Thursday, March 3, 2011

கருத்துக்கலசம் தொகுதி

கருத்துக்கலசம் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அகில இலங்கை இளங்கோ கழகத்தின் வெளியீட்டில் 103 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது சூசை எட்வேட் அவர்களின் கருத்தக்கலசம் எனும் நூல். இவ்விரண்டு வரிகளில் பல விதமான கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் இத்தொகுதி, அறிவுரைகள் பலதை சொல்லி நிற்கும் நூலாகவும் விளங்குகின்றது. கவிதையாகவும் இதனை நோக்க முடியும். தத்துவார்த்தமான வரிகளாகவும் நோக்கவியலும்.


எதையும் வாசிக்க விரும்பாத விஞ்ஞான உலகில் தான் தேடித்தேடி வாசித்து அவற்றை சின்னஞ்சிறு பூக்களாக தொகுக்க முற்பட்ட மஞ்சரியாகவும், சூசை எட்வேட்டின் அனுபவ நாட்குறிப்புகளாகவும் இத்தொகுதியை வர்ணிக்கிறார் இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பெரிய ஐங்கரன் அவர்கள். அவர் நூலின் பிற்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.


சில இடங்களில் புறநானூறு பளிச்சிடும். சில இடங்களில் கீதாஞ்சலி பளிச்சிடும். சில இடங்களில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பளிச்சிடும். சில இடங்களில் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' பளிச்சிடும். சில இடங்ளில் ரகுநாதனின் 'பஞ்சம் பசியும்' பளிச்சிடும். சில இடங்களில் புதுமைப்பித்தன் வெளிவருவார். சில இடங்களில் காண்டேயர் வெளிவருவார். சில இடங்களில் பாரதியோ, பாரதி தாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் பட்டுக்கோட்டையோ, கண்ணதாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் மகாத்மா காந்தியோ, அன்னை திரேசாவோ வெயிவருவார்கள். சில இடங்களில் விவேகானந்தரோ, விபுலானந்தரோ வெளிவருவார்கள். பல இடங்களில் வள்ளுவரோ, பட்டணத்தாரோ தலை தூக்குவார்கள். உண்மையில் இத்தகைய பெருஞ்சான்றோர்களின் கருத்துக்களை எல்லாம் இருவரிகளில் கருத்துக்கலசமாக தர முயற்சித்திருப்பதே இந்நூலின் சிறப்பு எனலாம்.

புலன்களை கட்டுப்படுத்தினால் சுகமாக வாழலாம் என்ற கருத்து மிகவும் உண்மையானது. அதனை
'புலன்களின் ஏவலனாயிராது காவலனாய் இருப்பார்க்கு
காலடியில் கிடக்கும் துன்பம்' என்கிறார்.

காலங்காலமாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் காணிப்பிரச்சினையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மற்றவர்கள் எப்படிப்போனாலும், பெற்றவர்களையே பொலிஸ் வரைக்கும் இழுத்துச்செல்லும் எத்தனை பிள்ளைகளை சமூகம் தாங்கி நிற்கிறது? அத்தகைய பிரச்சனையை முதலில் ஏற்படுத்தியவனுக்காக பாடப்பட்ட ஈரடி இது.

'நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே
உலகத்தின் முதல் குற்றவாளி'.

நிம்மதியை ஆண்கள் வீட்டிலல்லாது வெளியில் தேடுகின்ற காலம் இன்று நேற்று தோன்றியதல்ல. ஆனால் ஒழுக்கமில்லாத அந்தப்பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வோர் ஏராளம். நூற்றுக்கு ஒரு வீதத்தினர் மட்டுமே கற்பு நெறியைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அதைக்கீழுள்ளவாறு குறிப்பிடடுள்ளார்.

'விரும்பாவிடினும் சேர்ந்தே வாழ்ந்து தொலைப்பதற்கு
பெயர் கற்பு நெறி'.

எந்விதமான வேண்டுதல்களும் நிறைவேறவில்லை என்று இறைவனை குறை சொல்பவர்கள் பலர். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்தவர்கள் சொற்ப தொகையினரே. அதை அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'நிறைவோடு இறையை இறைஞ்சாத குறையே
முறையீடு நிறைவேறாக் காரணம்'.

குடும்ப வாழ்வில் ஏற்படும் சிறிய சண்டைகள் சகஜம். அதை யாரும் மிகப்பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெண் என்பவள் மெண்மையானவள். அவளை அன்பால் அடக்கி ஆளத்தெரியாத கணவன் கையாலாகாதவன். அடிபணிந்து கணவனை தன்வழிக்கு கொண்டு வர முடியாத பெண் முட்டாள். ஆகவே குடும்பவாழ்வுக்கு தகுதியற்ற இவர்களால் தான் குடும்பச்சண்டையில் வெற்றி பெற முடியுமாக இருக்கும். அப்படியில்லாமல் குழந்தையாக மனைவியைப் பார்த்தால் இல்வாழ்வில் இன்பமே ஆறாக ஓடும். இதனை சூசை எட்வேட் அவர்கள் இப்படி எடுத்தியம்புகிறார்.

'மனைவியின் கடுகடுப்பு புறுபுறுப்பை குழந்தையின்
குறும்பாகவே நோக்குவார் அறிவாளர்'.

உழைப்பதையெல்லாம் மனைவிக்கு கொடுத்தால் அன்பு பெருகும் என்று கணவனும், கற்போடு வாழ்வது தான் கணவனுக்கு செய்கின்ற கைமாறு என்று மனைவியும் எண்ணினால் அது மணவாழ்க்கைக்கு மணம் சேர்க்காது. உழைப்பையும், கற்பையும் தவிர அன்பும், பாசமும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்க வேண்டும். இன்னும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வை நிலைநாட்டிக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். தன் குடும்பத்தினரையும், துணையின் குடும்பத்தினரையும் சமமாக மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் விடயத்தில் இருவரும் சமபங்கு அக்கறை காட்ட வேண்டும். அப்படியில்லாமல் கற்பும் உழைப்பும் மட்டும் போதுமா என்ற கேள்விகளை பின்வருமாறு கேட்டு நிற்கிறார் நூலாசிரியரான சூசை எட்வேட் அவர்கள்.

'கணவனை மகிழ்ச்சிப்படுத்த மனைவியின்
கற்பு மட்டும் போதுமா'

'மனைவியை மகிழ்ச்சியாய் வாழ வைக்க கணவனின்
உழைப்பு மட்டும் போதுமா'

காதல் என்பது புனிதமான ஒரு உறவு. கலியுகத்தில் எல்லாமே தலைகீழாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கண்டதும் காதல் என்று ஓடி, இறுதியில் கல்யாணமின்றியே காதல் உடைந்து சின்னாபின்னமாவது கண்கூடு. பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் எல்லாம் துச்சமென ம(மி)தித்து விட்டுச்செல்லும் காதலர்கள், இறுதியில் கஞ்சிக்கும் வழியில்லாது பாடுபடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பெண்ணின் நிலை தான் கவலைக்கிடமாக மாறுகிறது. ஆசைவார்த்தை காட்டி அழைத்துச்சென்றவன் பாதியிலேயே காணாமல் போக, கைக்குழந்தையுடன் அல்லாடுகிறாள் பெண். இதை காதல் என்று சொல்ல முடியாது. புரிந்துணர்வின்றி கண்களால் ஆரம்பிக்கும் காதலின் இறுதிநிலையை இவ்வாறு வலியுறுத்தி நிற்கின்றன.

'கண்களால் ஆரம்பிக்கும் காதல் ஆண்
பெண் குறிகளால் முடிவுறும்'.

ஏழையாய் பிறத்தல் பாவம் என்று பலர் சொன்னாலும் அது சாபமல்ல. இயலாதவனிடம் இறுமாப்பு இருக்காது. சொத்து சுகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தேவையிருக்காது. ஆனால் பணக்காரர்களுக்கு நிம்மதியிருக்காது. அழகிய கனவு காண உறக்கமிருக்காது. பணக்காரன் சதாவும் தனது செல்வங்களை பாதுகாப்பது எவ்வாறு என்ற யோசனையிலேலே மூளை பிசகிப்போவான். ஆனால் எளிமையானவனோ எக்காலத்திலும் அன்றாட உழைப்பால் உண்டு, குடித்து நிம்மதியாயிருப்பான். இதனை கீழுள்ள வரிகள் நிதர்சனமாக்குகிறது.

'உள்ளவனுக்கு உள்ளதாலுள்ள கவலை தெரிந்தால்
இல்லாதவன் கவலை கொள்ளான்'.

கற்ற கல்வியை கசடறக்கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனால் அந்தக்கல்வியை தினசரி கற்றாலும் தேவையான போது நினைவுக்கு வருவதே பயனாகும். இந்த கருத்து கீழுள்ளவாறு கையசைத்துக்காட்டுகிறது.

'தினசரி கற்றாலும் தேவையேற்படும்போது நமது
நினைவுக்கு வருவதே அறிவு'.

பெண்களின் ஆழ்மனதில் உள்ளவற்றை எந்த அறிவாளிகளாலும் கண்டு பிடிக்க முடியாது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும். மனசைத்திறந்து எதுவும் சொல்லாத பேசாமடந்தை பெண். அவள் பேசினால் எத்தகைய மாற்றம் வரும் என்று இந்த வரிகளால் கோடிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

'மனந்திறந்து பெண்ணொருத்தி பேசினால் அதுவே உலகின்
தலை சிறந்த நாவலாக இருக்கும்'.

நமது ஒவ்வொரு நாளும் நமக்கொரு பாடத்தை கற்றுத்தருகிறது. உலகத்தில் வாழ்ந்து முடியும் வரைக்கும் அது குறைவின்றி நடக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் உண்மை. அதை

'எதைத் தராவிடினும் உலகம் சாகுமட்டும்
பாடம் தந்துகொண்டே இருக்கும்' என்கிறார்.

இளமையில் எல்லாவிதமான கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடும் மனிதன், இறுதிக்காலத்தில் பக்தியாக வாழ எத்தனித்து கோவில், குளம், பள்ளிவாசல் என்று சுற்றித்திரிவது விந்தையானது. ஆனால் அதற்கான உண்மைக்காரணத்தை அறிகையில் அவ்வாறு பாவமன்னிப்பு தேடாமல் இருப்பதும் ஆபத்தானது என்பது புலப்படுகிறது.

'முதுமை நோய் மரணம் இருப்பதாலேயே
தீமை புரிவோர் திருந்த முயல்கிறார்'.

இவ்வாறான பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதாக கருத்துக்கலசம் வெளிவந்திருக்கிறது. இலக்கியத்துறையில் ஈடுபாடு உடையவர்களுக்கு இந்தப்புத்தகமும் ஒரு புதுவித அனுபவமாக அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. படைப்பாளி சூசை எட்வேட் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

பெயர் - கருத்துக்கலசம்
நூலாசிரியர் - சூசை எட்வேட்
முகவரி – 1004, அன்புவழிபுரம், திருக்கோணமலை.
தொலைபேசி – 026 - 3268838
வெளியீடு – அகில இலங்கை இளங்கோ கழகம்
விலை - 200/=

No comments:

Post a Comment