Wednesday, January 18, 2012

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.

மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படைப்பாளி தன்னை வானத்திலிருத்திக்கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. தன்னைச் சூழ நடப்பனவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும்போதே அதை வாசிக்கும் வாசகன் அக் கதாபாத்திரங்களை தன் அயலவனாகவோ, உறவினராகவோ, அறிமுகமானவனாகவோ அடையாளம்காண முற்படுகின்றான். அதுதான் அக்கதையின் வெற்றி. யதார்த்தம் இல்லாத எதுவும் காலவோட்டத்தில் காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கும் திருமதி பவானி அவர்கள் உண்மையில் மனிதநேயமிக்க படைப்பாளி என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர் என்பது திண்ணம். எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டாதவனே உண்மை மிக்க கலைஞனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் பவானி சிவகுமாரன் அவர்கள் தனது எழுத்துக்கள் போலவே செயற்பாடுகளிலும் உண்மையாக இருக்கிறார்.

சொப்பனத் திருமணம் என்ற முதல் கதையானது திருமணக் கனவுகளுடன் வாழ்ந்த இந்துமதி என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டது. கொழும்பில் வீடு வேண்டும் என்றும், நிறம் குறைவு என்றும் இந்துமதியின் திருமணம் காலத்தின் கோலத்தால் தள்ளிப்போகிறது. அன்றாட வாழ்க்கையுடன் வாழப் பழகிக்கொண்ட 32 வயதான இந்துமதி இறுதியாக தோழியின் வழிகாட்டலில் காண்டம் பார்க்கச் செல்கிறாள். அங்கே அவளது ஓலைகள் வாசிக்கப்பட்டு ராகு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக ஒன்பது சுமங்கலிக்கு தானமும், ஒன்பது குழந்தைகளுக்கு இனிப்பு, உடைகள், புத்தகம் ஆகியவை ஒன்பது வகையாகவும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக பஸ்ஸிலிருந்து இறங்கி தோழி வீட்டை அடைவதற்காக பாதையைக் கடக்க முற்படுகின்றாள் இந்துமதி. பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருந்த வீதியால் வந்த வாகனம் இந்துமதியை தூக்கியெறிகிறது. கல்யாணக் கனவுகளுடன் வந்தவள் இறுதியில் இறந்துபோகிறாள் என்று அக்கதை நிறைவடைகிறது.

தோற்ற மயக்கங்கள் என்ற சிறுகதை இன்றைய மாணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது. தனியார் வகுப்புக்களுக்குப் போகும் சில மாணவர்கள் கைத்தொலைபேசி காதை விட்டு அகலாதபடி உலகை மறந்து கதைக்கின்றனர். 'இயர்போனை' மாட்டிக்கொண்டு தமக்கு மாத்திரம் தான் பாடல் கேட்கத் தெரியும் என்ற வகையில் நடக்கின்றனர். புகையிரத பாதைகளில் தன்னை மறந்தபடி பாடல் கேட்டவாறு சென்ற மாணவர்கள் பலர் புகையிரத விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆடை விவகாரத்தில் மாணவிகள் அடிமட்டத்தில் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் இச் சிறுகதை தாய் தந்தையர் படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதோடு பிள்ளைகள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்க்கையை ஆரம்பிக்குமளவுக்கு துணிச்சலடைந்து விடுகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

பெண்களுக்கு உத்தியோகம் அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்காக பெண்கள் தொழில் பார்க்கலாம் என்று ஒரு சிலரும், பெண்கள் ஆணுக்கு குறைந்தவளல்ல அவளும் தொழில் செய்யலாம் என்று இன்னொரு சாராரும், பெண்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படிப்போனாலும் பிள்ளைகளை வளர்த்தல், சமைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்தததாக இருக்கின்றது. கோடைகாலத் தூறலகள் என்ற சிறுகதையில் வரும் தயாளினியும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வொழிச்சலின்றி இருக்கிறாள். அப்படியிருக்க இன்னொரு தலையிடியாக வந்து சேர்கிறாள் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஆனந்தி. வெளிநாடு போவதற்காக விசா வரும் வரை ஆனந்தி தயாளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

ஆனந்தியின் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தயாளினியை கோபம் கொள்ளச்செய்தாலும் தயாளினியின் வேலைகளில் முக்கால்வாசியை ஆனந்தி பொறுப்பேற்கிறாள். டே கெயாரில் விடப்படும் தயாளினியின் மகனையும் ஆனந்தியே வளர்க்கிறாள். இவ்வாறிருக்க எட்டு மாதங்களின் பின் ஆனந்திக்கு விசா வருகிறது. அவள் புறப்படும் நாளுக்கு முந்தின நாள் இரவு தயாளினியிடம்,

'நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏழு வருஷம்... இவ்வளவு நாள் நானும் கணவரும் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கல்ல. நீங்க இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ பிள்ளைகளோ தெரியாம ஏதாவது பிழை விட்டிருந்தால் மனசுல வச்சிருக்காதேங்கோ' என்று அழும் காட்சி மனதை நெருடுகிறது.

இவ்வாறான உரையாடல்களை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் நூலாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்கள் ஆனந்தியின் பிள்ளைகள் வீட்டிலுள்ள டெப், க்ளாஸ் ஆகியவற்றை உடைக்கையில் 'பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும் பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள்' என்றவாறு நகைச்சுவையூட்டக்கூடிய சிலவரிகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஆனந்தி சென்றுவிட இதுவரை ஆனந்தியிடம் ப்ரியமாக இருந்த தயாளினியின் மகன் மிகவும் சோர்வுற்றுப் போகிறான். அவனது முகத்தில் சந்தோஷம் காணாமல் போகிறது. அவன் தாயிடம் வேலைக்குப்போக வேண்டாம் என்று கூற தயாளினி பிள்ளைக்கும் தனக்குமாக கீழுள்ளவாறு சமாதானம் கூறிக்கொள்கிறாள் என்றவாறு கதை நிறைவடைகிறது.

'அம்மா வேலைக்குப் போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீ சேட், ஷூஸ், ஸ்கூல் பேக் வாங்கலாம். பிள்ளையின் ரூமுக்கு ஏஸி போடுவமா? கார் வாங்கலாம். ராகவ் அண்ணா மாதிரி நிறைய படிக்கலாம்...'

நிழல் கொஞ்சம் தா என்ற கதை பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதினூடாக நற்பழக்க வழக்கங்களை புகட்டுவதாய் அமைந்துள்ளது. மகன் மயூரனுடன் வசிக்கும் அந்தத்தாய் தனது சகோதரியின் மகளின் திருமணத்துக்காக தன் தாலியையும் காப்பையும் கொடுக்கின்றாள். அதையறிந்த மகன் தாயுடன் வாக்குவாதப்படுகின்றான். இரவு பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் கதை கேட்கப்போகிறார்கள். அவர் கூறும் கதை பாண்டவர் பற்றியது. அதில் தர்மனிடம் எந்தத் தம்பியை உயிருடன் பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்று தர்மதேவதை கேட்டபோது, தர்மர் நகுலனைத் தருமாறு கேட்கிறார் காரணம் ஷஎனது தாய் குந்தி தேவிக்கு நான் இருப்பது போல எனது சிற்றன்னைக்கு அவரது மகன் நகுலன் இருக்கட்டுமே| என்கிறார். அதைக்கேட்டு தர்மதேவதை நான்கு தம்பிமாரையும் உயிரோடு திருப்பிக்கொடுக்கிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாட்டி கதை சொல்லி இறுதியில் உன்னைப்போல் பிறரை நேசி என்ற தத்துவத்தை விளக்குகிறாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் மயூரன் மனம் மாறி இறுதியில் தாயிடம் இவ்வாறு கூறுகிறான்.

'அம்மா நான் நாளைக்கு வேலையால வரேக்க ரெடியா இருங்கோ. பிள்ளைகள் சின்னன்ல போட்ட காப்பு, மோதிரம் எல்லாம் சும்மாதானே இருக்கு. வெறுங்கையோட இருக்க வேண்டாம். உங்களுக்கு காப்பு வாங்கி வரலாம்...'

ஒரு சின்ன விடயத்தை வைத்து அழகிய கதையை ஆக்கும் திறமையுள்ள பவானி சிவகுமாரன் அவர்கள் மேலும் பல படைப்புக்களைத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நிஜங்களின் தரிசனம்
நூலாசரியை - பவானி சிவகுமாரன்
விலாசம் - 37 ஏ, ஸ்ரீ மகா விகார வீதி, களுபோவில, தெஹிவளை.
வெளியீடு - மீரா பதிப்பகம்
தொலைNசி - 011 2721382
விலை - 300 ரூபாய்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் - நாவல்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நாவலுக்கான இரசனைக்குறிப்பு

சிந்தனை வட்டத்தின் 339 ஆவது வெளியீடான வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவல் 12 அத்தியாயங்களை உள்ளடக்கி 88 பக்கங்களில் அமைந்திருக்கிறது. 2003ம் ஆண்டு எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், 2009ம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலையும் வெளியிட்ட திருமதி சுமைரா அன்வர், தனது மூன்றாவது வெளியீடாக வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவலைத் தந்து, இலக்கியத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.



நாவலின் நாயகன் மோஹித், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருமணத்தை தள்ளிப்போடுகிறான். அவனது மனதில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிலைத்து நிற்கிறது. தங்கைகள் திருமண வயதை அடைந்து நிற்கையில் மோஹித்துக்கு பணக்கார இடத்திலிருந்து திருமணம் பேசி வருகிறார்கள். குடும்பப் பொறுப்புக்களாலும், பெற்றோரின் அநாதரவான நிலையினாலும் மோஹித் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அசைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக சுமைரா அவர்கள் கையாண்ட கீழுள்ள உவமானம் சிறப்பாக இருக்கிறது.

'மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மல்லிகை மொட்டுக்கள் வண்டுகளுக்கு சீர் கொடுக்க வழியில்லாததால் ஏக்கங்களைச் சுமந்து அண்ணன் நான் கரை சேர்ப்பேன் என்ற அசட்டு நம்பிக்கையில்...' ஆக மொத்தத்தில் புரட்சிகரமாக சீதனம் வேண்டாம் என்று முழங்கியவன் சகோதரிகளின் திருமணத்தை ஒப்பேற்ற வேண்டுமே என்ற இக்கட்டான நிலையில் விஜி என்ற பணக்காரப் பெண்ணை திருமணம் செய்கிறான்.

பல விடயங்களில் விஜிக்கும் மோஹித்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. மோஹித் அழகியலை ரசிப்பவன். விஜி அறிவியலை ரசிப்பவள். இவன் கூட்டுக் குடும்ப அபிமானி. அவள் தனிமை விரும்பி. அவன் தார்மீகமாக சிந்தனை செய்ய, விஜியோ தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறாள். விஜி தன்னை ஆள்கிறாள் என்ற எண்ணமும், சீதனத்தை வாங்கி விட்டோமே என்ற தாழ்வுச் சிக்கலும் மோஹித்தை வருத்துகிறது. அத்துடன் விஜி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சொன்னமை அவனுள் பெரிய இடியை இறக்குகிறது. தன் நிலையை மோஹித் இவ்வாறு உணர்கிறான்.

'நான் விற்கப்பட்ட பண்டம். அவள் வாங்கிய எஜமானி', 'வித்த மாடாயிற்றே... பெற்றோருக்கு என்னை உரிமை பாராட்டவா முடியும்?'

தொழிலிருந்து வேறு கிளைக்கு விஜி மாற்றம் பெற்றுப் போகிறாள். அவள் தன் கணவனை தன்னுடன் வந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஊரின் கேலிப் பேச்சுக்குப் பயந்தும் பெற்றோர்கள் வேதனைப்படுவார்கள் என்று உணர்ந்தும் மௌனமாக அவளுடன் செல்கிறான் மோஹித். சமைப்பதில் உதவிசெய்தல், மளிகைச் சாமான் வாங்கி வருதல், விஜியை ஆபிசுக்கு அழைத்துச் செல்லல், வீட்டிற்கு அழைத்து வருதல், கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கு கூட்டிப் போதல் போன்ற சில்லறை வேலைகள் யாவும் மோஹித்தின் தலையில் சுமத்தப்படுகின்றது.

காதல் உணர்வினால் மனைவிக்கு பணிவிடை செய்யாவிட்டாலும், அடிபணிதல் என்ற உணர்வில் அவளுக்கான வேலைகளை செய்து வருகிறான் மோஹித். காலங்கள் கழிய அவன் அப்பாவாகப் போவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். எனினும் விஜி சொல்லும் பதில் அவனை மட்டுமன்றி வாசிப்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்கு குழந்தை தேவையில்லை என்றும், அதை கலைக்கப் போவதாகவும் கூறுவதுமே அதற்கான காரணம். எனினும் மனசாட்சியின் உறுத்தலுக்கு விஜி மசிந்ததால் ஆண் குழந்தையொன்று ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் விஜியின் பணத்தைக் கொண்டு மோஹித்தின் சகோதரிகளின் திருமணமும் செவ்வனே நடைபெறுகிறது. விஜியின் குழந்தையான வினோத் விஜியின் பராமரிப்பிலின்றி மோஹித்தின் பராமரிப்பில் விடப்படுகிறான். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது பெரும் தொல்லையாகிவிட ஒரு ஆயாவை நியமிக்கிறான் மோஹித்.

விஜியின் சந்தேகக் குணம் ஆயாவையும், மோஹித்தையும் இணைத்து தப்பான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறது. பெண்களுக்குரிய மரியாதையை அறிந்ததாலும், சகோதரிகளுடன் பிறந்ததாலும் மோஹித்தால் இதைத் தாங்க முடியாமல் போகிறது. அதை அறிந்து, மோஹித்தை விடவும் வயதில் மூத்த ஆயா வீட்டிற்கு வராமல் இருந்து விடுகிறாள். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏற மோஹித் பொறுமை இழக்கிறான். அவனது கத்தலை கணக்கிலும் எடுக்காத விஜி சீதனம் எடுத்தது பற்றியும், குழந்தை வேண்டும் என்று மோஹித் அங்கலாய்த்தது பற்றியும், தற்போது பராமரிக்கும் வேலை மட்டும் விஜிக்குரியதல்ல. அது மோஹித்துக்கும் உரியதுதான் என்றும் முழங்க, அவள் கூறியவற்றிலுள்ள உண்மையறிந்து மோஹித் மீண்டும் அவளிடமே சரணடைகிறான்.

விஜிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட தினமொன்றில் மீண்டும் கணவன் மனைவிக்கடையில் நெருக்கம் அதிகமாகிறது. அந்தத் தருணத்தில் டேகெயாரில் விடப்பட்ட வினோத் அங்கு நிகழும் சில அசௌகரியங்களால் மீண்டும் வீட்டிலேயே இருக்கத் தொடங்குகிறான். இந்த முறையும் மோஹித்தின் பாடு பெரும் திண்டாட்டமாகிறது. ஆகவே பழைய ஆயாவை அழைத்துப் பார்த்தபோது அவள் தனக்குத் தெரிந்த பூவிழி என்ற இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.

விதி யாரை விட்டது. மீண்டும் தாய்மையடைந்த விஜி இந்தத் தடவை கருவை அழிக்க முயற்சிக்கிறாள். எனினும் காலம் பிந்தியதல் அது சாத்தியமாகவில்லை. கருவை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் பாதிப்படைந்த சிசு (பெண் குழந்தை) மூளை வளர்ச்சி குன்றி பிறக்கிறது. கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கு முன் வேறொரு கோணத்தில் பிரச்சினை எழுகிறது. வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வந்த பூவிழி திருமணமாகாமலேயே கர்ப்பமாகிறாள். விஜி, அவளது பெற்றோர் அனைவரும் மோஹித்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது அதை மறுப்பதற்கான வழிகளற்று அநாதரவான நிலையில் இருக்கிறான் மோஹித். வாசகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகும் இந்த கதையோட்டத்தை நூலாசிரியர் தன் கற்பனைத் திறனால் மேலும் நகர்த்திச் செல்கிறார்.

அதாவது பூவிழி தான் காதலித்த பையனுடன் எல்லை மீறிப் பழகுகிறாள். அதனால் வந்த வினைதான் இதுவென்று விஜி அறிந்து கொண்டாலும் அவளது செயற்பாடுகளில் கனிவு இருக்கவில்லை. அவள் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். எதிர்பாராத ஒரு நாளில் மோஹித்தின் நண்பன் வந்து மோஹித்தைச் சந்திக்கிறான். அவனது பிரச்சினைகளை விளங்கிய நண்பன் மோஹித்தின் மாமி, மாமனாரை வரவழைக்கிறான். அதன் பின்பு விஜி பற்றி அவர்கள் சொல்லும் தகவல் தான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஆம்! விஜி அவர்களது மகளே இல்லை. சிறு வயதில் அவளது பெற்றோர் விபத்தொன்றில் சிக்கி இறந்தபோது அதைப் பார்த்திருந்த விஜி முதன் முதலாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகு அவள் உயிராய் நேசித்த தோழியுடன் ஏற்பட்ட நட்பு, சடுதியாக அஸ்தமித்ததால் ஏற்பட்ட மன விரக்தி ஆகியவற்றால் பாதிப்படைந்து யாரோடும் பழகாமல் படிப்பொன்றே தனது மூச்சு என்று செயற்பட்டு வந்திருக்கிறாள். இதன்போது பல்கலைக்கழக சீனியரைக் காதலித்து அவர் பணக்கார சம்பந்தம் வந்ததால் விஜியை நிராகரித்த போது உள ரீதியாக மேலும் தாக்கப்படுகிறாள்.

பயம், வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் என்பவை விஜியை மன நோயாளியாக்கிவிட்டது. அவளுடைய மென்மைகள் ஒழிந்து ஆண்மைக் குணம் ஒட்டிக்கொண்டது. இப்படியிருக்கும் போதுதான் விஜியின் அம்மாவுக்கு (வளர்த்த அம்மா) நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதைப் பார்த்து துடித்த விஜியிடம் இந்தச் சாட்டை வைத்து திருமணம் முடிக்க கெஞ்சுகின்றனர் அவளது பெற்றோர். ஏதோ நோக்கத்தில் அவள் ஒத்துக்கொள்ள, ஊரில் மதிப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்ந்த மோஹித்தை மருமகனாக்க முனைகின்றனர். காரணம் குடும்பப் பொறுப்பும், பொறுமையும், நற்குணமும் பொருந்திய மோஹித் விஜியை நன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கை.

விஜியின் கடுமையான போக்குக்கு காரணம் அறிந்த மோஹித் வேதனையால் துடிக்கிறான். அவனுக்கு விஜி மீது கழிவிரக்கம் பிறக்கிறது. நண்பன் கூறியது போல டாக்டரிடம் காட்டி விஜியை முழுமையாக சுகப்படுத்திவிட வேண்டும் என்று அவன் மனம் திடசங்கற்பம் கொள்கிறது என்பதாக நாவல் நிறைவடைகிறது. கடைசி வரைக்கும் விஜி மீது வாசகர்கள் வெறுப்பு கொண்டாலும், இறுதியில் அவள் மீது அநுதாபம் கொள்வார்கள் என்பது ஐயமில்லை.

சீதனத்தை எதிர்த்தும், கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு பற்றியும் துல்லியமாக சித்தரிக்கிறது இந்த நாவல். திருமதி. சுமைரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்)
நூலாசரியை - சுமைரா அன்வர்
விலாசம் - கே.கே.எம். கார்டன்ஸ், தக்கியா ரோட், மல்லவப்பிட்டிய, குருணாகலை.
வெளியீடு - சிந்தனை வட்டம்
தொலைNசி – 0723 670515
விலை - 200 ரூபாய்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில், கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.

முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.

அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.

இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - எக்மி பதிப்பகம்
தொலைபேசி - 011 5020936
விலை - 150 ரூபாய்

Wednesday, December 14, 2011

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா






சிங்கள இலக்கியத்தினூடாக நன்கறியப்பட்ட சிட்னி மாகஸ் டயஸ் என்பவரின் 'முல்லைத்தீவ் ஸீயா' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே முல்லைத்தீவு தாத்தா என்ற புத்திளைஞர் நாவலாகும். யுத்த காலத்தில் நிகழ்ந்த மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகளை உள்ளடக்கி இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிரேஷ்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார். தோதன்ன வெளியீடாக 119 பக்கங்களில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.



திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயப்பட்ட ஓர் எழுத்தாளர். அண்மையில் அவரது மணிவிழா நிகழ்வும் இடம்பெற்றது. சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர் தென்னிலங்கையின் எழுத்தாளர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றை தந்துள்ளதுடன் அவரது ஆளுமையின் வெளிப்பாடாக மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுலகுக்கு அளித்து வருகின்றார். அதனூடாக சகோதர இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறார்.

'இலக்கியத்திற்கூடாக சமாதானப் பாலம் அமைக்க எடுத்ததொரு விளைவே முல்லைத்தீவு தாத்தாவாகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்கமில்லை. விளைவை மட்டுமன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறையான பங்களிப்பைச் செய்ய முடியும். முல்லைத்தீவு தாத்தாவினூடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் சிட்னி மாகஸ் டயஸ் அவர்கள்.

இஸிது, ஹிருனி என்ற சிறுவர்கள் பாடசாலைவிட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும்போது 'மிஸ்டர் சுமனசேகர' என்றவாறு மறைந்த அவர்களது தாத்தாவின் பெயரை அழைத்தபடி முதியவரொருவர் வருகிறார். இஸிது உடனே பாட்டியிடம் சென்று கூற, அவர் வந்து பார்த்தபோது அது பரராஜசிங்கம் என்று அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார். காரணம் பரராஜசிங்கம் என்பவர் அவரது கணவருடன் ரெயில்வே திணைக்களத்தில் ஒன்றாக பணியாற்றியவர். மேலும் இனக் கலவரத்தின்போது பரராஜசிங்கம் குடும்பத்தினரை காப்பாற்றியவர் சுமனசேகர ஆவார். இஸிது, ஹிருனி விழித்தபடி பார்த்திருக்க பாட்டி அவரை அறிமுகம் செய்கிறார். அப்படி அறிமுகம் செய்யப்படுபவர் தான் நாவலின் கதாநாயகனான முல்லைத்தீவு தாத்தா.

யுத்தத்தில் சுமனசேகரவின் மகன் இறந்துவிட பரராஜசிங்கத்தின் மகனும் காணாமல் போய்விடுகிறார். இவ்விருவரையும் நினைவு கூர்ந்து முதியவர்கள் படும் வேதனை வாசகர்களுக்கும் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது. காரணம் உயிருக்குப் போராடிய காலத்தில் முல்லைத்தீவு தாத்தா அவரது மற்ற பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது தனிமரமாக இலங்கையில் வசிக்கிறார். நோயினாலும், முதுமையினாலும் அவர் உடல் தள்ளாடுகிறது. சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் தமது வீட்டுக்கு வந்துள்ள தாத்தாவை இஸிதுவின் அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் அடையாளம் கண்டு விசாரித்து அன்பாக உபசரிக்கிறார். பனங்கருப்பட்டி, பாணி, ஒடியல் போன்ற உணவு வகைகள் பற்றி இவ்விடத்தில் கூறப்பட்டிருப்பதினூடாக தமிழ் மக்களின் வாழ்வியலையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

மேலும் இனங்களுக்கிடையிலேயான யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை முல்லைத்தீவு தாத்தா சிறுவர்களுக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்குவதனால் இனி ஒரு காலமும் யுத்த பூமியொன்று உருவாகிவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். பின்வரும் விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்ப‌டவில்லை. இதன் காரணமாக தமிழ் தலைவர்கள் வெவ்வேறு உரிமைகளைக் கேட்க முனைந்தனர். தமிழ் மக்களையும் அவர்கள் சமமான பிரஜைகளாக காண விரும்பினர். தனிநாடு பற்றிய கருத்து அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தும் அவர்களுக்கு வன்முறையே பரிசாகக் கிடைத்தது. இதனால் எங்கள் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகி இருந்தனர். இருந்தும் இதற்கு மத்தியில் எங்களைப் போன்ற தமிழ் மக்கள் உங்களது தாத்தா, பாட்டி பேன்ற நல்ல சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம்...

1978ல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற சங்கீத கச்சேரியின் போதும், 1983ல் நடைபெற்ற அதே போன்றதொரு நிகழ்வின் போதும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெற்றன. அது பரவி பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வந்தன. இந்த மாதம் தான் கறுப்பு ஜூலை எனப்படுகிறது என்ற விடயமும் இவ்வாறான உரையாடல்களின் மூலமாக அறியக்கிடைக்கிறது.

மேலதிக தகல்களை அறியும் வகையில் கீழுள்ள வரிகள் அமைந்திருக்கின்றன.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற சிலர் எங்கள் இதயம் போன்ற பொது நூல் நிலைய‌த்தையும் முற்றுமுழுதாக எரித்து சாம்பலாக்கினார்கள். இயக்கங்களாக ஒன்று சேர்ந்திருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது இதன் பின்னர்தான். இவ்வளவு காலமாக அடி உதைபட்டது போதுமென்று சிந்திக்கத் தலைப்பட்டனர். சிறுபான்மையினர் என்று தமிழ் மக்களை இரண்டாம் பட்சமாக நடாத்தியதை அவர்கள விரும்பவில்லை. அத்தோடு யுத்தம் ஆரம்பமாகியது. தமிழ் மக்க‌ளுக்கு தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியை தமிழ் ஈழம் என்ற நாடாக அமைக்க விரும்பினார்கள்.

என்றவாறு கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த கோரங்களை தாத்தா கூறுகிறார். மேலும் எதிர்காலத்தில் எவரும் பிரிவினைப்பட்டு விடாமல் அழகிய இலங்கை உருவாக வேண்டும் என்று எண்ணி வருந்துகிறார் முல்லைத்தீவு தாத்தா. ஓரிரு நாள் கழித்து சுமனசேகரவின் மூத்த மகனும் தாத்தாவைப் பார்க்க குடும்பம் சகிதம் வந்து நலம் விசாரிக்கையில் அவரது மகன், மகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.

பரராஜசிங்கத்திடமிருந்து தொலைபேசி இலக்கத்தை வாங்கி எஸ்.எம்.எஸ் பண்ணி ஸ்கைப் முகவரியைப் பெறும் சுமனசேகரவின் மகன் தமது பால்ய கால வாழ்க்கையில் மனம் லயிக்கிறார்.

கொழும்பிலிருந்து வந்த சுமனசேகரவின் மூத்த மகன், பரராஜசிங்கம் அங்கிளுக்காக தயிர் கொண்டு வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் தாத்தாவைப்போல சோற்றில் தயிறு, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுகிறார்கள். தாத்தாவுக்காக அந்த சிங்கள இனச் சகோதரர்கள் சைவ உணவை சமைத்தாக கூறப்பட்டிருப்பதானது ஒற்றுமையை இயம்பி நிற்கிறது. இவ்வாறான சம்பிர‌தாயங்களை அனைத்து தரப்பினரும் பேணுவதனால் நாட்டில் சந்தோஷம் பொங்கி சமாதானம் நிகழும். இனிவரும் காலங்கள் இலங்கை தேசத்தில் நறுமணப் பூக்களை மலரச் செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த இலங்கையரின் கனவும், ஆசையுமாகும்.

தோதன்ன வெளியீட்டகத்தினால் பல சிங்கள நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கபட்டிருக்கின்றது. இது சகோதர இனத்துக்கு ஒரு பா(ப)லமாக அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். திக்வல்லை கமால் அவர்களின் அயராத உழைப்பின் வடிவமாக திகழும் இந்த நாவல் பாலித ஜனரஞ்சனவின் தத்ரூபமான அட்டைப் படத்துடனும், சித்திரங்களுடனும் சிறப்பு பெறுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா
மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - தோதன்ன பதிப்பகம்
தொலைபேசி - 032 2263446
விலை - 200 ரூபாய்

Tuesday, October 18, 2011

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.

பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.

இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.

வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.

அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா.

அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.

அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.

காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.

அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?

தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.

மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)
ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்
முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.
தொலைபேசி - 035 2246494
விலை - 200 ரூபாய்

37ம் நம்பர் வீடு - நாவல்

37ம் நம்பர் வீடு (நாவல்) பற்றிய இரசனைக் குறிப்பு 

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.

இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன.



கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.

அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள்.

வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.

அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து 'மாமா ருசியா இருக்குது' என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் 'ஏன்ட தங்கமே ஸீனத்' என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.

இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.

பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.

ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - 37ம் நம்பர் வீடு
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.
தொலைNசி– 011 5020936
விலை - 250/=

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்... என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.



சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.

தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.

எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.

பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.

1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.

திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர். இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.

எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.

தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!

நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள
ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
விலை - 200 ரூபாய்