Tuesday, February 28, 2012

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.

வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.

அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.

இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.

வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.

அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.

இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.

நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.

பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.

'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'

எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.

இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)
நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
வெளியீடு - சேமமடு பதிப்பகம்
தொலைபேசி - 011 4902406, 0718 676482
விலை - 280 ரூபாய்

No comments:

Post a Comment