Tuesday, July 13, 2010

இது ஒரு ராட்சஷியின் கதை - நாவல்

இது ஒரு ராட்சஷியின் கதை - நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு 

அண்மையில் வாசிக்கக் கிடைத்த நாவல்களுள் மிகவும் வித்தியாசமான போக்கில் அமைந்து மனதை தொட்டது வெளிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதியிருக்கும் இது ஒரு ராட்சசியின் கதை என்ற தலைப்பில் அமைந்திருக்கும் நாவல். இது இவரது இரண்டாவது நாலாகும். இது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச நாவல் போட்டியில ஆறுதல் பரிசு பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பாதாளம் மட்டும் பாய்ந்து மக்களை பேதமைக்குள்ளாக்கி விடும் பணத்தை கருவாகக் கொண்டு அழகானதொரு கதையை 19 அத்தியாயங்களில் மிகவும் அம்சமாக சித்தரித்திருக்கிறார் இலங்கையில் நாவல்களை எழுதி வரும் பிரபலங்களுள் ஒருவரான திருமதி. ஜரீனா முஸ்தபா அவர்கள்.



இவர் ஏற்கனவே மித்திரன் வாரமலரில் தொடராக எழுதி வந்த ஒரு அபலையின் டயறி| என்ற நாவலின் சொந்தக்காரர். சிறுகதைகளையும், கவிதைகளையும் யதார்த்தபூர்வமாக எழுதி வரும் இவருக்கு நாவல் குறித்தும் பரந்ததொரு அறிவு இருப்பதை இந்த இரண்டு படைப்புகளினூடாக அறிந்தபோது பிரம்மிப்பாக இருந்தது.

இன்று தமிழைக் கசடறக் கற்றாலும், நிறுத்தி வைத்து சுட்டாலும் இலக்கியம் வாய்ப்பது சிலருக்குத்தான். ஒரு படைப்பாளனை யாரும் உருவாக்க முடியாது. கலைஞனாவது கடவுள் அளித்த வரம். அந்த வகையில் சகோதர மொழியில் கல்வி பயின்றாலும் சொல்லாட்சி, கதை கூறும் பாங்கு, தான் சார்ந்த சூழலின் தாக்கத்தை கூறுதல் என்பன ஆசிரியருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

அழகான முகப்பு அட்டையை ஏந்தியிருக்கிறது புத்தகம். எக்காலத்திலுமே ஓய்ந்து விடாத அலைகள் போன்று தான், குடும்பத்துக்குள் எழுகிற பிரச்சனைகளும் தீர்வதில்லை என்ற கருத்துப்பட புத்தக அட்டை வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

இன்று இலக்கியக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பலர் மனிதாபிமானம் அற்றவர்களாக இருப்பது கண்கூடு. உண்மையாகவே இலக்கியத்தை மதிக்கிற ஓரிருவருக்குத் தான் தன்னுடைய எழுத்தை தன் கழுத்தாகவே பார்க்கிற மனம் இருக்கும். பலரது படைப்புக்கும், நடத்தைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது என்ற கருத்தில் சமூகம் இன்றிருக்கும் நிலையை திருமதி ஜரீனா அவர்கள் தனது ஆசிரியருரையில் கீழுள்ளவாறு தொட்டுக்காட்டுகின்றார்.

நான் நம்பியிருந்த அந்த தெளிந்த நீரோடைகள் எனது வெறும் கற்பனையாக மட்டுமே தெரிகிறது. அதில் எந்த நிஜத்தையும் காண முடியவில்லை. எங்கு பார்த்தாலும் தலை விரித்தாடுகின்ற ஈகோக்கள் சின்னப்பிள்ளைத்தனமாக தோன்றுகின்றது....

நாவலின் நுழைவாயிலை கடக்கும் போதே இராட்சசி என்ற பாத்திரத்தை உடனே தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அஹ்னாப் என்ற கதைப் பாத்திரம் இராட்சசியை வெறுப்பதாய் காட்டியிருப்பதினூடாக அந்த ஆர்வம், இன்னும் தூண்டுதலாய் அமைந்து விடுகிறது.

ஒரு போதும் வந்து விடக்கூடாது என்று நினைத்த இந்த ஊர், திடீரென்று வந்து நிற்கிற முச்சக்கரவண்டி, வீட்டில் நுழைந்ததும் தன் மனைவி ஸமீனாவிடம் பொரிந்து தள்ளும் விதம் என்று முதல் பாகத்திலேயே விறுவிறுப்பு ஆரம்பமாகிறது. அதை தொடர்ந்து அஹ்னாபின் குழந்தை விபத்துக்குட்பட்டு விட்டதோ என்ற பதற்றத்துடன், சற்றுத்தள்ளி கடை வைத்திருக்கும் பெண் காப்பாற்றுவதுமாக கதை நீள்கிறது.

வெண்மதி என்ற பெயரை தாங்கி எழுதும் படைப்பாளியின் எழுத்துக்கள், ஸமீனாவின் வாழ்வில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதையும், கதை நடுவில் வெண்மதியே இந்த ராட்சசி தான் என்று கணவன் அஹ்னாப் ஸமீனாவிடம் கூறுவதையும் ஏற்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பொதுவாக இன்று சிறுகதைகளைப் பார்த்தால் கூட அதில் வருகிற பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. கதையின் சுவாரஷ்யத்தை அது கெடுத்து விடுதலும் உண்டு. ஆனால் நாவலாக வெளிவந்திருக்கும் இவரது தொகுப்பில் ராட்சசியான ஸினீரா, அவரது கணவன், அஹ்னாப், ஸமீனா, ஆங்காங்கே வந்து போகும் சில உறவுகள் ஆகிய ஓரிரு பாத்திரங்களை வைத்தே முழு படைப்பும் உருப்பெற்றிருப்பது வாசகனை திருப்திப்படுத்துகிற ஒரு விடயம். ஒரே மாதிரி அமைந்த பெயர்கள், சம்பவங்கள் என்று சலிப்பூட்டாமல் தூங்கியிருப்போரையும் வாசித்தால் விழிப்பூட்டக்கூடியவாறு நயமாக அமைந்திருக்கிறது நாவல்.

ஓர் அபலையின் டயறி என்ற கதைக்கருவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு கோணத்தில் புனையப்பட்டிருக்கும் இந்தக் கதை சகோதரருக்கும், கணவனுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமாகவே ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பின்பு வெறுப்பின் உச்சத்தில் சகோதரர், ஸினீராவின் மீதே பாரபட்சம் காட்டுவதோடு அவர்களது பொருளாதார முன்னேற்றத்தில் தடையாய் இருப்பதையும் லாவகமாக சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

துஷார என்ற பாத்திரத்தை அமைத்திருப்பதினூடாக சகோதரரின் க்ரிமினல் வேலைகளை அம்பலமாக்கியிருக்கிறார். ஜெயிலிலிருந்து வந்திருக்கும் கொலைக்காரனான துஷாரவை தன்வயப்படுத்தி அவனுக்கு சகல உதவிகளும் புரிந்து தன் மைத்துனனான சகோதரியின் கணவருக்கு தீங்கிழைக்க தூண்டுவதை வாசிக்கையிலும், பள்ளிவாசலுக்காக காணி கெர்டுத்த அதிகாரத்தில் நிர்வாகிகளை அடிமைப்படுத்தி வைத்திருப்பதிலிருந்தும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணரச் செய்கிறது.

அதுமாத்திரமன்றி குடும்ப ஒற்றுமை பிளவுபட்டுப்போகக்கூடாதே என்ற தூய நோக்கத்துடன் சகோதரியின் மகளை (வளர்ப்பு) மருமகளாக்கிக்கொண்ட ஸினீராவின் தாய், இறுதியில் தன் இளைய மகளின் வீட்டில் தஞ்சம் புகுவதும் வேதனையானதொன்று. கொழும்பில் பிரபலமாகவும், அரசியல் செல்வாக்கும் உடைய உறவினர் ஒருவரின் உதவியோடு தான், தன் சகோதரர் இவ்வாறு செயல்படுவதாக அவரது அநீதிகளையெல்லாம் வெளிக்காட்டியிருந்தாலும், சகோதரர் வஸீரின் உள்ளத்தை தூய்மையாக்கி விடுமாறே இறைவனை வேண்டுகிறார் ஸினீரா. இதனூடாக ஸினீரா ஓர் உத்தமி என்ற எண்ணத்தை புரியக்கூடியதாய் இருக்கிறது.

குற்றம் செய்தவனிடம் பணிந்து நிற்பதும், தவறு செய்யாதவனை தண்டித்தலும், பலவந்தமாக பொலிஸ் ஜிப்பில் ஏற்றிச்செல்வதும், பூச்சாடியின் கீழிருந்து போதைப்பொருளை எடுப்பதுவும் இன்று சினிமாவில் அடிக்கடி காட்டுகிற ஒரு விடயம். இருந்தாலும் அந்த நேரத்திலும் இறைவனின் ஆணைக்குட்பட்டு தொழுது மன்றாடுவது ஸினீராவின் இறைபக்தியை எடுத்தியம்புகிறது.

ஒரு தாய்க்கு தன் மகளின் திருமணநாள் எத்தனை இனிமையான சம்பவம்? ஸினீரா உட்பட கணவர் அனைவரும் சகோதரரின் கீழ்த்தரமான வேலைகளால் துவண்டிருக்கும் அந்த கொடிய நிகழ்வுகளில் இருந்து மீள்வதற்கு முன், எதிரிகள் எதிர்பார்த்தாற்போல திருமணத்தன்று ஓர் சோகம் நிகழ்கிறது. மணமகளாக மேடையில் அமர்ந்திருக்க வேண்டிய பெண், மயக்கமுற்று வெட்டிப்போட்ட வெற்றிலைக்கொடியாய் துவண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் பெற்றோரின் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும் என்று எண்ணிடுதல் முடியுமா?

இது இப்படியிருக்க மூத்த சகோதரனால் வஞ்சிக்கப்பட்டு வாடும் ஸினீராவும், அவரது கணவரும் இன்னுமொரு பிரச்சனைக்கு முகம் கொடுப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது இன்று குர்ஆனும், ஹதீஸூம், தாடியும், ஜூப்பாவுமாக வலம் வரும் சிலரிடம் நம்பிக்கை காரணமாக கடை ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் போலியாக வேடம் தரித்து இஸ்லாத்தை தவறாக பாவிக்கிற அந்த அக்கிரமக்காரர்களின் மோசடியால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது.

அந்த கட்டத்தில் இளைய சகோதரனிடம் உதவி கோரிய போது, ஷஉன் கணவன் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அல்லாவே பாத்து தண்டனை கொடுத்திட்டான். அதை அனுபவிச்சுத்தானே ஆகணும்? என்ற பதில் ஸனீராவுக்கு சாட்டையடியாய் அமைகிறது.
ஸினீரா குடும்பத்தினருக்கு இமயம் போல் வலிகளைக் கொடுத்து எல்லா தவறுகளையும் புரிந்த, வஸீர் என்றழைக்கப்படும் தன் மூத்த சகோதரர், அவரின் பிள்ளைகளுக்குக் கூட வெறுப்பு என்ற நஞ்சை ஊட்டி வளர்திடுவாரோ என்று ஸினீரா பயப்படுகிறார். பல இன்னல்களைத்தாங்கிய ஸினீராவுக்கும், ஸினீராவை ராட்சசியாக்கும் சகோதரர் வஸீர் காக்கா குடும்பத்தினருக்கும் இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

ஊரிலுள்ள செல்வாக்கை நிலைநிறுத்த சொல்வாக்கு காத்தல் முக்கியமே தவிர அடிதடிகளாலும் பொலிஸ், அரசியல் உதவியோடும் தாம் எதிர்பார்க்கும் மதிப்பை பெற முடியாது என்பதை நன்றாகவே உணர்த்துகிறது இந்த படைப்பு. இங்கு சொன்னவற்றிற்கும் அப்பாற்பட்ட பல விடயங்கள் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் கடமை. இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இந்த அற்புத நாவலை நீங்களும் படித்து பயன்பெற உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!

புத்தகம் கிடைக்குமிடங்கள்

Poobalasingam Book Depot,
202, Sea Street, Colombo - 11.
Phone - 011 2422321, 2435713.

Jeya Book Centre,
91 - 99, Upper Ground Floor,
People’s Park Complex,
Colombo - 11.
Phone - 011 2438227.

Poobalasingam Book Depot,
309 A - 2/3, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2504266, 4515775.

Islamic Book House,
77, Sri Vajiragnana Mawatha,
Colombo - 09.
Phone - 011 2669197, 2684851.

Cordova Book Shop,
226, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2362102, 2361555.

No comments:

Post a Comment