Tuesday, October 18, 2011

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.

பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.

இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.

வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.

அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா.

அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.

அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.

காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.

அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?

தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.

மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)
ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்
முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.
தொலைபேசி - 035 2246494
விலை - 200 ரூபாய்

No comments:

Post a Comment