Tuesday, February 28, 2012

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.



இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.

'எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்'

இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.

இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ - மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.

வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.

அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.

இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - குள்ளன் (சிறுவர் கதை)
நூலாசரியர் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்
முகவரி - 460ஃ16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.
தொலைபேசி - 0773 706374
விலை - 100 ரூபாய்

No comments:

Post a Comment