Tuesday, November 28, 2017

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

 படைப்புலகில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்தாலும் சில வருடங்கள் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்துவிட்டு மீண்டு(ம்) வந்திருக்கிறார் திருமதி எஸ்.யூ. கமர்ஜான் பீபீ. ஹுனுப்பட்டி வத்தளையிலிருந்து இலக்கியம் படைக்கும் இவர் 'நான் மூச்சயர்ந்தபோது' என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கின்றார்.

விழித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் சொத்துக்களை, உடமைகளை கொள்ளையடித்துக் கொண்டு போகும் இக்காலத்தில், மூச்சயர்ந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவ்வாறு மூச்சயர்ந்த ஒரு சமூகமாகத்தான் நாம் இன்று மாறிப் போயிருக்கின்றோம். நாம் பார்த்துக் கொண்டிருக்க நமது இருப்புக்களை எல்லாம் கண்முன்னே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து நாம் மீள வேண்டும். நமக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் நூலின் தலைப்பை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்டது.

எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களது நீண்ட கால தவத்தின் பயனாக வெளிவந்திருக்கும் இந்நூலிலுள்ள கவிதைகள் பரந்துபட்ட தலைப்புக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. 76 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 52 கவிதைகள் காணப்படுகின்றன.

நூலிலுள்ள ஆரம்பக் கவிதைகள் ஆன்மீகம் சார்ந்தவை. முஹம்மத் நபியவர்கள், நோன்பு, ஹாஜிகள், முஹர்ரம் போன்ற இன்னோரன்ன தலைப்புக்களில் அவை எழுதப்பட்டிருக்கின்றன. அதுபோல நூலாசிரியர் தனது தாய், மகன், மகள், கணவர் போன்ற உறவுகளுக்கு கவிதை வழியாகவும் தன் அன்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்காதபோது என்ற கவிதையானது சந்த ஒலியமைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சொல்லக்கூடிய புத்திமதியாகக் காணப்படும் இக்கவிதையின் சில வரிகள் இதோ

சிந்தனை ஓட்டம் - அது
சமுதாய மாற்றம்
சீர்குலைந்தால் வாட்டம்
தென்படும் அதன் தேட்டம்

இளைஞர் கூட்டம் - இந்த
நாட்டின் உயிரோட்டம்
கல்வி கற்றால் - நீ
கண்டிடுவாய் உயர் பட்டம்

நேசிக்கும் உயிர்களை சுவாசிக்காத தேசம் என்ற தலைப்பே கவிதையின் உள்ளர்த்தத்தை நன்கு உணர்த்தி விடுகின்றது. நேசித்துக் கொண்டிருந்த தேசத்தில் இனவாத அரக்கன் கால் பதித்ததும்; பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எப்பாவமும் அறியாத பல அப்பாவிகள், குழந்தைகள் தம் உயிரைத் துறந்திருக்கின்றார்கள். உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் காலப்போக்கில் ஆறினாலும் வடுக்கள் நெஞ்சில் பதிந்திருக்கும். அந்த வலி எத்தனை வருடங்கள் சென்றாலும் அழிந்துவிடாது. அத்தகைய ஒரு வலியைச் சுமந்து எழுதப்பட்டிருக்கும் சில வரிகள் கீழே..

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

தேசத்தின் ஓர் அங்கத்தில்
மனித உயிர்கள்
நேசிக்கப்படாமலே
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

துப்பாக்கி ரவைகள்
அப்பாவி நெஞ்சங்களை
தப்பாது இச்சிக்கொள்ளும்

சோம்பலின்போது என்ற கவிதையிலுள்ள ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. குறியீட்டுக் கவிதையாக எழுதப்பட்டிருக்கும் இது சமூகத்தில் மலிந்து போயிருக்கும் ஒட்டுமொத்த சோம்பேறிகளுக்கும் சாட்டையடியாகவும் அமைந்திருக்கின்றது.

காலத்தின் சுழற்சியால்
கரை காணாதவர்கள்
கண்ணீரில் முகம் கழுவுவர்

முன்னேற்றப் படிகளை
உடைத்தெறிந்து
முழுசாய் சோம்பலில்
புகுந்துகொள்வர்

அதனால்
நித்தமும் படுக்கையில்
சுகங் காண்பர்

தேர்ந்த வாசிப்பும் ஆழமான தேடலும் ஒரு எழுத்தாளின் படைப்புக்கு உரம் சேர்க்கும். அத்தகைய தொடர் தேடல்கள் நூலாசிரியர் எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களின் எழுத்துக்கு மேலும் வலு சேர்க்கும். அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!!!

நூல் - நான் மூச்சயர்ந்தபோது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்.யூ. கமர்ஜான் பீபீ
வெளியீடு - மருதம் கலை இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

Sunday, May 10, 2015

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகும். இலக்கியத்தை நேசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு சமுதாயத்தின் சுவடுகளை நமக்குள் பதித்துவிடுகின்றார்கள். பல்வேறு இலக்கிய வடிவங்களும் அகவயம் அல்லது புறவயம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்த முனைகின்றபோது அது எமது சிந்தனைகளில் தாக்கம் செலுத்துகின்றது.

இன்று இலக்கிய வடிவங்கள் பல்வேறு வகையிலும் பலராலும் உள்வாங்கப்பட்டுள்ளது. கவிதைகள், சிறுகதைகள் போன்றன மனதில் உள்ள விடயங்களை அல்லது சமுதாயத்தில் புரையோடிப்போன விடயங்களைச் சொல்ல விளைகின்றன.

இந்த வகையில் இளம் எழுத்தாளர் ஹனீபா சஹீலாவும் நம்முன்னே கதாசிரியராக உருவெடுத்திருக்கின்றார். பாடசாலை ஆசிரியராக கடமையாற்றும் இவர், தான் எழுதிய பத்து சிறுகதைகளை ஒன்றிணைத்து விதி வரைந்த பாதையி

லே என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கின்றார்.

விதி வரைந்த பாதை என்ற என்ற முதல் கதையானது காதலின் வலிகளை வார்த்தை வழியே சொல்லியிருக்கின்றது. இன்றைய காலத்தில் அந்த உணர்வுகள் பலராலும் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது. புனிதமான விடயங்கள் இன்று வெறும் பித்தலாட்டங்களாக இருக்கின்றன. சுமையா என்ற கதாபாத்திரத்தை வைத்து பின்னப்பட்ட சிறுகதையும் அத்தகையதொரு காதலைத்தான் நமக்குச் சொல்கின்றது. கைவிட்டுப்போன காதலை நண்பர்கள் மூலமாக தேடும் சுமையா இறுதியில் ஒரு வைத்தியருக்கு சந்தர்ப்பவசத்தால் மனைவியாகிவிடுகின்றாள். தன்னைக் காதலித்து ஏமாற்றிய நிசார் என்பவனின் நினைவுகளை அவள் அழித்தொழித்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்தாள். அக்காலத்தில் அவன் தான் செய்த திருட்டுக் குற்றத்தால் கைதாகி, பின்னர் சிறையிலிருந்து விடுதலைப் பெற்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகின்றான். விதி வரைந்த பாதையில் பயணித்த அவன் சுமையாவின் கணவரிடமே சிகிச்சைக்கு வருகின்றான். அங்கே சுமையாவைக் கண்ட அவன் தனது தவறுகளை உணர்ந்து, யாரிடமும் சொல்லாமலேயே அங்கிருந்து சென்றுவிடுகின்றான். எனவே அவனது பாதை இனி விதி வரைந்த படியே இருக்கும் என்பதை இந்தக் கதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

பாவம் இந்தப் பாவை என்ற என்ற கதை ஹஸ்னாவின் சோகங்களை சொல்லில் வடித்திருக்கின்றது. தனது வறுமை நிலமை காரணமாக வெளிநாட்டுக்குப் பயணமாகும் கதைக் கருவை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. பெண்களும் வெளிநாட்டுப் பயணமும் என்ற தொனிப்பொருளில் பல கருத்துக்களை முன்வைக்க முடியும் என்ற போதிலும், பொதுவாக எல்லோரது அபிப்பிராயமும் வெளிநாட்டுப் பயணம் பெண்களை சீரழிக்கும் என்பதாகும். பெண்களை மாத்திரமின்றி குடும்பத்தை, கணவனை, பிள்ளைகளை என எல்லாவற்றையுமே சர்வ நாசமாக்கிவிடும். அண்மையில் சவூதியில் மரண தண்டனை பெற்ற ரிஸானா நபீக் என்ற பெண்ணை இவ்வுலகம் எளிதில் மறந்துவிடாது. வாதப் பிரதிவாதங்கள் பலதாக இருந்தபோதிலும் அடிப்படை அவள் வெளிநாட்டுக்கு சென்றமைதான். குடிசை வீட்டை, மாடி வீடு ஆக்குவதற்காக தனது தலையை அடகு வைத்த அந்த கொடூர சம்பவம் நம் இதயத்தில் எல்லாம் இரத்தக் கண்ணீர் பாய்ச்ச வைத்தது. கதாசிரியர் ஹனீபா சஹீலா எழுதியிருக்கும் ஹஸ்னாவின் கதையில், அவள் தன் கனவுகளை சுமந்து வெளிநாடு சென்று உழைத்து வருகையில், தன் குடும்பமே சுனாமிக்கு இரையாகிவிட்டதை அறிந்து கதறுகிறாள். கண்ணீர் வடிக்கிறாள். இறுதியில்... தனது குடும்பம் தன்னுடன் இருப்பதான ஒரு கற்பனையில் பைத்தியமாகி விடுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கீழுள்ள வரிகள் எத்தனை உருக்கமானது என்பதை பாருங்கள்.

`ஆத்மா அடங்கிவிட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஹஸ்னா தனது தங்கை ஹனீனாவுக்காக கொண்டு வந்த அந்த பொம்மையை அணைத்து முத்தமிட்டாள். நாட்கள் நகர்கையில் அந்த பொம்மை, தங்கை ஹனீனாவாக மாறியது. தனிமையில் இருந்துகொண்டு அதை முத்தமிடுவதும் உரையாடி விளையாடுவதும் வழக்கமாகியது.'

கறுப்பு ஜூன் என்ற கதை ஒரு உண்மைக் காதலை காட்சிப்படுத்தியிருக்கின்றது. கௌதம் என்பவன் தனது காதல் பற்றி சிந்து என்ற பெண்ணிடம் சொல்வதாக கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. காதலித்தபோது தாம் எப்படி உண்மையாக இருந்தோம் என்பதை அவன் சொல்கையில் இன்றைய காலத்திலும் இவ்வாறு காதல்கள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகின்றது.

மனதைத் திறந்த மடல் என்ற கதை, சமூகத்தின் இருப்பு நிலையை எடுத்து விளக்குகின்றது. மணமுடிக்கும் பெண், சீதனம் என்ற பெயரில் எவ்வளவு மனத் தாக்கங்களுக்கு ஆளாகின்றாள் என்பதையோ, மனதால் இணைந்த இருவரைக்கூட சீதனம் என்ற பெயரால் பிரிப்பது தவறு என்பதையோ பலர் புரிந்துகொள்வதில்லை. இக்கதையில் வரும் சாஹிர் தன் குடும்ப நிலை அறிந்து வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்கின்றான். விடுமுறையில் வந்திருக்கும்போது தனது மைத்துனியான ரிபாவைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளும் சம்மதிக்கிறாள். தங்கைகள் மூவரின் திருமணத்தை நடத்திவிட்டுத்தான் ரிபாவை மணமுடிப்பதாக தாயாரிடம் தெரிவிக்கையிலேயே பூகம்பம் வெடிக்கின்றது.

ஷஅவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த வீட்ல போய் நீயும் கஷ்டப்படுவ. உனக்கு பெரிய இடமா நான் பார்க்கிறேன். இந்தக் கதய இத்தோடு மறந்திடு. என்ன மீறி அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ட மௌத்துக்கும் என் முகத்துல முழிக்காத| என்று தாயார் கூறுகிறார். தாயின் வார்த்தையை மீறவும் முடியாமல், காதலை மறக்கவும் முடியாமல் இறுதியில் நிரந்தரமாகவே வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறான் சாஹிர்.
எத்தனையோ ஆண்கள் இன்று இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றார்கள். மாமி மருமகள் சண்டைகளின்போது இருதலைக்கொள்ளி எறும்புகளாக இருக்கின்றார்கள். பெற்று வளர்த்த தாயா? நம்பி வந்த மனைவியா? என்கிறபோது யார் பக்கம் தவறிருந்தாலும் சமாதானமாக்க ஆண் படும்பாடு சொல்லிமாளாது. மகன் மாறிவிட்டான் என்று தாய் பதறுவாள். கணவன் சரியில்லை என்று மனைவி கதறுவாள். இறுதியில் வாழ்க்கையே சிதறும் அவனுக்கு. இவ்வாறான இக்கட்டுகள் நேர்கையில் ஆண்கள் எடுக்கும் முடிவு யாரும் வேண்டாம் என்றுவிட்டு எங்காவது சென்றுவிடுவதுதான் என்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது.

கதாசிரியர் ஹனீபா சஹீலாவுக்கு கதையை லாவகமாக நகர்த்திச் செல்லும் திறன் நிறையவே இருக்கின்றது. தான் பார்த்த அல்லது கேட்ட விடயத்தை கதையாக்கிவிடும் நுணுக்கம் தெரிந்திருக்கின்றது. ஆழ்ந்த வாசிப்பின் மூலம் அவர் இன்னமும் தன் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். இலக்கிய ரசிகர்கள் இந்தத் தொகுதியை வாங்கி வாசிக்க வேண்டும். அவரது முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டும். கதாசிரியர் ஹனீபா சஹீலா, நிறைய சமூக அவலங்களை சிறுகதையாக வெளிக்கொணர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200 ரூபாய்

Monday, September 16, 2013

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது.

2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் 'இனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்' என்கின்றனர்.


கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

சில குழந்தைகள் எந்நேரமும் அழுத வண்ணமே இருப்பார்கள். பால் குடிக்கவும் மாட்டார்கள். தூங்கவும் மாட்டார்கள். அதை மையப்படுத்தி முதல் பாடலான (பக்கம் 01) தாலாட்டு இப்படி தொடங்கியிருக்கிறது.

தாலாட்டுது உன்னை
தாலாட்டுது
அமுதூட்டும் கை உன்னை
தாலாட்டுது

உறக்கமின்றி
அழுது நீயும் அடம்பிடிக்காதே!
இரக்கமின்றி தொல்லை எனக்கு
தந்து நில்லாதே!

இரக்கத்தோடு உறங்கிடுவாய் (பக்கம் 02) என்ற பாடல் அழகிய உவமானங்களைக் கொண்டுள்ளது. வாசிப்பதற்கு இனிமையாக காணப்படுகின்றது. கண்ணுறங்கும் நேரத்தில் களிப்பாக தூங்குவதற்காக ஒரு தாய் தன் செல்லக் குழந்தைக்கு பாடும் தாலாட்டு இது..

பாசமுள்ள பைங்கிளியே
பாடிவரும் வெண்புறாவே
ஆசை கொண்ட அருந்தவமே
என்னருகில் கண் துயில்வாய்!

மனங் கவர்ந்த மாங்கனியே
மகிழ்வு தரும் பூ மணியே
இணங்கி வந்த தாய் மடியில்
இரக்கத்தோடு உறங்கிடுவாய்!

பாசம் பொங்குது என்ற பாடல் (பக்கம் 05) வரிகள் ஓசை நயத்துடன் காணப்படுகின்றது. வாசிக்க இனிமை தரும் இந்த வரிகள் குழந்தையின் குறும்புத் தனத்தை ஞாபகப்படுத்துகின்றது.

தாலாட்டும் பிள்ளை ஒன்று
தாயின் முகம் பார்க்குது!
பாலூட்டு என்று சொல்லி
பாசம் பொங்க கேட்குது!

அன்னை மடி மீதினிலே
அன்பொழுக இருக்குது
கண்ணை மூடி துயில் கொண்டு
கலக்கமின்றி உறங்குது!

சுகம் காண தூங்கிடடி என்ற தாலாட்டுப் பாடல் (பக்கம் 07) நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை மனதில் விதைக்கின்றது. தாய் தனது மகளுக்கு பாடும் அழகிய பாடலாக இது காணப்படுகின்து.

எந்தன் மடி அன்பு மடி - நீ
எனக்கு செல்வமடி
உந்தன் கண்ணிரண்டில் தூக்கமடி
கவலையெல்லாம் போகுமடி

கண்ணுறுங்கும் நேரமடி யுன்
கலக்கமெல்லாம் தீருமடி
என் மடியும் உனக்காக
என்றைக்குமே இருக்குமடி!

இவ்வாறு அழகிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com

Sunday, March 10, 2013

விடுமுறைக்கு விடுமுறை - சிறுகதைத் தொகுதி

விடுமுறைக்கு விடுமுறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


ஓரிரண்டு கவிதைகளை எழுதி அவை பத்திரிகையில் வெளிவந்தாலேயே தமக்குத்தாமே கவிஞர் பட்டம் சூட்டிக்கொண்டு திரியும் பலபேர் நம் மத்தியில் இருக்க, விடுமுறைக்கு விடுமுறை என்ற காத்திரமான சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கின்றார் திருமதி பவானி தேவதாஸ் அவர்கள்.

தலாத்து ஓயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் இவரது கன்னித் தொகுதியான விடுமுறைக்கு விடுமுறை என்ற இச்சிறுகதைத் தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி 66 பக்கங்களில் புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் வெளிவந்திருக்கிறது.

தற்கால வேலைப்பளுவுக்கு மத்தியில் சிறுகதைகளை வாசகர்கள் வாசிப்பது மிகக்குறைவு. ஆனாலும் பவானி தேவதாஸின் கதைகளை மேலோட்டமாக கண்டுவிட்டாலே அதை முழுவதுமாக வாசித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எழுதப்பட்ட கதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களாக இருப்பதால் அவை மேலும் சிறப்படைகின்றன.



நினைவில் நீங்காதவள் என்ற சிறுகதை 1983 இல் இனக்கலவரம் நடந்தபோது தமிழருக்காக தற்கொலை செய்துகொண்ட நீத்தா என்ற சிங்கள யுவதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பம் ஒன்றில் வீட்டுவேலை செய்கிறாள் நீத்தா. குறிப்பிட்ட தினமன்று அந்த வீட்டிற்கு சிலர் கல்லெறிந்து கலாட்டா பண்ணியிருக்கிறார்கள். தமிழர் வீட்டில் உனக்கென்ன வேலை என்று கேட்டவர்கள் மறுபடி வரும்போது அவளை அங்கிருந்து போகுமாறு சொல்லிவிட்டு போகிறார்கள்.

எனினும் வீட்டார்கள் அவளை நம்பி விட்டுப்போனதால் அந்தத் தமிழர்களின் உடமைகளை பாதுகாப்பதை தனது கடமையாகவே கருதுகிறாள் நீத்தா. மறுதினம் வன்முறையாளர்கள் வந்து தமிழர்கள் வாழ்ந்த அவ்வீட்டை எரிக்க அத்துக்கம் தாளாமல் அழுதபடியே தாயுடன் வருகிறாள் நீத்தா. யாரும் எதிர்பாராத விதமாக அப்போது வந்த புகைவண்டிக்கு குறுக்காக பாய்ந்து தனது துக்கத்தை வெளிப்படுத்திய நீத்தாவே இக்கதையில் நாயகி.

என் இனிய தோழனே என்ற கதை சிறுவயதிலிருந்து சகோதரனாகவே பழகி வந்த சிங்கள நண்பனின் மரணம் பற்றியது. பஸ்ஸில் மற்ற இளைஞர்கள் கிண்டல் பண்ணும்போது தனது தங்கை என்று கூறி அவர்களுடன் சண்டையிடுகிறான் சூட்டிக்கா என்ற அந்த நண்பன். இறுதியில் இராணுவத்தில் இணைந்து யுத்தத்துக்கு இலக்காகி இறந்துவிடுகிறான். இந்தக் கதையை வாசிக்கும்போது மனம் வலியால் துடிக்கின்றது.

சமவெளி - சிகரம் என்ற சிறுகதை இணைபிரியாது பழகி இறுதியில் சுனாமிக்கு பலியான நண்பிகளின் கதையை துல்லியாக கூறி நிற்கிறது. மலைநாட்டைச் சேர்ந்த நந்தினி, மட்டக்களப்பைச் சேர்ந்த மாயா. இருவரும் பிரதான பாத்திரங்கள். படிப்பதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற நந்தினியுடன் ஐக்கியமாகும் மாயா. உயர்த பரீட்சையின் பின்னர் நந்தினி ஊருக்கு புறப்படுகின்றாள். கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் அவளது மனதில் இனம்புரியாத தவிப்பு.. இறுதியில் சுனாமி அரக்கன் மாயாவை கொன்றுவிடுகின்றான். மெய்சிலிர்க்க வைக்கும் கதை. அதற்காக திருமதி பவானி அவர்கள் கையாண்டிருக்கும் அழகான கதையோட்டத்தால் சம்பவம் கண்முன் நிழலாடுகிறது. நெஞ்சம் விம்மித் தணிகின்றது.

பிறந்தகத்தில் பிறந்த நாள் என்ற கதை பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம். திருமணமாகி வேறிடம் போகும் பெண்கள் தமது பிறந்த வீட்டுக்கு கணவர் பிள்ளைகளுடன் வரும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை இக்கதை சொல்லி நிற்கிறது. அதுவும் சகோதரர்களின் அலட்சியப்போக்கும், அவர்களின் மனைவிமாரின் சிடுசிடுப்பும் ஏன் வந்துதொலைத்தோம் என்ற மனப்பாங்கை தோற்றுவிக்கும். அதை நிதர்சனபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

ஏன் என்ற கதை நோயால் அவதியுற்று இறந்துபோன மகன், மகள், மனைவி பற்றியது. மிகவும் சோகத்துக்குரிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இக்கதை காணப்படுகின்றது. தன்னை விட்டுப் பிரிந்துபோன தனது குடும்பத்தினரை எண்ணி கணவன் படும் அவஸ்தை வாசகருக்கும் தொற்றிவிடுகின்றது.

இவ்வாறு கற்பனைகளுக்கு உயிரிகொடுத்து அவற்றை எல்லாம் கதைகளாக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரும்பாலான தனது அனுபவங்களை கருக்களாக்கி அதை சிறுகதைகளாய் பிரசவித்திருக்கிறார் திருமதி. பவானி தேவதாஸ் அவர்கள். அவரது இலக்கிய முயற்சி இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடுமுறைக்கு விடுமுறை (சிறுகதை)
நூலாசிரியர் - பவானி தேவதாஸ்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்

மண்ணில் வேரோடிய மனசோடு - கவிதைத் தொகுதி

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களில் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

`கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது...' என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 

வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்' இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.


இது கவிதையல்ல (பக்கம் 06) என்ற முதல் கவிதை காயம்பட்ட இதயத்தை கண் முன்னால் நிறுத்தி வைக்கிறது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய் கூடி வாழ்ந்தவர்கள் இடையில் துவேசம் கொண்டவர்களாக ஆனதில் உள்ள விரக்தியைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் தமிழ் பேசுவதால் இஸ்லாமியத் தமிழர் என உறவு கொண்டாடி மகிழ்ந்தவர்கள்தாம் முஸ்லிம்களும், தமிழர்களும். ஆனால் இடையில் ஏற்பட்ட இனச் சுத்திகரிப்பு முழு முஸ்லிம் சமுதாயத்தையும் இடம்பெயரச் செய்துவிட்டது. இப்போது எம்மை எந்தத் தமிழரென அழைக்கப்போகிறீர் என கவிஞர் கேட்டிருக்கும் கேள்வி, இதற்கு தூண்டுதலாக அமைந்தவர்களின் நாக்கைப் பிடுங்கவல்லது எனலாம்.

இது கவிதையல்ல 
கற்கள்
நேயம் கொண்ட இதயம்
காயப்பட்டதால்..
இதயத்திலிருந்து
இதயத்துக்கு வீசும்
கவிதைக் கற்கள்
ஒட்டி வாழ்ந்த உறவுகளை
வெட்டி வீழ்த்திய வீரர்களே!

இஸ்லாமியத் தமிழரென
எமை அழைத்தீர்
இப்போது
எந்த வகைத் தமிழரென
எமை வெறுத்தீர்!

வாழ்க்கையில் எந்த பதவி உயர்வு கிடைத்தாலும், அந்தப் பதிவியுயர்வாலோ அல்லது கல்வியாலோ வேறு தேசம் சென்றாலும் தாய் மண்ணின் சுகத்தை நினைக்கையில் ஆன்மா கதறியழும்.  ஊர்மண்ணில் வெறுங்காலில் திரிய மனம் அவா கொள்ளும். இப்படியிருக்க துரத்தியடிக்கப்ட்வர்கள் இனி எப்போது ஊருக்கு செல்வோம் என்றே தெரியாமல் இருக்கும்போது அவர்கள் மனம் எத்தகைய பாடுபடும் என்பதை மண்ணின் காலடிக்கு.. (பக்கம் 20) என்ற கவிதையிலுள்ள கீழுள்ள வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். தாய் 

பொன்னிழந்து வாழ்ந்திடலாம்
பொருளிழந்து வாழ்ந்திடலாம்
மண்ணிழந்து வாழ்வதொரு வாழ்வோ
கண்ணிழந்த வாழ்வு போலன்றோ?

பால்ய வயதுகளில் நண்பர்களோடு இணைந்து செய்த குறும்புத்தனங்கள் இப்போது நினைவு வந்தாலும், தூறல் மழையில் நனைவது போன்ற இதத்தை ஏற்படுத்திச் செல்லும். அவ்வாறே சிறுவயதில் சாப்பிட்ட இனிப்புக்கள், பலகாரங்கள், ஊரின் விசேட சாப்பாடுகள் என்பன ஞாபகத்துக்கு வரும் வேளைகளில் சிறுகுழந்தையாய் இதயம் தடுக்கிவிழும். அவ்வாறானதொரு நிகழ்வையும், அந்தச் சுகம் இனி சொந்த மண்ணில் கிட்டுமா என்ற எதிர்பார்ப்போடும் கவிஞர் கீழுள்ள வரிகளை கூறியிருக்கிறார். மண்ணில் வேரோடிய மனசோடு (பக்கம் 41)

கணங்கள் யாவுமே
கதைகள் பல சொல்ல
கனவுகளாய் விர்ந்து
கண்ணுக்குள் நிழலாட
நெஞ்சுக்குள் இனிக்கிறது

மண்ணில் வேரோடிய 
மனசோடு வாழுகிறோம்
மீட்டிடும் பொழுதுகள் யாவும்
மீளாதோ மீண்டும்
நிஜங்களாய் நாளை!

எந்த மதத்தவர் என்றாலும் தத்தமது மதத்துக்குரிய பக்தி அவர்களிடம் காணப்படுதல் இயல்பே. அவ்வகையில் புனித இஸ்லாம் மதத்தைக் கொண்ட நாங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவன் தூதர் வழி நடப்பதுதான் வெற்றியைத் தரும். எது நடப்பினும் எனக்குக் கவிலையில்லை. எனது குருதியின் ஒவ்வொரு துளியும் உச்சரிக்கும் கலிமாவை என்று ஈமானிய ரசம் பொங்க உறுதியாக கூறி நிற்கிறார் யாழ் அஸீம் அவர்கள். இது எங்கள் வரலாறு (பக்கம் 55)

என்னை
வெட்டித் துண்டாக்கு
சுட்டுப் பொசுக்கு
வேரோடு பிடுங்கி வீசு!
வீழும் உடலின்
ஒவ்வோர் அணுவும்
ஓடும் குருதியின்
ஒவ்வொரு துளியும்
உச்சரிக்கும் கலிமாவை!

முகாம்களில் அடைந்து வாழும் வாழ்க்கையப் பற்றியும் கவிதை எழுதத் தவறவில்லை யாழ் அஸீம் அவர்கள். எந்தவித சுகாதார வசதிகளும் அற்று, அடுத்த வேளை உணவுக்காய் அல்லல்படும் மனிதர்களின் மனங்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கும். பணக்காரராக வாழ்ந்தவர்கள் பரதேசிகளாக ஆன நிலையில் காலத்தை கடத்தும் வேதனையை யாரிடம் சொல்லி அழுவார்கள்? வெளிச்சம் வெளியேயும் இல்லை (பக்கம் 63) என்ற கவிதை வரிகள் எம் மனதையும் நெகிழ வைக்கின்றன.

புன்னகையை விற்றுக்
கண்ணீரைக் கடன் வாங்கிய
இவர்கள் வியாபாரத்தில்
எஞ்சியது சில மூச்சுக்கள்தான்!

கிழிந்த ஆடைகளைப் பற்றிக் 
கவலைப்படுவதில்லை
இவர்கள் கவலையெல்லாம் - நம்
கிழிந்த வாழ்க்கையைப் பற்றித்தான்!

பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருக்கும் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள் சிறந்த கவிதைத் தொகுதியை வெளியிட்டு, அவற்றை மக்கள் மனதில் பதியச் செய்துவிட்டார். அவர்; இன்னும் பல படைப்புக்களை எழுதி புத்தகங்களாய் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.


நூலின் பெயர் - மண்ணில் வேரோடிய மனசோடு 
நூலாசிரியர் - யாழ் அஸீம்
வெளியீடு - ஸுபைதா பதிப்பகம்
முகவரி – 228/1, ஜும்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு – 10.
தொலைபேசி – 0717 268466
விலை - 300 ரூபாய்

Friday, August 10, 2012

பாவைப் பிள்ளை - சிறுவர் பாடல் தொகுதி

பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார்.

சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும்.

அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையால் இப்புத்தகத்துக்குரிய சான்றிதழையும் பெறிருக்கின்றார்.

மொத்தம் 20 பாடல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இந்நூலானது  47 பக்கங்களில், வர்ணப் படங்களுடன் சர்வீனா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்விரண்டு வரிகளில் வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் தெட்டத் தெளிவாக கூறியிருப்பது திருக்குறள் என்று பலரும் சொல்வர். திருக்குறள் இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய மேன்மை பொருந்திய நூல் பற்றி சிறுவர்களும் உணர வேண்டும் என்பதற்காய் திருக்குறள் என்ற முதல் பாடலின் சில வரிகள் இவ்வாறு வருகிறது.

இரண்டு வரியில் உள்ளதாம்.
இனிய கருத்து நிறைந்ததாம்
திரண்ட செய்தி சொல்லுமாம்
திருவள்ளுவர் தந்ததாம்

செய்ய எதை வேண்டுமோ
செய்ய எதை வேண்டாமோ
மெய் உணர்த்தி வைக்குமாம்
மேன்மையான குறளதாம்

வேளைப்பளு அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் தந்தை மாத்திரமன்றி தாயும் தொழிலுக்குச் செல்லும் தேவை அல்லது திண்டாட்டம் வலுப்பெற்றிருக்கிறது. அவ்வாறாயின் அலுவலகத்துக்கு செல்லும் அவதியில் அவசர உணவுகள் தான் இன்று கைகொடுக்கின்றன.

பிட்டு, இடியப்பம், தோசை போன்ற பாரம்பரிய உணவுகள் மறக்கப்பட்டு பாஸ்ட்புட் உணவுகள் எம்மை ஆக்கிரமித்துவிட்டன. நல்லது என்ற தலைப்பிடப்பட்ட பாடல் சத்துணவுகளை இன்னொருமுறை ஞாபகப்படுத்துமாற்போல் இருப்பதை அவதானிக்கலாம்.

பாலும் பழமும் நல்லது
பச்சைக் காய்கறி நல்லது

பருப்பும் கிழங்கும் நல்லது
பலம் தருவதில் வல்லது

மீனும் முட்டை இறைச்சியும்
மிகவும் ஊட்டம் உள்ளது

சிறுவர்களை மாத்திரமல்லாது கவிஞர்களையும் கவர்ந்த ஒரு அதிசயம் நிலா. நிலாவைப் பற்றி எப்படியெல்லாமோ, யார் யாரெல்லாமோ கூறி விட்டார்கள். ஆனாலும் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமது ரசனைக்கேற்றாற்போல நிலவினைப் பற்றி பாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். நூலாசிரியரும் பாடுகிறார் இவ்வாறு..

நிலாப்பாட்டு பாடியே
நிலாவோடு சேருவோம்
உலாப் போகும் வெளியினை
உல்லாசமாய் நாடுவோம்

இரவைத் தேடும் உறவுப்பூ
இருளில் அழகு காட்டுதே
வரவுக்காக காப்பதால்
வழியில் மகிழ்ச்சி பூக்குதே

இலங்கை நாடு எம் நாடு என்று வெறுமனே பாடிக் கொண்டிருக்காமல் மூவின மக்களும் சமமானவர்கள், தாய் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாணவர்கள் மத்தியில், எதிர்கால சந்ததியினர் மத்தியில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியும், சுபீட்சமும் தோன்ற வழி பிறக்கும். கடந்த காலங்கள் போன்று எதிர்காலங்கள் ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையை வலியுறுத்தும்  முயற்சியாக எங்கள் நாடு என்று தலைப்பிட்ட கவிதையின் சில வரிகள் இதோ..

இந்து இஸ்லாம் பௌத்தம்
இனிய கிறிஸ்தவமும்
இந்த நாட்டின் நெறியாய்
இருக்கும் ஒரே விதமாய்

இனங்கள் பல உண்டு
இலங்கையர் நாம் என்று
சனங்கள் உணர்ந்து கொண்டால்
சரிசமமாய் வாழ்வோம்

நலன்புரி நிலையங்களில் வாழ்க்கை நடாத்துபவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழுவதை அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு எம்மாலான உதிவிகளைச் செய்ய வேண்டும். சொந்த மண்ணில் இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கண்ணீர் கதைகளோடும், நினைவுகளோடும் வாழ்கின்றார்கள். கடந்துவிட்ட அவர்களது வாழ்வு மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்தோடு வாழு(டு)ம் அவர்கள் பற்றி நூலாசிரியர் செ. ஞானராசா அவர்கள் தனது நலன்புரி நிலையம் என்ற பாடலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

நலன்புரி நிலைய மாணவர்கள்
நலம் பல இழந்து போனவர்கள்
பலன் பெற உதவி செய்திடவே
பாசமாய் எழுந்து வாருங்கள்

வன்னியில் இருந்த போதினிலே
வாய்ப்பு வசதிகள் அவர்க்குண்டு
அன்னியப்பட்டுப் போனதினால்
அடிப்படை உரிமை இழந்தாரே

தனது பாடல்களால் சின்னஞ் சிறார்களை கவரும் வல்லமை ஆசிரியருக்கு இருக்கிறது. நூலுருவாக்கத்தில் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களை சேர்திருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

பெயர் - பாவைப் பிள்ளை (சிறுவர் பாடல்;)
நூலாசிரியர் - செ. ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200 ரூபாய்

குற்றமும் தண்டனையும் - சிறுகதைத் தொகுதி

குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.

தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

சிந்திக்கத் தக்கவை. இன்று எழுதப்படும் பல விடயங்களில் அர்த்தங்கள் என்று எதுவுமிருக்காது. அப்படியின்றி சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விடயங்களை முன்வைக்கும்போது சிறுகதைகள் வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இது பற்றி நூலாசரியர் நிஸ்வான் அவர்கள் தனது உரையில் கூறியிருக்கும் வாசகங்கள்.


`கதைகள் மக்கள் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் கலைத்துவ சிருஷ்டிகளாக அமையும் பட்சத்தில் அவை மக்கள் கலையாக மாறுகின்றன. சமூகப் பார்வையற்ற மனிதப் பிரச்சினைகளை அணுகாத கதைகள் யதார்த்தமானதல்ல'.

வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தல் என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. பல வருடங்களாக தொடரும் இந்த பழக்கத்தால் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். பலர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இத்தொகுதியின் முதல் கதையாக வருகின்ற குற்றமும் தண்டனையும் என்ற கதையும் மேற்சொன்ன பிரச்சினையை இயம்பி நிற்கின்றது.

குடும்பத் தலைவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக உழைக்கவென்று வெளிநாடு செல்கிறான். வருடங்கள் ஐந்து கடந்த நிலையில் சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வந்து ஓரிரண்டு தினங்கள் கடந்த நிலையில் மனைவி அவனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறாள். அதற்கான காரணத்தை அறிந்தவனுக்கு தலையே சுற்றுகிறது.

அதாவது ஷமனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது|  என்பதை மனைவி மூலமே அறிகின்றான். இதைப்பற்றி ஒரு பெரியவிரடம் ஆலோசனை கேட்கும்போதுதான் தனது பிழையை உணருகிறான் குடும்பத் தலைவன்.

மனைவியை தனிமையில் விட்டுச் சென்றால் சிலவேளைகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிகழலாம். அதைப் பற்றின விழிப்புணர்வுக் கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது.

கல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்பதாகும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பலனும் கிடையாது. பாடசாலை மாணவர்கள் இன்று மிகவும் துர்நடத்தை உள்ளவர்களாக மாறி வருவதை அவதானிக்கலாம்.

பாதைகளில் போகும்போது வரிசையாக செல்லாமல் கத்திக்கொண்டும், பாதையில் வருவோர் போவோரை பகிடி பண்ணியவாறும் செல்கின்றார்கள். பெண் பிள்ளைகளைக் கண்டால் போதும் ஏதேதோ கூறி தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆசிரியர்களை மதிப்பதில்லை. இவ்வாறான விடயங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையே ஒழுக்கம் இல்லாத கல்வி என்பதாகும்.

காலம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வரதட்சணை என்ற சம்பிரதாயம் மாறுவதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் இது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும். மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டியவர்கள் சீதனத்தை பெறுவது என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். நிலைகெட்ட மனிதர்கள் என்ற கதையில் வரும் பிரச்சினையும் மேற்சொன்னதுதான்.

மாமியர் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியாரும் மதினியும் வார்த்தைளால் கொல்லுகிறார்கள். அந்த ஊரில் ஏதாவது ஒரு திருமணம் நடந்தால் அந்த வீட்டவர்கள் வீடு கொடுத்தார்கள், நகை கொடுத்தார்கள். நீ என்ன கொண்டு வந்தாய் என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். கணவனிடம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறார்கள் என்று கணவன் சொல்கிறார். இப்படியிருக்க அந்தப் பேதை தீக்காயங்களுக்கு இரையாகி இறந்து போகிறாள். இது தற்கொலையா, கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. பணத்துக்காக என்னென்னமோ நடக்கிறது. இப்படியும் நடக்கிறது என்றவாறு நிறைவுறுகிறது இந்தக் கதை.

அந்த ஒரு நிமிடம் என்ற கதை குடும்பப் பகையையும், காதலையும் உள்ளடக்கியது. சொந்த அண்ணன் தங்கச்சியின் பிள்ளைகளான மச்சானும், மச்சாளும் காதலிக்கிறார்கள். ஆனால் சொத்துப் பிரச்சினையால் குடும்பங்களிரண்டும் ஜென்மப் பகை. ஆதலால் இருவரும் ஊரைவிட்டு ஓட திட்டம் தீட்டுகின்றனர். இந்த விடயம் ஊரிலுள்ள பெரியவர்களுக்கு எட்டுகின்றது. இவ்hறானதொரு இழிகாரியம் நடந்தால் அது சமூகத்துக்கும் பாதிப்பு. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்கும் பாதிப்பு. ஆதலால் இரு வீட்டாருடன் கலந்து பேசுவதாகக் கூறி சமாதானப்படுத்துகின்றனர் ஊர் பெரியோர்கள்.

கண்டிஷன் மாப்பிள்ளை என்ற கதை சிரிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. பல லட்சங்கள், நகை, வீடு, மாப்பிள்ளையின் பக்கத்திலிருந்து வருவோர் அனைவருக்கும் சாப்பாடு யாவற்றையும் பெண்ணின் வீட்டார் செய்ய வேண்டும் என்பதும், திருமணம் பெரிய பணக்கார ஹோலில் நடைபெற வேண்டும் என்பதும் மாப்பிள்ளை வீட்டாரின் கண்டிஷன்.

எல்லா கண்டிஷனுக்கும் பெண் வீட்டார் ஒத்துக்கொள்கின்றனர். காரணம் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. மாப்பிள்ளையின் தகப்பனும் பெரிய தனவந்தர். ஊரில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் முதல் ஆளாக அழைக்கப்படும் செல்வாக்கு கொண்டவர். ஆதலால் எப்படியேனும் அவரின் மகனை தமது மருமகனாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர்.

திருமண நாளன்று மாப்பிள்ளை வர தாமதமாகிறது. பெண் தரப்பிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வரப் பேகின்றார்கள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர்கள் யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்று. காரணம் ஷஇரண்டாம் இலக்க மண்டபம் மாப்பிள்ளைக்கு போதவில்லையாம். முதல் மண்டபத்தில் கல்யாணம் நடைபெறாதது மாப்பிள்ளைக்கு செய்த அவமரியாதையாம்|.

இவ்வாறான பல சமூக விடயங்களை தனது கதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூல் - குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
நூலாசிரியர் - எம்.பி.எம். நிஸ்வான்
முகவரி - ரஹ்மத், 6 ஏ, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, பாணந்துறை.
தொலைபேசி - 0382297309
வெளியீடு - ரஹ்மத் பதிப்பகம்
விலை -  200 ரூபாய்

Wednesday, June 20, 2012

பூஞ்சிறகுகள் - சிறுவர் பாடல்

பூஞ்சிறகுகள் சிறுவர் பாடல் மீதான இரசனைக் குறிப்பு

புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடாக மேக வாழ்வு எனும் கவிதைத் தொகுதியையும், நோன்பு என்ற பெயரில் சிறுவர் கதை நூலொன்றையும் தந்த வெளிமடை ரபீக் அவர்கள் தனது அடுத்த தொகுதியை சிறுவர் பாடல்களாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். 22 பக்கங்களை உள்ளடக்கிய பூஞ்சிறுகுகள் என்ற இந்த நூல் வர்ணப் படங்களையும் ஏந்தி அழகாக காட்சியளிக்கின்றது. சிறுவர்களின் மனதைக் கவரும்படியான அழகிய பாடல்களும், படங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.

வெள்ளாப்பு வெளியின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்நூல் பற்றி குழந்தைகள் போலவே குழந்தை இலக்கிய வடிவங்களும் வடிவழகு மிளிர்பவை. எளிமையும், எழிலும் பூப்பவை. குழைவு மொழியாய் குதூகலிப்பவை. தேனோசையில் சுரந்து வழிபவை. பூஞ்சிறகுகளாய் புளகாங்கிப்பவை என்கிறது வெள்ளாப்பு வெளி வெளியீட்டகம்.


ஈழக்கவி நவாஸ் ஏ. ஹமீட் அவர்கள் நூலின் சிறப்பம்சம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியங்களைப் படைப்போர் குழந்தைக்கல்வி, குழந்தை உளவியல், குழந்தைகளுக்குரிய கற்பித்தலியல், சிறுவர் அழகியல், சிறுர்களுக்கான மொழி, ஓசை, பாடுபொருள் முதலிய பல்வேறு துறைகளிலும் அறிவு மிக்கவர்களாயிருத்தல் இத்தகைய உயிர் துடிப்புமிக்க பாடல்களை எழுதியிருக்கிறார்.

திரு. ரபீக் அவர்கள் ஆரம்பப் பிரவுக்கான ஆசிரியப் பயிற்சியையும் பட்டப்பின் படிப்பின் மூலமாக உளவியலையும் அறியப் பெறறிருப்பவர் ஆரம்ப, உயர்தர வகுப்புக்களுக்கு கற்பித்த ஆசிரியர் ரபீக் அவர்கள் தற்போது வெளிமடை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுகிறார்,

அம்மா என்ற முதல் பாடலானது அகர வரிசைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. தாயினதும், இரண்டு பிள்ளைகளினதும் வர்ணப்படமும் இக்கவிதைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன் சில வரிகள் இதோ..

அம்மா எங்கள் அம்மா
ஆசையான அம்மா
இனிமையான அம்மா
ஈகை வழங்கும் அம்மா

உணவு சமைக்கும் அம்மா
ஊஞ்சல் ஆட்டும் அம்மா
எனக்கு விருப்பம் அம்மா
ஏற்றம் காட்டும் அம்மா...

தங்கை என்ற பாடல் இனிமையாகவும், ஓசை நயம் மிக்கதாகவும் காணப்படுகின்றது. நிலவைப் பற்றியும் பாடலினூடாக கூறும் கவிஞர் சிறுவர்கள் விரும்பும் பாடலாக இதை புனைந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

தங்க நிலவு வானிலே
தவழும் அழகைக் காணவே
தங்கை வந்து நிற்கிறாள் - கையைத்
தட்டித் தட்டிச் சிரிக்கிறாள்!

அங்கும் இங்கும் பார்க்கிறாள் - அந்த
அழகிய நிலவைக் கேட்கிறாள்
மங்கல் வானைப் பார்க்கிறாள் - நிலவு
மறைவதெப்படி? கேட்கிறாள்..

துயில் கொண்டிருக்கும் தன் குட்டித் தம்பியை ஒரு சிறுமி பள்ளிக்கூடம் போவதற்காக எழுப்புகிறாள். அந்த விடயத்தை பாடல் மூலம் தந்திருக்கிறார் கவிஞர். சிறுவன் கட்டிலில் தூங்குவது போன்றும், அவனருகே ஒரு சிறுமியும், கடிகாரமும் சித்திரத்தில் காணப்படுகின்றன. தம்பியை எழுப்பும் அந்தக் காட்சி சித்திரமாக்கப்பட்டிருக்கின்றமை சிறுவர்களை கவர்ந்துகொள்ளும்.

சோம்பல் நீயும் கொள்ளாதே
சோர்ந்து நீயும் தூங்காதே
வீம்பு நீயும் கொள்ளாதே
விரைவாய் தம்பி எழுந்திடுவாய்

பள்ளி செல்ல வேண்டுமே
பாடம் படிக்க வேண்டுமே
துள்ளி நீயும் எழுந்திடுவாய்
தூக்கம் வேண்டாம் எழுந்திடுவாய்!

முத்துப் பற்கள் என்ற தலைப்பில் சிறிய பாடல் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. எட்டு வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் பற்களை பாதுக்காக்க வேண்டும் என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது.

கண்ட கண்ட பொருளை பல்லால்
கடிக்கும் பழக்கம் தவிர்திடுவோம்
உண்ட பின்னே உறங்கும் முன்னே
ஒழுங்காய் பல்லைத் துலக்கிடுவோம்

வெட்டும் பற்கள் வேட்டைப் பற்கள்
வேண்டும் நமக்கு நாளுமே
முத்துப் பற்கள் நன்றாய் காத்து
மகிழ்ச்சி காண்போம் வாழ்விலே!

மாலைக்காட்சி, அணில் குஞ்சு, மரம் நடுவோம், பச்சைக்கிளி என்ற தலைப்புக்களிலும் அழகிய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவ்வாறான பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வெளிமடை ரபீக் அவர்களின் பூஞ்சிறகுகுள் என்ற நூலும் தனக்கான தனியிடத்தைப் பெற்று நிற்கின்றது.

குழந்தைகளுக்கு எது நல்லது என்பதை பெற்றோரும், வளர்ந்தவர்களும் நன்கறிவார்கள். இன்றைய இளஞ் சமூகம தனது ஓய்வு நேரங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக் கருவிகளுடன் கழிக்கின்றது. ஆனால் அதன் பாரதூரங்களை அவர்கள் அறியமாட்டார்கள். நாம்தான் சிறுவர்களுக்கு உகந்தவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் நூல்கள் அறிவுக்குத் தீனியாகவும், நல்ல விடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் திகழ்கின்றன. எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மிளிர வேண்டுமானால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கற்றக்கொடுங்கள். நூலாசரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!

நூலின் பெயர் - பூஞ்சிறகுகள் (சிறுவர் பாடல்)
நூலாசிரியர் - வெளிமடை ரபீக்
தொலைபேசி - 077 9790053
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 150 ரூபாய்

சின்னச் சிட்டுக் குருவி - சிறுவர் பாடல்

சின்னச் சிட்டுக் குருவி சிறுவர் பாடல் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சின்னச் சிட்டுக் குருவி என்ற சிறுவர் பாடல் தொகுதியினூடாக இலக்கிய உலகத்துக்கு அறிமுகமாகிறார் திருமதி. சுகிலா ஞானராசா அவர்கள். இவர் எழுத்தாளர் திருகோணமலை செ. ஞானராசா அவர்களின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்ககது.

தி/செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றும் இவரிடம் இயல்பாகவே சிறார்களுக்கு பாடல் புனையும் திறமை இருந்திருப்பதை இந்த நூல் கட்டியம் கூறுகிறது.

சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 41 பக்கங்களில் அமைந்த இத்தொகுதி, கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன் 17 பாடல்களையும், அவற்றுக்கேற்ற வர்ணப் படங்களையும் அழகாக தன்னகததே கொண்டிருக்கிறது.




சிட்டுக் குருவியே என்ற பாடல் ஓசை நயம் மிக்கதாகவும், ரசிக்கத்தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

பஞ்சு மெத்தை மேனி
பார்த்தெடுப்பாய் தீனி
அஞ்சு விரல் தொட்டுக்கொள்ள
ஆசைப்படும் தேன் நீ!

மொட்டு விடும் மலரில்
மொய்த்து வரும்போது
கிட்ட நான் வரவும்
கிளம்பி ஏன் பறப்பாய்?

வாசித்தல் மனிதனை பூரணமாக்கும். நூலகம் வாசிப்பிற்கான பொதுத்தளம். இன்றைய சமுதாயத்தில் வாசிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. பாடசாலைகளிலும் நூலகங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் தவிர ஆசிரியர்களும் வாசிப்பையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் அறிய வேண்டும். அதற்காக நூலகம் என்று தலைப்பிட்ட கீழுள்ள பாடல் பேருதவியாய் அமைகிறது. அதன் அடிகள் இவ்வாறு

நூலகம் நாம் சென்று
நூல் பல கற்று
பாலகப் பருவம் இதை
பயனுளதாக்குவோம்

இரண்டடி எனும் குறள்
இதனுடன் நாலடியார்
தர மெனும் பெருங் காப்பியம்
தகும் எனக் கண்டவை

இயற்கை என்ற பாடல் ரம்மியமாக மனதை வருடுகிறது. அதற்காக இணைக்கப்பட்டுள்ள படமும் மனதில் பதிந்துவிடுகிறது. வானம், கடல், காடு, நிலம் எல்லாமே இயற்கை அழகுக்காக உவமிக்கப்படுபவை. நூலாசிரியரின் வரிகள் இவ்வாறு விரிகிறது..

இயற்கை தந்த செல்வம்
இறைவன் தந்த இன்பம்
வியக்கும்படி இருக்கும்
விதத்தை அறிய இனிக்கும்

மயக்கம் மாலைப் பொழுதில்
மஞ்சல் வெயில் போட்டு
தயக்கம் இல்லாதிருக்க
தக தக வென ஒளிரும்

காலை எழுந்தவுடன் படிப்பு.. பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா.. என்று கூறியிருக்கிறார் பாரதி. படிப்பைப் போல விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கும் அவசியத்தை இந்த வரிகள் சுட்டி நிற்கின்றன. திருமதி சுகிலாவும் விளையாடுவோம் என்ற மகுடத்தில் பாடலை பின்வருமாறு இயற்றியிருக்கிறார்.

குந்தி இருந்து நொந்து
குழம்பி போனோம் என்றால்
எந்தப் பயனும் இல்லை
எமக்கு ஏற்றது அல்ல

ஓடி ஆடி விளையாட
ஓடும் குருதி சீராகும்
கூடி மகிழக் குறையும்
குழப்பமான மன நிலையும்

கணிதப் பாடத்தைப் போல் இலேசான பாடமில்லை என்றும், அதைப்போல கஷ்டமான பாடம் இல்லை என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். எது எப்படியிருப்பினும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டால் கணிதம் சுலபமாக அமையும். ஆனால் பலர் அப்படியின்றி ஷகாப்பியடித்து| விடுகின்றனர். நூலாசிரியரின் நயக்கத்தக்கதாக எழுதியிருக்கும் விதம் இவ்வாறு அமைகிறது.

சாட்டுக்காக பார்த்துச் செய்து
சரி வாங்கிக் கொண்டால்
வீட்டு வேலை தந்தபோது
விரைவில் மாட்டிக்கொள்வீர்

நாளும் பயிற்சி செய்து வர
நன்கு கணக்கு அறிவு
நீளும் இதனை உணர்ந்து
நீரும் பயிற்றி எடுப்பீர்

தனது முதல் தொகுதி என்றாலும் மிக அழகியதாகவும், பாடத்திட்டத்துக்கு பொருந்தியதாகவும் பாடல்களை எழுதியிருக்கிறார் திருமதி சுகிலா அவர்கள். சிறுவர்கள் மாத்திரமின்றி புத்தகத்தை படிப்பவர்களும் பாடல்களால் கவரப்படுவார்கள். இன்னும் பல நூல்களைத் தர வேண்டும் என நூலாசிரியரை வாழ்த்துகிறேன்!!!

பெயர் - சின்னச் சிட்டுக் குருவி (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - சுகிலா ஞானராசா
முகவரி - 993, அன்புவழிபுரம், திருகோணமலை.
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200/=

Tuesday, February 28, 2012

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார்.


மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.


அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன.

முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.

பசியை இசையாய் நீ இறக்கிய
வெய்யிற் பொழுதில்
அத்தனைச் சோடிக் காதுகளாலும்
முழுச் செவிடாய்
உன்னைக் கடக்கும்
பெரும் வீதி

தன் மகனைக் கடத்திச் சென்ற சோகம் தாளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட ஒரு தாய்க்கான பாடலாக ஹயாத்தும்மா என்ற கவிதை இருக்கிறது. கீழுள்ள வரிகள் மூலமாக அந்தத் தாயின் துயர் நிரம்பிய இதயத்தை தரிசிக்க முடிகிறது.

நீ நெய்த கனவுகள்
நெய்தல் அலைகளில் கரைந்து அழிகையில்
உன்னால் எய்த முடிந்தது
மரணம் மட்டுமாயிற்று

மனிதர்கள் தனக்குக் கிடைத்தவற்றையிட்டு ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. எதைப் பெற்றாலும் அதைவிட சிறந்ததைப் பெறுவதற்கே மனம் அலைவதுண்டு. அதை கருத்தாகக்கொண்டு முரண் வாழ்வு என்ற கவிதை பிறந்திருக்கிறது. அழகிய உவமானமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை, மனித நிலை பற்றி விளக்குவதாக இருக்கின்றது.

குளத்து மீனுக்கு
தூண்டிலும் வலையுமான
அடக்கு முறைக்குள் சிக்காது
கண்ணாடிப் பளிங்குத் தொட்டியில்
வாழும் விருப்பம்

தொட்டி மீனுக்கோ
இன்னது இன்னதென்று எழுதிய
செயற்கை இருப்பின்
சொகுசுச் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு
குளத்தில் நீந்தவே ஆசை

என் வீட்டு மழை என்ற கவிதை ரசிக்கத்தக்கதாகும். மழைக் காலத்தில் நனையாமல் இருந்த எமது சிறுவயதுப் பொழுதுகள் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அந்த அழகிய நாட்களை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது. கவிதையின் கடைசி வரிகள் யதார்த்த வாழ்வை சுட்டிக்காட்டுவதாயும் இருக்கிறது.

பழைய வீட்டுக் கொப்பி
விதவிதமாய் கப்பலாகும்
என் கப்பல்கள் கரையேறுவதெப்படி
நான்கு குமர்களோடு உம்மா இருப்பாள்

முல்லை முஸ்ரிபா அவர்கள் ஆசிரியராக இருப்பதினால் மாணவர்களின் சுமைகள் பற்றி உளப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கின்றார். பிள்ளைகளை படி என்று சொல்கின்றோம். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான துறையில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வைத்தியர், பொறியிலாளர் என்ற வரையறைக்குள் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வலுக்காட்டாயமாக திணிக்கப்படுகிறது. விளைவு, சிலர் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்? கல் தெப்பம் என்ற கவிதையில் ஒரு மாணவனின் மேற்சொன்ன துயரங்கள் கீழுள்ள வரிகளாக...

இதயத்தை தோண்டியெடுத்துவிட்டு
அதனிடத்தில்
ஏதோவொன்றைத் திணிக்கிறீர்கள்
எனதான இலக்குகளை வரையவும்
இலக்கு நோக்கி பறக்கவும் முடியாதபடி
இறக்கைகளைப் பறிக்கிறீர்கள்

எத்தனைப் பிரச்சினைகள் மனதை வாட்டிய போதிலும் மழலையின் மொழி கேட்டால் அவை தூரமாகிவிடும். பெண் என்பவள் போற்றப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தாய்மையும் குறிப்பிடப்படுவது இதனால்தான். பெற்றோர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு பிள்ளைகள் என்கிறோம். அத்தகைய குழந்தைச் செல்வங்களைப் பற்றியதாக நிலவு துளிர்த்து அமாவாசை கருகி என்ற கவிதை காணப்படுகிறது.

செல்லமே நீ காலுதைக்கவும்
மென்பூச் சிரிப்புதிர்க்கவுமான
வினாடிகளில் மனசு மீளவும்
எல்லையில்லாப் பெருவெளியாய்
விரிகிறது

உள் முகங்கள் என்ற கவிதை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிதர்சனத்தை சொல்லி நிற்கின்றதை அவதானிக்கலாம். மாலை அயர்வில் தேனீர் சுவையாக இருக்கின்றது. சோர்வும் பறக்கின்றது. எனினும் தேயிலைத் தோட்டத்தில் உச்சி வெயில் கொடுமையில் பறிக்கப்பட்ட தேயிலையின் வாசம் தொண்டை வழியால் உள்ளிறங்குகிறது. மீண்டும் முகத்தில் அயர்வின் சாயல் படர்கின்றது என்கிறார் நூலாசிரியர்.

சாறாய்ப் பிழிந்த
உழைப்பின் சக்கை
துயராய்க் கசிகிறது
என் கோப்பைக்குள் இறங்குகிறது
வாழ்தலின் யதார்த்தம்

வவுனியா அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை இருள்வெளியும் நாளைய சூரியனும். யுத்தம் விட்டுப்போன எச்சங்களாக வாழ்ந்துகொண்டே மரணத்தை அனுபவிக்கும் அந்த மக்களுக்காக தனது துயரை பதிவு செய்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா அவர்கள். இருளிடம் கையேந்திப் பயனில்லை. சூரியனும் கருகிற்று. காற்றும் அசுத்தமாகிக் கிடக்கின்றது என்றவாறு புறச் சூழலை விபரித்து, இந்த வரிகளின் வழியே அங்குள்ள மக்களின் துயரை துல்லியமாகக் கூறுகின்றார்.

படர்வுறும் முட்கம்பிச் செடி
கிளைப்பதில்லை துளிர்ப்பதில்லை
காய்ப்பதில்லை கனிவதுமில்லையெனின்
குயிலாய்க் கூவித் தோப்பாகும்
கனவுகளுமற்றுப் போக
குரல் கிழிந்து தொங்குகிறது
முட்கம்பி வேலிகளில்

எனது தமிழ்ப்பாட ஆசானாக விளங்கிய இக்கவிஞரின் தொகுதிக்கு எனது குறிப்பை எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது இலக்கியத்தேடல் பற்றி சொன்னபோது, அந்த ஆவலை தன் எழுத்துக்கள் மூலமும், உற்சாக வழிகாட்டுதல் மூலமும் எனக்குத் தந்த நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கு இதனூடாக நன்றி நவில்தலை மேற்கொள்வது எனது கடமையாகிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - அவாவுறும் நிலம் (கவிதைகள்)
நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 200 ரூபாய்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

திருமதி சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற கவிதைத்தொகுதி இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 93 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் இளைய புதல்வியான சுமதி அவர்கள் தனது கவிதைகளுக்கூடாக சமூகம் பற்றி இருப்பு நிலையை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.



சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து மக்களை சரியான திசையில் வழிநடாத்தக்கூடிய இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களின் வரிசையில் திருமதி. சுமதி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார் என்று பதிப்புரையில் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தனதுரையில் சாதாரண பேச்சிலிருந்து இவரது கவிதைகள் புனித நெறியைக் காட்டுகின்றன. சிறப்பான எடுத்துக்காட்டாக இதனைச் சொல்லாம். நெருக்கடியான நேரங்களிலும், சோதனை தரும் வேளைகளிலும் இவரது கவிதைகள் நுட்பங்கள் நிறைந்து வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமதி சுமதி அவர்கள் ஓர் ஆசிரியையாக கடமையாற்றியதால் மாணவர்களோடு ஒன்றுபட்டு அவர்களது அகநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் எவ்வாறான முறையில் உதவலாம் என்று நன்கறிந்திருப்பவர். ஆதலால் தளிர்களின் சுமைகள் என்று மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதையின் தலைப்பையே புத்தகத்தினதும் மகுட தலைப்பாக்கியிருக்கிறார். அதுபோல நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கின்றார் நூலாசரிரியர்.

மாணவம் என்ற கவிதையில்

ஏணிப்படிகள் என
எண்ணிக் கால்வைக்க
உக்கி உருக்குலைந்து
சிதிலங்களாய்ப் போனதில்
இன்னும் இருண்டு கிடக்கின்றேன்
பள்ளிச் சிறைக்குள் (பக்கம் 21)

என்ற கவிதையானது குறிப்பிட்டதொரு விடயத்தை அடைய நினைத்து அதில் ஏமாற்றமடைந்தவர்களின் நிலையை சித்தரிக்கிறது எனலாம். வாழ்க்கையில் எல்லோரும் எத்தனையோ இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றில் எல்லாமே ஈடேறுவதில்லை. அத்தகையதொரு மனத்தாக்கதின் வெளிப்பாடாக ஒரு மாணவனின் பார்வையினூடாக இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

காதல் என்பது பள்ளிக் காலத்திலும் வரலாம். பருவக்காலத்திலும் ஏற்படலாம். ஆனால் பள்ளிக்காலத்தில் வரும் காதல் வெறும் இனக்கவர்ச்சியாக மாத்திரமே இருக்க முடியும். பக்குவப்படாத மனதில் காதல் விதைகளை விதைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று வந்தாகிவிட்டன. ஆனால் அனைவரும் பேதமின்றி அவற்றைப் பாவிக்கின்றனர். இத்தகைய வழிமுறைகளினால் மாணவர்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றார்கள் என்பது மெய்யான விடயம். அவர்களிடம் காதல் தப்பு என்று சொல்லலாம். எனினும். அத்தகைய சூழலை பிள்ளைகளுககு ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களுக்குச் சொல்வது யார்? அவ்வாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுமானால் மாணவச் சமூகத்தை சிறந்த எதிர்காலத்தின் பிரதிநிதிகளாக மாற்ற வழிவகைகள் ஏற்படும். இது பாதுகாப்பு என்ற இந்தக் கவிதையில் இவ்வாறு வருகிறது.

பருவ வயதில் காதல் பாழ்
பெற்றோர்களும் பாதுகாவலர்களும்
சொல்கிறார்கள் தம்
அறிவு முதிராத குழந்தைகளிடம்
இவர்களிடம் சொல்பவர் யார்
ஆதலினால் அவர்களை
அச்சூழலினின்று
பாதுகாருங்கள் என்று (பக்கம் 34)

சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறானதொரு சமத்துவம் வீட்டில் நிலவாதவிடத்து குடும்பங்களுக்குள் சச்சரவுகள் தலை நீட்டிப் பார்க்கின்றன. வெளியிடங்களில் பிரச்சனை என்றால் வீட்டுக்குள் போய் ஒதுங்கியிருக்கலாம். வீட்டிலேயே பிரச்சினை என்றால் யாரிடம் சொல்லியழுவது? ஆட்சி என்ற கவிதை இவ்வாறு

பிழையான ஆட்சி
நாட்டிலே நடந்தால்
வீட்டிற்குள்ளே
பூட்டிக்கிடக்கலாம்
அதுவே வீட்டிலும் என்றால்? (பக்கம் 35)

தளிர்களின் சுமைகள் என்ற கவிதை மாணவர்களின் பிரச்சினையாக உருவகித்திருக்கின்றது. பள்ளி செல்கையில் புத்தகச்சுமை. வகுப்பில் பாடங்களின் சுமை. வீட்டுப்பாடங்களை செய்யாதவிடத்தோ அல்லது ஏதாவது நிகழ்வில் தண்டனைச் சுமை. பிறகு மாலை வகுப்புச் சுமைகள் இப்படியே கழிந்து வீட்டிற்கு வந்தவுடன்

வீடு வந்து சேர்கையிலே
பெற்றோர் தம் எதிர்பார்ப்பு (கள்)
அத்தனையும் பெருஞ்சுமையாய்
மீண்டும் நாளை காலை
பள்ளி செல்கையில்.... (பக்கம் 37)

என்றவாறு கவிதை முடிகிறது. இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக இளங்குருத்துக்கள் படும்பாடு நன்கறிந்ததே. காலையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் பாடசாலைக்கு ஓடுகின்றார்கள். பாடசாலை முடிந்து அரக்கப்பறக்க சாப்பிட்டுவிட்டு மாலை வகுப்பு. மாலையில் வீடு வந்து எட்டு மணி வரை இன்னொரு வகுப்பு என்றே அவர்களது காலம் கழிகிறது. பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு கஷ்டப்பட்டு படித்து பரீட்சையில் தற்செயலாக சித்தியடையாவிட்டால் அவர்கள் உள்ளத்தால் அழுகின்ற வலி வார்த்தைகளில் உள்ளடக்க முடியாது. இந்தளவுக்கு மாணவர்கள் சுமைகளைத் தாங்குகின்றார்கள். அத்தகைய சுமைகளைத்தான் நூலாசிரியர் தனது கவிதையில் மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் தந்திருக்கின்றார்.

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பிரம்படி கொடுக்கப்படுவதுடன் முழங்காலில் உட்கார வைத்தல் என்ற தண்டனையும் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான தண்டனைகள் எவ்வாறிருக்கும் என்பது அனுபவப்பட்ட மாணவ உள்ளங்களிடம் விசாரித்தால் அறியலாம். முழங்காலில் நிற்க வைத்தல் என்ற தண்டனை குறைவானது என்ற எண்ணத்தை ஆசிரியத்தோழி மாற்றினார் என்று தண்டனை என்ற கவிதையில் கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாற்றினார் என்ற கேள்விக்கு கவிதையிலேயே இவ்வாறு பதிலிருக்கின்றதைக் காணலாம்.

ஏழைகளின்
உழைப்புக்காய்
இருக்கும் ஒரே
மூலதனம் உடல்தான்
அதை நாம்
நாசம் பண்ணாமல்
அப்படியே விட்டுவிடுவோம் (பக்கம் 41 - 42)

பெற்றோர்களின் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாகத்தான் வளருவார்கள். பெற்றோர்களின் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாதவிடத்து பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இறுதியில் பெற்ற தாய் தந்தையரைக்கூட மதிக்கமாட்டார்கள். அதை வளர்ப்பு என்ற கவிதை நிதர்சனமாக்கி நிற்கிறது.

பிஞ்சுகள் ஆவதும்
நம்மாலே
அவை நஞ்சுகள்
ஆவதும் நம்மாலோ (பக்கம் 64)

நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் அற்புதமானவை. அனைவரும் வாசிக்க வேண்டியவை. திருமதி. சுமதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தளிர்களின் சுமைகள் (கவிதைகள்)
நூலாசரியர் - திருமதி. சுமதி குகதாசன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 350 ரூபாய்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.

வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.

அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.

இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.

வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.

அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.

இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.

நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.

பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.

'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'

எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.

இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)
நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
வெளியீடு - சேமமடு பதிப்பகம்
தொலைபேசி - 011 4902406, 0718 676482
விலை - 280 ரூபாய்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.


'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.


பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.

பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.

இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை.

சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.

முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.
திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப் பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.

இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்
டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்
தொலைபேசி - 011 455 1098
விலை - 200 ரூபாய்