Thursday, July 28, 2011

முதிசம் - பொன் மொழித் தொகுப்பு

முதிசம் பொன் மொழித் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு

மனிதர்கள் யாவரும் நல்லவர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள். தம்மை யாரும் குறை கூறுவதை விரும்பாத மனிதன், பிறரை குறை சொல்வது, தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று காட்டுவதற்காகவே. அப்படிப்பட்ட மனிதனை நல்வழிப்படுத்த அடிக்கடி அவர்களுக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை இலகுவாக செயல்படுத்தக் கூடியதொரு வழியாக பொன்மொழிகள் காணப்படுகின்றன.

வாசிப்பு அரிதாகிவிட்ட இந்த காலத்தில் கணினிகளே அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இது பாடசாலைகளில் மாத்திரமன்றி அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் பெரியதொரு பிரச்சனையாக இருக்கிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என்ற வாசகம் மாறி கணனியறிவே மனிதனை பூரணமாக்கும் என்ற நிலை வந்துவிட்டது. அதை இனிமேல் யாராலும் மாற்ற முடியும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இன்று இலக்கிய கூட்டங்களிலும் அடிக்கடி சொல்லப்படும் விடயம் இதுதான். இப்படியிருக்க பெரியபெரிய கட்டுரைகளை மனிதர்கள் வாசிப்பார்களா, அப்படிப் பட்டவர்களுக்காய் முத்தான கருத்துக்களை தொகுத்து புத்தமாக்கித் தந்திருக்கின்றார் கலைப்பட்டதாரி ஆசிரியையான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள்.



இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதியையும்இ இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருக்கின்றமை நாமறிந்த விடயமே. முதிசம் என்ற இந்த புத்தகம் 230 பக்கங்களில் இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. 2527 பொன்மொழிகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பலநாட்டவர்கள் கூறிய பல்வேறு பொன்மொழிகளைத் தொகுத்து மக்களின் அறிவு மேம்பாட்டுக்காகவும், அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பொன்மொழிகள் அமைந்திருக்கின்றன. பழமொழிகளும், பொன்மொழிகளும் பல விடயங்களை மக்கள் மனதில் பதித்துவிடும். சிறுகதைகளோ, நாவல்களோ பழமொழிகளையும் உள்ளடக்கியதாக எழுதப்படுவதுண்டு. அதேபோல சில சிந்தனைத்துளிகளும் சேர்க்கப்படுகின்றது. காரணம் பந்தி பந்தியாக வாசித்தும் விளங்க முடியாத சில விடயங்களை ஓரிருவரி மூலம் விளங்கிவிடலாம் என்பதால்தான்.

பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சுகள் போன்றவை. சிலவற்றை பிடித்துக்கொள்கிறோம் பல பறந்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர். மேலும் சாதாரண மக்களும், அறிஞரும் தமது அனுபவத்தில் கண்டவற்றை சாதாரண சொற்களில் கூறிய உண்மைகளே பொன்மொழிகள் என்றுகூறும் இவர் பொன்மொழிகள் சுகம் தரும் எச்சரிக்கைகள் என்கிறார்.

தொடர்ந்து நேரத்தின் பெறுமதியை சில பொன்மொழிகளினூடு விளக்கியிருக்கிறார். நேரம் தங்கம் என்பார்கள். அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அதை என்னென்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை இவ்வாறு கூறுகிறார் ஸக்கியா ஸித்தீக் அவர்கள்

உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது வெற்றியின் ஊற்று. சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் கண். விளையாட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம். படிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில். அன்புகாட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் நன்கொடை. சேவை செய்ய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது வாழ்வின் குறிக்கோள். சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இதயத்தின் பிரகாசம். இறை வணக்கத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஈருலக பாக்கியத்துக்கு வழி என்கிறார்.

நட்பைப் பற்றி பல பொன்மொழிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. நட்பு என்பது நட்சத்திரம் போல வாழ்வுக்கு பிரகாசம் தரவல்லது என்றாலும் தற்காலத்தில் அவ்வாறான உண்மை நட்பை nறுவோர் மிகவும் அரிது. சுயநலத்தக்காக மாத்திரமே தொடுக்கப்படுகின்ற நட்பின் கைகள் சில காலங்களிலேயே வலுவிழந்துபோவது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் பார்த்து பழகும் நட்பு குணம் பார்த்து பழகாது. குணம் பார்த்து பழகும் நட்பு பணமின்றேல் நிலைக்காது. இதுதான் பெரும்பாலும் உண்மை. சிறு தவறுகள் கூட நட்புக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். களங்கம் ஏற்பட்ட நட்பு காலம் முழுவதும் கவலையைத் தரும் என்கிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் துயரத்தை பாதியாக்குவார்கள்.

இன்று தற்கொலை என்பது சர்வசாதாரணமாக போய்விட்டது. முன்பெல்லாம் கொலை தற்கொலை என்ற வசனங்களைக் கேட்டாலே அடிவயிறு கலங்கும். இன்று அவையெல்லாம் அடிக்கடி கேட்டும், வாசித்தும் பழகிவிட்ட சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்கொலைகளுக்கான காரணத்தை விசாரித்துப் பார்த்தால் அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். ஏனெனில் காதலில் தோல்வி, பரீட்சையில் தோல்வி, அம்மா அடித்தார்கள், அப்பா ஏசினார் என்ற அற்ப காரணங்களுக்காக இவை அன்றாடம் நிகழ்கின்றன. அண்மையில் மலையகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவிகளின் தற்கொலை எத்தனைப் பேரின் மனசை உலுக்கியது. இவ்வாறானவர்களுக்கு கட்டாயம் முதிசம் என்ற புத்தகத்தை வாசிக்கக் கொடுக்க வேண்டும். அதிலுள்ள சில பொன்மொழிகள்..

'தோல்வி என்றால் எதையும் சாதிக்கவில்லை என்பது பொருளல்ல. எதையோ
கற்றுக்கொண்டோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.'

'தோல்வி என்றால் தோற்றவர் என்று பொருளல்ல. இன்னும் வெற்றி பெறவில்லை
என்றே பொருளாகும்.'

தவறுகளை செய்தவர்கள், தான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று கூறி தப்பித்துவிடுவார்கள். அதை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் ஸக்கியா.

வாழ்க்கையில் வெற்றிபெற இலட்சியமும், விடா முயற்சியும் முக்கியம். சிலர் இன்னும் எனது இலட்சியம் கைகூடவில்லை என்று வாழ்க்கையை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ முயற்சியே செய்யாமல் வெற்றி பெறவில்லை என்று மூலையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற என்னென்ன வேண்டும்? கீழுள்ளவைதான் என்கிறார் ஆசிரியர்.

'உறுதியான குறிக்கோள், விடாமுயற்சி, தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியா உழைப்பு,
நேர்மையான பாதை. இவை ஒருங்கிணைந்தால் வெற்றி கிட்டாமல் போகாது'

காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கு மத்தியில் அன்பு பெருக்கெடுப்பது உண்மை. எனினும் காதலிக்கும் போதிருந்த மனநிலை, சுதந்திரம் போன்றவை கல்யாணத்துக்கு பின்பு சற்று விலகிக்கொள்வதும் கண்கூடு. அதிலும் பிள்ளைகள் என்று பிறந்துவிட்டால் இன்னும் திண்டாட்டம்தான். மனைவி தன்னைக் கவனிப்பதில்லை என்று கணவன் எண்ணுகிறான். அது தவறு. காரணம் அங்கே குழந்தைக்காகவும் அன்பு பரிமாறப்படுகிறது. குழந்தை அவர்களுக்கு
உறுதுணையாகிறது. சொல்லவந்த விடயம் என்னவென்றால் குடும்ப வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும் என்பதுதான். அதற்கான பழமொழி இதோ

'இல்லறத்தில் இன்பத்தை மாத்திரம் எதிர்பாராதே. உயர்ந்த மலையில் அடர்ந்த
முட்புதர்களும் குளிர்ந்த நீர்ச்சுனைகளும் இருக்கத்தான் செய்யும்.'

உலகத்தில் ஈடு இணை இல்லாத செல்வம் குழந்தை செல்வமே. ஒரு பெண்ணின் பூரணத் தன்மை தாய்மையடைவதிலேயே தங்கியிருக்கிறது என்பார்கள். திருமணமுடித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் படும்பாட்டை எப்படி கூறுவது? யாருக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால் குழந்தைகளை பெற்றெடுப்பது மாத்திரம் பெற்றோரின் வேலையில்லை. அவர்களை பார்போற்றும் மனிதர்களாக்குவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் முன்னிலையின் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பெரியவர்களைவிட குழந்தைகள் எல்லாவற்றையும் நுணுக்கமாக கிரகித்துவிடுவார்கள். வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு குழந்தைகளை நாம் மட்டந்தட்டிப் பேசக்கூடாது. அது அவர்களை தாழ்வுச்சிக்கலுக்குள் அமிழ்த்திவிடும். மாறாக அவர்களை தைரியப்படுத்தி வளர்க்க வேண்டும். அவர்கள் செய்கின்ற சின்ன சின்ன நல்ல விடயங்களுக்கும் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டும். பரிசில்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தையை தூக்கி வைத்திருக்கும்போது கை வலித்தாலும், அதை இறக்கிவிடும்போது மனசு ப்பதுண்டு. 'பெத்தவர்கள்' என்பதற்காய் பெற்றோர் என்று சொல்லப்படுவதில்லை. இறைவனிடமிருந்து செல்வமாக குழந்தையை 'பெற்றவர்கள்' என்பதால்தான் அவர்கள் பெற்றோர் ஆகிறார்கள். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!

நூலின் பெயர் - முதிசம் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 275/=

No comments:

Post a Comment